Sunday 30 March, 2008

நாகூர் கந்தூரி



கைலிக் கடைகளின்
‘கட்-அவுட்’ திருவிழா..!

‘காதல் தேசம்’
‘காதல் கோட்டை’
புடவைகள் பெயர்கள்..!
பூரிப்பில் பெண்கள்…!
பாரின் சாமான்கள்
மோகத்தில் ஆண்கள்..!

ஹோட்டல் எங்கும்
விடாது ஒலிக்கும்
சட்டுவ சங்கீதம்
முட்டை புறாட்டா மணம்
மூக்கின் நுனியில்..!

கடலில் ஓடும்
கப்பல்கள்
தெருவில் ஓடும்
ஊர்வல விந்தை..!

வெடிகள் போட்டு
கொடிகள் ஏறும்
விமரிசையாக..!
நாகூர் கந்தூரி -

இங்கு
இரவிலும் சூரியன்..!

மொழிகளை எல்லாம்
இரண்டறக் கலந்து
செவிட்டில் அறையும்
கேஸட் அலறல்கள்…!

‘மேட்-இன்’
செவ்வாய்க்கிரகம்
என்றும்
முத்திரை குத்தும்
வித்தைக்காரர்கள்..!

தர்ஹா உள்ளே
காணிக்கை எல்லாம்
உண்டியல் போட
கட்டளைக் குரல்கள்..!

பாதைகள் மறித்து
பாத்திஹா கடைகள்
தாயத்து டிசைன்கள்
விற்பனை அங்கு-
மொத்தமாகவும்
சில்லறையாகவும்..!

பால்டின் தகரத்தில்
சிற்ப வேலைகள்..!
அதை
வெள்ளியாய் மாற்றும்
ரசவாதக் கலைகள்..!

கஜல்கள் கவாலிகள்
நாட்டியத்தோடு
களி நடம் புரியும்
இளைஞர் கூட்டம்..!

கமிஷன் போக
மிச்சப் பணத்தில்
கரும் புகையோடு
வாண வேடிக்கை
கோலாகலங்கள்..!

பீர்சாபு எறியும்
எழுமிச்சைப் பழங்களில்
பிள்ளைவரத்தை
தேடும் பெண்கள்..!

சந்தனக் கூட்டில்
பூக்களை வீசிப்
பரவசப்படும்
பக்த கோடிகள்..!

‘ஐயா..தருமம்..!’
என்ற
அபஸவரத்தோடு
ஊரே நிறைந்த
பிச்சைக்காரர்கள்..
அவர்களுக்கு
சுகத்தைக் கொடுக்கும்
சோத்துச் சீட்டுக்கள்..!

இன்னும்
தொண்டற் படைகள்
உண்டியலோடு..!

இகபர உலகில்
நன்மைகள் வேண்டி
இரண்டே ரூபாயில்
ஆண்டவர் தரிசனம்..!

இந்த ஆராவரங்களின் மத்தியில் கூட -
அந்த -
மகானை -
நினைத்தும் - துதித்தும்
சில
மனித மனங்கள்…


- கவிஞர் Z. ஜபருல்லா

0 comments:

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP