Tuesday, 9 December 2008

பாகிஸ்தான் பாரதி



Thursday April 3, 2008
அப்துல் கையூம்


“இன்று என்பதைப் இறுக்கிப் பிடித்துக் கொள். ஏனெனில் நாளை என்பது விதியின் கைப்பிடிக்குள்” - அல்லாமா இக்பால்


இவ்வாரம் இக்பாலைப் பற்றி எழுதப் போகிறேன் என்று என் நண்பரிடம் தெரிவித்தேன். மின்னல் வேகத்தில் அவர் முகத்தில் ஒரு அதிருப்தி ரேகை. அவர் வீசியதோ ஒருவிதமான ‘குறுகுறு’ பார்வை. தேசத்துரோகம் ஏதாவது புரிகின்றோமோ என்ற ஐயம் எனக்குள்.


இக்பால் எனும் இலக்கியவாதியை நான் காதலிக்கத் தொடங்கி ஆண்டுகள் பலவாகி விட்டன. அப்போது எனக்கு 12 வயது. இக்பாலை எனக்கு அறிய வைத்தது எங்கள் பிறைப்பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் அவுரங்கசேப் கான். முன்பு பட்டாளத்தில் பணி புரிந்தவர். பள்ளி ஆண்டு விழாவின்போது நானும் என் இரண்டு நண்பர்களும் அந்தப் பாடலை பாடவேண்டும்.


“சாரே ஜஹான் சே அச்சாஹ், ஹிந்துஸிதான் ஹமாரா
ஹம் புல்புல்ஹேன் இஸ்கி, ஏ குல்ஸிதான் ஹமாரா”


உரக்கப் பாடினோம். உச்ச ஸ்தாயியில் பாடினோம். அனுபவித்துப் பாடினோம். அர்த்தமே புரியாமல் பாடினோம். பாடலைக் கேட்டவர்கள் பரவசமானார்கள். பலத்த கைத்தட்டல் வழங்கினார்கள்.


அம்மொழியும், வார்த்தையும், இசையும், ராகமும், இதமான ஏற்ற இறக்கமும் என்னை என்னவோ செய்தது. உள்ளே யாரோ சம்மணங் கொட்டி அமர்ந்து சம்மட்டியால் அடித்ததைப் போல் ஓர் உணர்வு. தேனீக்களை விரட்டிய பின் தேன்கூட்டை கசக்கிப் பிழிவார்களே அதுபோல என் உள்ளத்தை யாரோ கசக்கிப் பிழிந்தார்கள்.


இந்தியாவின் பெருமையை எடுத்துரைத்து, இந்தியன் என்ற உணர்வை ஏற்படுத்தியது அவனது “தரானே-ஹிந்த்” பாடல். 1904-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16-ஆம் தேதியன்று ‘இத்திஹாத்’ (பொருள் = ஒற்றுமை) என்ற வார இதழில் அப்பாடல் முதன் முதலில் வெளிவந்தது.


1947, ஆகஸ்ட் 15 – ஆம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்ததை பிரகடனம் செய்ய திருமதி. சுஸேதா கிருபாளினி மற்றும் டாக்டர். சுசீலா நய்யார் குரலெடுத்துப் பாடிய சுதந்திர இந்தியாவின் முதல் தேசிய கீதமும் இதுதான்
அந்த அமர கீதத்தின் சாராம்சம் :


“பரந்து விரிந்த பாருக்குள்ளே
பன்மடங்கு சிறந்தது இந்துஸ்தானம்!
இந்திய நந்தவனத்து புல்புல்கள்
நாங்கள் இசைக்கும் இனியகானம் !


ஏனோ என்னை அறியாமலேயே இக்பாலின் மேல் ஒரு மோகம். ஏற்பட்டது ஓர் இலக்கியத் தாகம். அதற்கு காரணம் அவன் வார்த்தை பிரயோகம். அதை அவன் கையாளும் லாவகம். அதன் பக்குவம். தெள்ளிய ஓடையிலிருந்து நீரை அள்ளி பருகுவது போல் இன்பம் பயக்கும்.


இக்பால் - அவன் பால் காதல் கொண்டது நான் மட்டுமா? ஒரு தேசமே அவனுக்காக காதலர் தினம் கொண்டாடுகிறது. அதற்கு ‘இக்பால் தினம்’ என்று பெயர். நவம்பர் 9 - அங்கே அது அரசாங்க விடுமுறையும் கூட. அவர்களுக்கு எல்லாமே ‘அல்லாமா’தான். அவன் நினைப்பால். அவன் கவிதையின் ஈர்ப்பால், அதன் பொருட்பால் தந்த திளைப்பால் மூழ்கியவர்கள் ஏராளம் ஏராளம். மூச்சுக்கு மூச்சு இக்பால். பேச்சுக்கு பேச்சு இக்பால். அங்கே - காந்தியும் அவனே; காளிதாசனும் அவனே.


அவன் அவனுக்காக பேசியதை விட மற்றவர்களுக்காக பேசியதே அதிகம். மனங்களுக்கு மருத்துவம் பார்த்தே மருத்துவனானவன். வழக்குரைஞன் அவன். வழக்கில் வாதித்ததை விட வளமிக்க கவிதைகளால் வாதம் புரிந்ததுதான் அதிகம்.


வாதிட்டதெல்லாமே மனித இனத்தின் வளம்வேண்டிதான். வாதிக்கும், பிரதிவாதிக்கும் சேர்த்தே வழக்குகள் தொடுத்தான். தீர்ப்பும் அவனே வழங்கினான்.


“பாட்டும் நானே! பாவமும் நானே!” என்ற பாடல் வரிகளைப்போல “கேள்வியும் நானே! பதிலும் நானே!” என்ற ரீதியில் பாடல்ளைத் தந்தவன். . “ஷிக்வா” அவனது கேள்விக் கணை. “ஜவாபே ஷிக்வா” அவனது பதில் மழை.
முறையீடுகள் பெரும்பாலும் இறைவனை நோக்கித்தான் இருந்தன. எப்படித்தான் அவனுக்கு அந்த தைரியம் பிறந்ததோ? இறைவனிடமே கேள்விகள் கேட்டான். கேள்விகள் கேட்பது கடினமல்லவே? யார் வேண்டுமானாலும் கேட்கலாம். எச்.ஜி. ரசூல் கேட்கவில்லையா? அதற்கு தீர்வு காண்பதென்பது எளிதான ஒன்றா? இக்பால் அங்கேதான் உயர்ந்து நிற்கின்றான்.


‘புல்புல்’ பறவையை அவன்தான் எனக்கு அறிமுகம் செய்து வைத்தான். அவனது உள்ளமும் அவன் வளர்ந்து திரிந்த இமாலயப் பிரதேச பனிபோன்று வெள்ளையாகவே இருந்தது.


ஆச்சரியமாக இருந்தது எனக்கு. பரிவு, பச்சாதாபம், இரக்கம், கருணை, மனித நேயம் இவை அத்தனையும் ஒருபிடி இதயத்திற்குள் அடங்க முடியுமா என்ன? கூட்டுக் குடும்பமாய் இவனுக்குள் குடியிருந்ததே?


இக்பால் ஒரு புரட்சியாளனா?, தத்துவவாதியா?, சூஃபியா?, என்னால் கணிக்க முடியவில்லை. எழுத்தாளனுக்கே உரிய போராட்டக் குணம் அவனுள் பொதிந்திருந்தது; ஞானிக்கே உரிய சூஃபித்துவம் அவனுள் உறைந்திருந்தது; அறிவாளிக்கே உரிய தத்துவார்த்த சிந்தனைகள் அவனிடம் நிறைந்திருந்தது.
ஒருவன் தன் ஆளுமையின் மனோபலத்தினால் இவ்வுலகையே அடிபணிய வைக்க முடியும் என்பது இக்பாலின் சித்தாந்தம். சுய அறிவும் சுய சிந்தனையும்தான் ஒருவனை முழுமனிதானக மாற்றுகின்றது என்பது அவனது கோட்பாடு. அவனது முற்போக்கு சிந்தனை நம் சிந்தனைக்குணவு தரவல்லது.


“இறைவனுக்கும் மனிதனுக்குமிடையே ஒரு விவாதம்” இது இக்பாலின் படைப்புகளில் ஒன்று.


அவனே அவன் கவிதையில் குறிப்பிடுவதைப் போல் ‘எந்த முடிவுக்கு முடிவே இல்லையோ அந்த முடிவின் முந்தானையை பிடித்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்’ என்கிறான். (ஒரு தேவதையும் ஒரு கவிஞனும்). அவன் சூசகமாக கூறும் ‘முடிவே இல்லாத முடிவு’ இறைவன்தான் என்பதை நம்மால் எளிதில் புரிந்துக் கொள்ள முடிகிறது.


அவனது “மனிதன்” “தனிமை” “பனித்துளியும் தாரகையும்” போன்ற கவிதைகள் வாழிவியலின் முரண்பாடுகளை காரசாரமாக வாதிக்கின்றன.


மற்ற இஸ்லாமியக் கவிஞர்களிடமிருந்து மாறுபட்டவன் இவன். இறைவனுடன் நேர்முக விவாதத்தில் ஈடுபடுவதாக தன்னைத் தானே கற்பனைச் செய்துக் கொள்கிறான்.


இக்பால் கையாண்டிருக்கும் சில கருத்துக்கள் மார்க்க சர்ச்சைகளை கிளப்புவது போலிருக்கும். சில நேரங்களில் அவன் தான் சார்ந்திருக்கும் மதக் கோட்பாடுகளிலிருந்து தடம் மாறிச் செல்கின்றானோ என்ற சந்தேகத்தை உண்டாக்கும்.


சுவனத்திலிருந்து ஆதம் வெளியேற்றப்பட்டது யாருக்கு நஷ்டம் என வினா எழுப்புகிறான். நஷ்டம் இறைவனுக்கா அல்லது ஆதமுக்கேவா? என்ற விவாதத்தை முன் வைக்கிறான். ஆதத்தை வைத்து அவன் பரிட்சித்து பார்த்ததை எப்படி எடுத்துக் கொள்வதென்பது அவனுடைய கேள்வி.
தூதர்கள் மூலம் பேசுவதைத் தவிர்த்து தன்னுடன் நேருக்கு நேர் பேச இறைவனுக்கே சவால் விடுக்கின்றான்.


மனிதனின் எல்லையிலா ஆசைகளையும், அவனுக்கு அருளப்பட்டிருக்கும் வெகு குறைவான வளங்களையும் ஐஸ்வர்யங்களையும் ஒப்பிட்டு, இது போதுமா? என்ற ரீதியில் கேள்விகள் தொடுக்கின்றான்.


உரிமையுள்ளவர்களிடம்தான் பிடிவாதம் செய்ய முடியும்; முறண்டு பிடிக்க முடியும்; வேண்டியதை கேட்டு பெற முடியும். இக்பால் இறைவனிடம் கேள்வி கேட்பதை இப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.


இக்பாலை இஸ்லாமிய கோட்பாடுகளிலிருந்து விலகிச் செல்பவன் அல்ல என்பது திறானாய்வார்களின் கருத்து. இக்பாலின் கவிதைகளை புரிந்துக் கொள்ள வேண்டுமெனில் முதலில் இக்பாலை புரிந்துக் கொள்ளுதல் அவசியம்.


இக்பாலின் ஒரு சில கவிதை படைப்புகளில் கவிதைக்கரு நாடக வடிவில் அமைந்திருக்கும். அதன் நடையும், போக்கும், இடையிடையே வாசகர்களின் எதிர்பார்ப்பை தூண்டுவதாக இருக்கும். ஒரு சுவையான பூவணிக் கோலத்தின் இழை ஓடிக் கொண்டிருக்கும். நடுநடுவே இறுதி முடிச்சை அவிழ்க்கக்கூடிய சில சமிக்ஞைகள் கோடிட்டுக் காட்டப்படும். அதில் விவாதங்கள் எழும். கற்பனைக் காட்சியில் அவனே ஒரு வியூகத்தை அமைப்பான். விடுவிக்க முடியாத புதிர் போன்று தென்படும். இறுதியில் அவனே அந்த முடிச்சை இலகுவாய் அவிழ்த்து வைப்பான். தீர்வும், நற்செய்தியும் பொதிந்திருக்கும். முடிவில் அவனது தனிப்பட்ட முத்திரை முத்தாய்ப்பாக பதிந்திருக்கும்.
இதற்கு இரண்டு மிகச் சிறந்த உதாரணங்களாக “கவிஞனும் ராத்திரியும்” “கவிஞனும் சுவனக் கன்னிகையும்” இவையிரண்டையும் சொல்லலாம்.
இக்பாலுக்கு பிடித்தமான சில பிரத்யேக படிமங்களும் கலைக் கருத்தும் நம்மை ஈர்க்கின்றன. அவனுக்கு பிடித்தமான மலர் “துலிப்”. பிடித்தமான பறவை எது தெரியுமா? பருந்து. ஆம்! பார்ப்பதற்கே பயமாக இருக்குமே அந்தப் பறவைதான். அவனுக்கு அன்னியோன்யமாக இருப்பது நமக்கு அந்நியமாக இருக்கிறது.


அன்னப்பறவையோடும், குயிலோடும், மயிலோடும், கவிதையில் உறவாடி பழக்கப்பட்ட நமக்கு பருந்தின் நட்பு விநோதமாகப் படுவது இயற்கைதானே?
விளக்குகளை சுற்றிவரும் விட்டில் பூச்சிகளை விட சிறந்தது மின்மினிப்பூச்சிகளே என்கிறான் இவன். அதற்கு இவன் கூறும் காரணம் வித்தியாசமாக இருக்கிறது. மின்மினிப்பூச்சிகள் படபடத்துப் பறக்கையில் விளக்குகள் எரிவது போலிருக்கும். அந்த சிறு வெளிச்சம் இவனை கவர்ந்திழுக்கிறது. அந்த ஆளுமை (Possessiveness) கவிஞனை உற்சாகப் படுத்துகிறது. தனக்குத்தானே மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் -– அந்த தன்னாற்றல்; தன்னிறைவு; தன்னம்பிக்கை, தன்முயற்சி – இவற்றை வியந்து போற்றுகிறான் இக்பால்.


ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மனிதன் ஒளிந்திருக்கிறான் என்பது இக்பால் கண்டறிந்த உண்மை. அதனை அவரவர் வசதிக்கேற்ப அழைப்பதுண்டு. “தான்” என்றோ “ஆளுமை” என்றோ “மனத்திடன்” என்றோ எப்படி வேண்டுமானாலும் அதனை அழைத்துக் கொள்ளாலாம். அந்த மகாபலம் பொருந்திய ஆளுமையின் சக்தியை ஒன்று கூட்டி, ஒருங்கே சமைத்து; இந்த உலகத்தையே அடிபணிய வைக்க முடியுமென்பது இக்பாலின் தத்துவம். அவன் சூஃபியாகத் தோற்றமளிப்பது இது போன்ற சிந்தனைகளால்தான்.
உளத்திண்மைக்கு முன்பாக உலகத்திலே எந்த வித சக்தியும் தாக்கு பிடிக்க முடியாது என்று உறுதிபட கூறுகிறான் அவன். அந்த மனப் பக்குவத்தை எட்டுவதற்கு மனிதன் பல கட்டங்களை தாண்ட வேண்டியிருக்கும்; பல தடைகளை சந்திக்க நேரிடும்; பல சோதனைகளை சமாளிக்க வேண்டும்.
பாரதியை இந்தியாவின் இக்பால் என்றும், இக்பாலை பாகிஸ்தானின் பாரதி என்றும் கூட மாற்றி மொழியலாமோ?


ஓ.. தாராளமாக.. .. அவனும் இவனும் வேறல்ல.
பாரதி - “மஹாகவி” என்று பண்புடன் அழைக்கப்படுவதைப் போலவே. இக்பால் - “அல்லாமா” என்று அன்புடன் அழைக்கப்படுகிறான். “அல்லாமா” என்றால் அறிவு நிரம்பியவன் என்று பொருள்.


“பாட்டுக்கோர் புலவன்”, “கவிராஜன்” என்ற அடைமொழியைப் போன்றே இக்பாலுக்கும் (Shair-e-Mashriq) கிழக்கு தேசத்துக் கவிஞன் , (Hakeem-ul-Ummat) சமுதாயச் சாது என்ற சிறப்புப் பெயர்கள் இருக்கின்றன.


இவன் பராசக்தியை தேடி அலைந்தான். அவன் மகாசக்தியை தேடி அலைந்தான்.


ஒருவன் வெள்ளிப்பனிமலையின் மீதுலாவித் தேடினான். மற்றவன் திக்குத் தெரியாத காட்டில் தேடித் தேடி அலைந்தான்.


பாரதி, சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என்று சூளுரைத்தான். இக்பாலோ பாராசீக மொழியில் பாட்டெழுதி அண்டை தேசத்துக்கு மானசீக பாலம் அமைத்தான்.


“சாரே ஜஹான்ஸே அச்சாஹ்
இந்துஸிதான் ஹமாரா” - இது இக்பாலின் கண்ணம்மா பாட்டு.

“பாருக்குள்ளே நல்ல நாடு – எங்கள்
பாரத நாடு” - இது பாரதியின் ‘ஷிக்வா’.


இரண்டுக்குமே அர்த்தம் ஒன்றுதான்.
இருவருமே விடுதலை வேட்கையில் கருத்தரித்த அக்னி குஞ்சுகள். ஆங்கிலேய ஆதிக்கத்திற்கெதிராக ‘எழுத்துத் துப்பாக்கியை’ ஏந்தியவர்கள். குண்டுகளை விட வீரியம் மிக்க இவர்களின் எழுத்துக்கள், வெள்ளையர்களை கதி கலங்கச் செய்தது. தெற்கில் இவனும் வடக்கில் அவனுமாய் வெள்ளையர்கள் கண்களில் விரலை விட்டு ஆட்டியவர்கள்.


இருவருமே முறுக்கு மீசைக் காரர்கள். கோபத்தை இறைவன் இவர்களின் மூக்கின் நுனியில் வைத்துவிட்டான் போலும். ‘நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டாலே நெஞ்சு பொறுக்குதில்லையே’ என்று பொறுமியவர்கள் இவர்கள்.


அவனது பார்வையில் இந்தியா ஒரு ஏடன் தோட்டம். இவனது பார்வையில் பாரதம் ஒரு பிருந்தாவனம்.


அவன் புல்புல்களை வைத்து பாடல்கள் புனைந்தான். இவன் பாடியது குயில் பாட்டு.


இருவரும் பறவைகளை நேசித்தார்கள். அதனால் தான் அவர்களுக்கும் சிறகு முளைத்தது. வானம்பாடிகள் ஆனார்கள். வனாந்திரங்களிலும், பனிச்சாரல்களிலும், மனிதர்களின் மனதிலும் பாடிப்பாடி திரிந்தார்கள்.
மனித இனத்தில் பிறந்தவனையே நம் ஜாதி என்று ஏற்றுக் கொள்ளத் தயங்குகிற மனிதர்கள் மத்தியில் ‘காக்கை குருவி எங்கள் ஜாதி’ என்றவர்கள் இவர்கள்.


இக்பாலின் மூதாதையர்கள் பிராமண வகுப்பைச் சார்ந்தவர்கள். சாஹஜ் ராம் சப்ரு என்ற அவரது மூதாதையர் ஒருவர் இஸ்லாமிய மார்க்கத்தை தழுவியவர் ஆவார். இக்பாலின் தகப்பனார் ஷேக் நூர் முகம்மது புகழ்பெற்ற தையல் நிபுணர். இஸ்லாமிய மார்க்கப் பற்று நிரம்பியவர். தன் பிள்ளைகளுக்கும் மார்க்க அறிவை போதித்து வளர்த்தார்.
பாரதியும் பிராமணனே. அவனது சமுதாயச் சிந்தனை, சமநிலை பண்பாடு, புரட்சிக் கருத்துக்கள் அவன் வகுப்பினரிடையே அவனுக்கு பலத்த எதிர்ப்பைத் தேடித் தந்ததென்னவோ உண்மை.


காதலின் சின்னமாக 22 ஆண்டுகளாக கட்டப்பட்ட தாஜ்மகாலை கண் குளிரக் கண்ட பின்னரே உயிர் நீத்தான் ஷாஜகான். ஒரு விதத்தில் அவன் பாக்கியசாலி.


இக்கவிஞர்கள் இருவருக்குமே அதுபோன்ற ஒரு பாக்கியம் கிடைக்கவில்லை. “கனவு மெய்ப்பட வேண்டும்” என்று பாடிய பாரதியும் இக்பாலும் அந்த பொன்னான தருணத்தை கண்ணாரக் காணும் முன்னரே உயிர் நீத்தவர்கள். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் முன்னரே இவர்களின் மூச்சு நின்று விட்டது.


பாரதியின் தன்னம்பிக்கை நம்மை பிரமிக்க வைக்கிறது. சுதந்திரம் கிடைப்பதற்கு 25 ஆண்டுகட்கு முன்னரே ஒரு மாபெரும் விடுதலைப் போராட்டத்தை உருவகப்படுத்திக் கொள்கிறான்
“ஆகாவென்றெழுந்தது பார் யுகப்புரட்சி” என்று கூக்குரலிடுகிறான்.


பிறிதோரிடத்தில்
“எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு ! - நாம்
எல்லோரும் சமம் என்பது உறுதி யாச்சு” என்று உவகையுறுகிறான். பின்னர்
“ஆடுவோமே ஆடுவோமே ! பள்ளுப் பாடுவோமே !
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று !
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே ! - இதைத்
தரணிக் கெல்லாம் எடுத்து ஓதுவோமே !”
என்று சுதந்திரமே கிடைத்து விட்டதாய் நினைத்து ஆனந்தக் கூத்தாடுகிறான்.

தூங்கிக் கிடந்த இந்தியனை எழுப்பிவிடும் சக்தி இருவருடைய எழுத்துக்களுக்கும் இருந்தன. இருவரும் புதுக் கவிதைகளுக்கு வித்திட்டவர்கள். தங்களுடைய புரட்சிக் கருத்துக்கள் ஒருசில சாராரால் தவறாகப் புரிந்துக் கொள்ளக்கூடும் என்பதை அறிந்து வைத்திருந்தவர்கள்.
மதங்களின் பெயரால் நடக்கும் அட்டூழியங்களை கண்கூடாகக் காண்கிறோம். உலகிலுள்ள அத்தனை மதங்களும் சாந்தியையும் சமாதானத்தையும், அன்பையும் அறவழியையும்தான் போதிக்கின்றன. அதனை புரிந்துக் கொள்ளும் சக்திதான் மனிதனுக்கு இல்லாமல் போய்விட்டது.
இக்பால் கூறுகிறான் :


'மத்ஹப் நஹீன் சிகாதா ஆபஸ் மே பேர் ரக்னா'


மதங்கள் மீது மக்களுக்கு மீண்டும் நம்பிக்கை வரவேண்டும் என்றால் முதலில் மதவாதிகள் தங்களுக்குள் சண்டை போடுவதை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்பதை இக்பால் சொல்லாமல் சொல்கிறான்.
இக்பாலை சூஃபி என்று வரையறுப்போர் உண்டு. சூஃப் என்றால் அரபு மொழியில் கம்பளி என்று அர்த்தம். ‘சூஃபி’ என்றால் கம்பளி போர்த்தியவன் என்று பொருள். நாளடைவில் மெய்ப்பொருளியலும் ஆதனிய மறையியலும் இணைந்தவொரு முறையைப் பின்பற்றுகின்ற ஞானியைக் குறிக்கும் சொல்லானது.


‘ஹக்’ (உண்மை) என்றும், ‘நூர்’ (ஒளி) என்றும் இறைவனை இக்பால் ஒரு சூஃபியின் தோரணையில் விளிப்பதை நாம் காண முடிகிறது. ‘பரம்பொருள்’, ‘சோதி’, ‘மகாசக்தி’ – இறைவனின் தன்மையைக் குறிக்கும் பதங்களை பாரதியும் கையாள்கிறான்.


கர்வம், கவிஞனுடன் கூடப்பிறந்த குணம் போலும். மகாகவிகள் அத்தனைப் பேருக்கும் தற்பெருமை தலைவிரித்தாடுவதை காண முடிகிறது. அகம்பாவம் என்று சொல்லுவதை விட கவி இறுமாப்பு என்று கூறலாமோ? இவர்களின் அகந்தை நாம் இரசிக்கும்படி இருக்கிறது.


“காவியத்தாயின் இளையமகன், காதல் பெண்களின் பெருந்தலைவன், பாமர ஜாதியில் தனிமனிதன், படைப்பதினால் என்பெயர் இறைவன்” என்று கண்ணாதாசன் தம்பட்டம் அடிக்கையில் நமக்கு அவன் மேல் கோபம் வருவதில்லை. மாறாக அவன் மீதிருந்த ஈடுபாடு அதிகரிக்கிறது.
“எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்” என்று பாரதி பெருமை கொள்ளுகையில், “அவன் சொல்லுவது உண்மைதானே?” என்று நாம் அவனுக்கு சப்பைக்கட்டு கட்டத் தோன்றுகிறது.


“இரவைப் படைத்தவன் இறைவன்தான் என்றாலும்
இருள்போக்கும் அகல்விளக்கு என்னுடைய கைவண்ணம்
மண்ணைப் படைத்தவன் அவனே! அதிலென்ன ஐயம்?
மண்பாண்டம் அத்தனையும் மனிதனின் உபயம்
காடுமலை, பாலைவனம் அவன் படைப்பு என்றாலும்
கனித்தோட்டம், நந்தவனம், - என்
கடும் உழைப்பின் பயனாகும்
கண்ணாடியை கல்லிருந்து பிரித்தெடுத்தவன் நான்.
கொடும்நஞ்சை நச்சுமுறியாய் ஆக்கியவனும் நான்தானே?”

என்று ஒட்டு மொத்த மனிதகுலத்திற்கும் சேர்த்து வக்காலத்து வாங்கி இக்பால் பாடும் போது நாமும் அவனுடன் சேர்ந்து பூரித்துப் போகிறோம்.

“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்” என்ற செந்தமிழ்த்தேனீ பாரதியின் கொள்கைதான் இக்பாலுடைய கொள்கையாகவும் இருந்தது.


பெரெட்ரிச் நியெட்செ, ஹென்றி பெர்க்ஸன். கோயத். தாந்தே, மவ்லானா ரூமி போன்ற மேலைநாட்டு மெய்யறிவாளர்களுடைய தத்துவார்த்த சிந்தனைகள் இக்பாலை ஆட்கொண்டது.


பிறநாட்டுக் கவிஞர்களான ஷெல்லி, கீட்ஸ், பைரன், விட்மன் இவர்களின் சிந்தனைகளை பாரதியின் கவிதைகளில் நாம் காண முடிகிறது.
பாரதி ஒரு பன்மொழியாளன். எனவேதான் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று அர்த்தம் தொனிக்க பாடினான். “சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து” என்று தைரியமாகப் பாடினான். ஒவ்வொரு மொழிக்கும் ஒரு சிறப்பு உண்டு. தெலுங்கில் பாட்டிசைத்தால் இனிமையாக இருக்கலாம் என்று அவன் நினைத்திருக்கக் கூடும். இதில் தமிழ் ஆர்வலர்கள் வருத்தப்படுவதற்கு என்ன இருக்கிறது?
மனதில் பட்டதை பட்டவர்த்தனமாக எடுத்துச் சொல்வதில் இக்பாலுக்கும் இதேபோன்ற துணிச்சல் இருந்தது.


“என்னதான் உருது இனிமையான மொழி என்றாலும் பாராசீக மொழி அதைவிட இனிமையானது” என்றவன் கூறுகிறான். இருந்த போதிலும் உருது மொழியை தேசிய மொழியாக கொண்ட நாட்டில் அவன் தேசியக் கவிஞனாக போற்றப் படுகிறான். மகாகவிகளின் ஆளுமைக்கு இதுவும் நல்ல எடுத்துக்காட்டு. அவன் எழுதிய 12,000 கவிதைகளில் 7,000 க்கும் மேற்பட்ட கவிதைகள் பாரசீக மொழியில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
“கடந்த காலத்தை நினை, நிகழ்காலத்தை நடத்து, எதிர்காலத்துக்கு உன்னை தயார்படுத்திகொள்” இதுதான் இக்பால் நமக்கு “அடிமைத்தளம்” (Bandagi Nama) என்ற நூலில் இளைஞர்களுக்கு போதிக்கும் தாரக மந்திரம்.


இக்பாலின் அறிவுரைகளை அமைதியாகச் சொல்வான். பாரதி கூறும் புத்திமதியில் ஆக்ரோஷத்தைக் காண முடியும்.

“பாதகம் செய்பவரைக் கண்டால் – நீ
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா! – அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!” – இது பாரதி பாணி.


‘நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி வஞ்சனைச் சொல்வாரையும்’, ‘மானம் சிறிதென்றெண்ணி வாழ்வு பெரிதென்றெண்ணும் ஈனர் குலத்தவரையும்’ பாரதி என்றுமே மன்னிக்கத் தயாராயில்லை.
வங்காளச் சிங்கம் எனப் போற்றப்படும் நவாப் சிராஜுத் தவ்லா மற்றும் திப்பு சுல்தானை ஆங்கிலேயர்களிடம் காட்டிக் கொடுத்த இனத்துரோகிகளை இக்பால் இதுபோன்றே பயங்கரமாகச் சாடுகிறான் 1932-ல் வெளியான “ஜாவீது நாமா” என்ற நூலில்.


இக்பாலின் இரண்டாவது ஆங்கில நூல் “Reconstruction of Religious Thought in Islam “ என்பது. இந்நூல் 1930-ஆம் ஆண்டு லாகூரில் வெளியாகியது. சென்னை, ஹைதராபாத், அலிகார் ஆகிய நகரங்களில் இல்பால் ஆற்றிய சொற்பொழிவுகள் உள்ளடங்கியது. சென்னைக்கு வந்த போது சேத்துப்பட்டில் உள்ள ஹாரிங்டன் சாலையில் இருந்த நமாஸி குடும்பத்தினருக்குச் சொந்தமான பங்களாவில் தங்கியிருந்ததை இங்கே பதிவு செய்ய வேண்டும்.
பாரதி, ஆங்கிலத்தில் அளப்பரிய புலமை பெற்றிருந்தது பல பேருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. “நம்மாழ்வாரின் திருவாய் மொழி” “நாச்சியார்ப் பதிகம்” “திருப்புகழ்” ஆகிய நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த்தோடு அல்லாமல் ஓர் ஆங்கிலப் பத்திரிகை ஆசிரியராகவும் இருந்து அதனை நடத்தியும் வந்துள்ளான்.


பாரதியின் பாடல்களும் முறையே ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தால் அவனுக்கும் தாகூருக்குக் கிடைத்ததுபோன்று நோபல் பரிசு கிடைத்திருக்கக்கூடும்.


இருவர் வாழ்விலும் நடந்த இளம்பிராயத்து நிகழ்வுகள் சுவராஸ்யமானது. இக்பால் மாணவனாக இருக்கையில் வகுப்பிற்கு ஒருநாள் தாமதமாகச் செல்ல "ஏன் தாமதம்?" என ஆசிரியர் அவனை வினவியதற்கு "இக்பால் சீக்கிரம் வராது" என்றானாம். (இக்பால் என்றால் மேனிலை என்று பொருள்). உண்மைதானே?


பாரதி சிறுவனாக இருக்கையில் காந்திமதி நாதன் என்பவர் ‘பாரதி சின்னப்பயல்’ என்ற ஈற்றடியை கொடுத்து பாடல் எழுதச் சொல்ல சிறுவன் பாரதி ‘காந்திமதி நாதனைப் பாரதி (பார் + அதி) சின்னப்பயல்’ என்று ‘கலாய்த்தது’ நாமெல்லோரும் அறிந்ததே. விளையும் பயிர் முளையில் என்பது இதுதானோ?


இருவரும் இயற்கையை ரசித்தவர்கள். இக்பாலின் கவிதையை சுவைக்கையில் இமாலயச் சாரலுக்கே சென்று வந்த அனுபவம் கிட்டும். ‘எத்தனைகோடி இன்பம் வைத்தாய் இறைவா’ என்றும் ‘நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை நோக்க நோக்கக் களியாட்டம்’ என்று பாரதி கூறும்போதும் இவனும் இயற்கைப் பித்தனே என்று முடிவுகட்டி விடுவோம்.


சாவின் பிடியிலும் காலனை அழைத்து அவனைக் காலால் உதைத்த இந்த தென்னகத்து இக்பாலும் சரி, ‘சாகாத வரம் பெற்ற பாடல்’ (Song of Eternity – 1932) எழுதி புகழ்பெற்ற அந்த பாகிஸ்தான் பாரதியும் சரி, இலக்கியம் உள்ளவரை இவர்களும் எந்நாளும் உயிர் வாழ்வார்கள் என்பது திண்ணம்.


திண்ணையில் அப்துல் கையூம்

நன்றி : திண்ணை

Read more...

கண்ணதாசன் காப்பியடித்தானா?



Thursday April 17, 2008
அப்துல் கையூம்

அன்று நானும் என் நண்பர்களும் அரட்டை அடித்துக் கொண்டிருக்கையில் கண்ணதாசன் பற்றிய பேச்சு எழுந்தது. புதிதாக அறிமுகமான ஒரு அன்பர் எங்களை எரிச்சலூட்டும் வகையில் “Kannadasan is a Copy-cat” என்ற அவதூறை எடுத்துப் போட்டுச் சென்றார். அவருடைய ‘மேதாவித்தனம்’ எனக்கு எரிச்சலை ஊட்டியது.


யாரோ புரிந்த வாதத்தை அரைகுறையாகக் கேட்டுவிட்டு இப்படி ஒரு தப்பான ஒரு முடிவுக்கு அவர் வந்திருக்கலாம். ஒன்று, இவர் கண்ணதாசனை முற்றிலும் அறியாதவராக இருக்க வேண்டும் அல்லது ‘காப்பி’ என்பதன் பொருள் என்னவென்று தெரியாதவராக இருக்க வேண்டும். சொல்ல வந்த கருத்தை தமிழில் கூட சொல்லத் தெரியாத ஒருத்தரிடம் போய் நான் என்ன தர்க்கம் செய்ய முடியும்? அந்த இடத்தில் மெளனமாக இருப்பதே நலமென்று அமைதி காத்து விட்டேன்.


ஒரு மொழியின் வளர்ச்சிக்கு பிறமொழித் தழுவல், கருத்து இறக்குமதி, சிந்தனை அரவணைப்பு, கவிநடை தரவிறக்கம் இவை யாவும் இன்றிமையாத ஒன்று, அதற்குப் பெயர் ‘காப்பி-பூனையோ’ அல்லது ‘ஈயடிச்சான் காப்பியோ’ அன்று.


“மேற்கே
ரொமாண்டிசிசம்
நாச்சுரலிசம்
ரியலிசம்
அப்பால்
இம்ப்ரெஷனிசம்
என் மனைவிக்கு
தக்காளி ரசம்”


உலகம் எப்படியெல்லாமோ வளர்ந்துக் கொண்டிருக்கும் வேளையில் நாம் நம்மைச் சுற்றி ஒரு சிறிய வட்டத்தைப் போட்டுக் கொண்டு, அறிய வேண்டியதை அறியாமல் காலத்தை வீணடிக்கின்ற போக்கினை சுந்தர ராமசாமி நகைச்சுவை ததும்ப இக்கவிதையில் வடித்திருந்ததை மிகவும் ரசித்தேன்.


‘குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருந்த தமிழ்த் திரையுலகுக்கு ‘உலகமயமாக்கல்’ என்ற தாதுபுஷ்டி லேகியத்தை வழங்கி தெம்பூட்டியவன் கண்ணதாசன்.


“மதன மோக ரூப சுந்தரி” என்ற ரீதியில் இருந்த பாடல்களை “பொன்மகள் வந்தாள்” பாணியில் மாற்றிய வார்த்தை சித்தன் அவன்.


அந்த செட்டிநாட்டுச் சிங்கம் ‘கஞ்சன்’ என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. வார்த்தைகளை அவனைவிட சிக்கனமாக வேறு யாரும் கையாண்டிருக்க இயலாது.


“பேசுவது கிளியா?” என்ற பாடல் நல்லதொரு உதாரணம். இரண்டிரண்டு வார்த்தைகளாய் அமைந்த சந்தத்தின் விந்தை அப்பாடல்.


“பாடுவது கவியா? - இல்லை
பாரிவள்ளல் மகனா?
சேரனுக்கு உறவா?
செந்தமிழர் நிலவா?”


இவ்வரிகள், “பாடுவது கவியா?” என்று கண்ணதாசனின் கவிநயத்தை தம்பட்டம் அடிப்பதோடன்றி, பாடுகின்ற கதாநாயகனின் கொடுத்துச் சிவந்த கொடைத்தன்மை, அவனது கேரளத்து பூர்வீகம், அவன் தமிழகத்தில் அடைந்திருந்த சொல்லவொணா செல்வாக்கு, அத்தனையும் அழகுற எடுத்தியம்பியிருந்தது. எட்டே வார்த்தைகளில் ஒருவனது சரித்திரத்தையே படம்பிடித்துக் காட்ட கண்ணதாசனால் மட்டுமே முடிந்தது.


இன்றைய பாடல்களை எடுத்துக் கொண்டால் “என்ன விலை அழகே?” என்ற கேள்வி இருக்கும். கேட்ட கேள்விக்கு பதில் கிடைக்காது. அடுத்த அடி “சொன்ன விலைக்கு வாங்க வருவேன்” என்று தொடர்ந்து மேலே போய்க் கொண்டேயிருக்கும்.


கண்ணதாசனின் பாணி அலாதியானது. அவனுக்கு முடிச்சு போடவும் தெரியும். அவிழ்க்கவும் தெரியும். கேள்வியும் எழுப்பி பதிலும் சொல்வதில் அவன் கில்லாடி. “உன் புன்னகை என்ன விலை?” என்ற கேள்விக்கு “என் இதயம் தந்த விலை” என்ற பதில் தொடர்ந்து வரும்.


“நதி எங்கே போகிறது?” என்ற கேள்வியை எழுப்பிவிட்டு “கடலைத் தேடி” என்ற பதிலையும் தருவான் நம் கவிஞன். ஏனெனில் அவன் ஒரு “Perfectionist”. அவன் போட்ட வார்த்தைக்கு ஈடாக வேறொரு நல்ல வார்த்தை அவனால் மட்டுமே போட முடியும். நாம் போட்டால் அந்த “Imperfection” காட்டிக் கொடுத்துவிடும்.


உண்மையான கவிஞன் எப்படி இருக்க வேண்டும்? அவன் நாட்டையும் நடப்பையும் முறையே தெரிந்து வைத்திருக்க வேண்டும். சமுதாயத்தின் அன்றாட விஷயங்களில் ஐக்கியமாகி இருக்க வேண்டும். பொதுஅறிவு நிரம்பியவனாக இருக்க கற்பனைத் திறன் வேண்டும். சமயோசித புத்தி உடையவனாக இருத்தல் வேண்டும்.


இவை அத்தனை குணங்களும் ஒருங்கே அமையப் பெற்றவன் கண்ணதாசன். ‘மானிட ஜாதியை ஆட்டி வைப்பேன்’ என்று அந்த காவியத் தாயின் இளைய மகன் பெருமை கொண்டதில் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது. அவன் மறைந்து இத்தனை வருடங்கள் ஆன பின்பும் அவன் பாடல்களை நாம் அலசுகின்றோமே? அப்படியென்றால் “எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” என்ற அவனது தீர்க்கதரிசனம் பலிக்கிறது என்றுதானே பொருள்?


பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களை தமிழ்மொழியில் பெயர்த்த தலையாய கவிஞருள் கண்ணதாசன் குறிப்பிடத்தக்கவன். அவன் கம்பனையும், பாரதியையும், பட்டினத்தாரையும் மட்டும் அறிந்து வைத்தவனில்லை; அதற்கு மேலாக பாரசீக மேதைகளையும், மேலை நாட்டு அறிஞர்களையும் அவர்தம் படைப்புகளையும் கரைத்துக் குடித்தவன் என்ற உண்மை புலப்படுகிறது.
குலமகள் ராதை என்ற படத்திற்காக கண்ணதாசன் எழுதிய பாடலிது:


“இரவுக்கு ஆயிரம் கண்கள்,
பகலுக்கு ஒன்றே ஒன்று
அறிவுக்கு ஆயிரம் கண்கள்,
உறவுக்கு ஒன்றே ஒன்று”


பிரான்ஸிஸ் வில்லியம் போர்டிலோன் (Francis William Bourdillon) என்ற ஆங்கிலக் கவிஞனின் கவிதையிலிருந்து முதல் பத்தியிலிருந்து இரண்டு வரிகளையும் இரண்டாம் பத்தியிலிருந்து இரண்டு வரிகளையும் எடுத்து (இளந்தலைமுறையினருக்கு புரியும்படி சொல்லவேண்டுமெனில் ‘சுட்டு’) அழகுற தன் பாடலில் கோர்வையாக கையாண்டிருப்பான். அந்த ஆங்கிலக் கவிதை இதுதான் :


The night has a thousand eyes,
And the day but one;
Yet the light of the bright world dies
With the dying sun.
The mind has a thousand eyes,
And the heart but one:
Yet the light of a whole life dies
When love is done.


காப்பியடிப்பது எல்லாராலும் சாத்தியப்படும். சிந்தனையை கிரகித்துக் கொண்டு சாராம்சத்தை பிழிந்துக் கொடுக்க அறிவு ஜீவிகாளால் மட்டுமே முடியும்,


“உள்ளம் என்பது ஆமை” என்ற பாடல் கண்ணதாசனின் தத்துவார்த்த சிந்தனைக்கு ஓர் உரைகல்.


“தெய்வம் என்றால் அது தெய்வம் – அது
சிலையென்றால் வெறும் சிலைதான்
உண்டு என்றால் அது உண்டு –
இல்லை என்றால் அது இல்லை”


என்ற வரிகளில் மிகப்பெரிய சூட்சமத்தை எளிமையான வார்த்தைகளில் உணர்த்தியிருப்பான் கண்ணதாசன்.


“உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் என்பவர்க்கு
உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் எம்மிறை
உள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க்கு
உள்ளத்தும் இல்லை புறத்தில்லைதானே?”


திருமூலரின் திருமந்திரத்தில் காணப்படும் இந்த வாழ்க்கை சித்தாந்தத்தை பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் சொல்வதற்கு கண்ணதாசனால் மட்டுமே முடிந்தது.


“அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே” என்று பட்டினத்தார் பாடியதை இரண்டிரண்டு வார்த்தைகளாய் மாலையாய் தொடுத்திருப்பான் கவிஞன்.

வீடுவரை உறவு
வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை
கடைசிவரை யாரோ?

தொட்டிலுக்கு அன்னை
கட்டிலுக்குக் கன்னி
பட்டினிக்குத் தீனி
கெட்டபின்பு ஞானி -

என்ற வரிகளை கேட்கையில் கண்ணதாசனின் அனுபவப் பாடம்தான் நமக்கு நினைவில் வரும். கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் என்று சொல்வதைப்போல, கெட்ட பின்புதான் கண்ணதாசனுக்கு ஞானமே பிறந்தது. அனுபவப் பள்ளி அவனுக்கு பயிற்றுவித்த பாட’மது’.

“நடைபாதை வணிகனென
நான் கூறி விற்றபொருள்
நல்ல பொருள் இல்லை அதிகம்”

என்று அவனே பாவமன்னிப்பு கேட்டிருக்கிறான். (எலந்தப்பழம் பாட்டைத்தான் சொன்னானோ என்னவோ எனக்குத் தெரியாது.)

"ஒருவன் எப்படியெல்லாம் வாழக்கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான். ஆகவே இப்படித்தான் வாழ வேண்டுமென்று சொல்கிற யோக்கியதை எனக்குத்தான் இருக்கிறது" என்று உரைத்தவன் அவன்.

'தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம் - அது
தெரியாமல் போனாலே வேதாந்தம்'

என்று சொல்லும் போதும்,

'கள்ளிக்கேது முள்ளில் வேலி போடி தங்கச்சி,
காட்டுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி'

என்று புலம்பும்போதும் ஒரு பாம்பாட்டிச் சித்தனாகத்தான் நமக்கு காட்சி தருகிறான் அவன்.

மனிதஜாதியின் வாழ்வியல் தத்துவத்தை ‘பிட்ஸ்மேன் சுருக்கெழுத்’தில் இதைவிட யாரால் தெளிவாகச் சொல்ல முடியும்,

“குத்துவிளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்
கொத்தலர் பூங்கழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா .. ..”

என்று ஆண்டாளைப் பின்பற்றி கண்ணதாசனும் பாடியிருந்தான்.
“குத்துவிளக்கெரிய
கூடமெங்கும் பூமணக்க
மெத்தை விரித்திருக்க
மெல்லியலாள் காத்திருக்க”

– பச்சைவிளக்கு படத்தில் எஸ்.எஸ்.ஆர் – விஜயகுமாரி நடிக்க, இந்துஸ்தானி வாத்தியமான ஷெனாய் இசைக்கையில் மனதைப் பிழிந்தெடுக்கும். ஒளிவு மறைவு இல்லாதவன் என்று சொன்னால் அது கண்ணதாசனுக்குத்தான் பொருந்தும். உள்ளதை உள்ளதுபோல் சொல்வதற்கு ஓர் அசாத்திய துணிச்சல் வரவேண்டும். இந்த வெளிப்படைத்தன்மையால் கண்ணதாசன் பெற்ற ஆத்மார்த்த ரசிகர்கள் ஆயிரமாயிரம்.

அதே சமயம், இது அவனுக்கு பின்விளைவையும் ஏற்படுத்தியது. கடுமையான விமர்சனங்களுக்கு அவன் ஆளானான். “போற்றுபவர் போற்றட்டும் புழுதிவாரித் தூற்றுபவர் தூற்றட்டும்” என்று அவைகளை உதறித் தள்ளிவிட்டு அவன் மனதுக்கு சரியென்று பட்டதைச் செய்து முடிப்பது அவனுக்கு வழக்கமாகி விட்டிருந்தது.

துணிச்சல் திராவிட பாசறையில் இருந்து தன்னைத்தானே புடம் போட்டுக் கொண்ட கண்ணதாசனிடம் சற்று மிகுதியாகவே காணப்பட்டது.

“நான் கவிஞனும் இல்லை
நல்ல ரசிகனும் இல்லை
காதலெனும் ஆசையில்லா
பொம்மையும் இல்லை”

இந்த வாக்குமூலத்தில் அவனது தன்னடக்கத்தை மட்டுமின்றி அவனது அந்தரங்க இயல்பையும் அவன் பிரகடனப்படுத்தி இருப்பதை நம்மால் காணமுடியும்.

“ஓர் கையிலே மதுவும் ஓர் கையிலே மங்கையரும்
சேர்ந்திருக்கும் வேளையிலே சீவன் பிரிந்தால்தான்
நான் வாழ்ந்த வாழ்க்கை நலமாகும்; இல்லையெனில்
ஏன் வாழ்ந்தாய் என்றே இறைவன் எனைக் கேட்பான்”

- (தொகுதி-பாடல் 1 ‘பெண்மணீயம்)

“தர்மா தர்மமெலாம் சாவுக்குப் பின்னரே
தங்கமே கிண்ணமெங்கே?
சரிபாதி நீயுண்டு தருவாய் என் கையிலே
தழுவாது மரண பயமே!”
– (தொகுதி IV, பாடல்-2, ‘மதுக்கோப்பை’)

கண்ணதாசனின் தனிப்பட்ட வாழ்க்கையைச் சாடுபவர்கள் இந்த வரிகளைத்தான் ஆயுதமாக முதலில் ஏந்துவார்கள். ரத்தத்திலகம் என்ற படம் கண்ணதாசனின் சொந்தத் தயாரிப்பில் உருவானது. அவனே அப்படத்தில் தோன்றி

“ ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு,
ஒரு கோலமகள் என் துணையிருப்பு”

என்று பாடுவான். பாரசீக பெருங்கவிஞன் உமர்கய்யாமின் சுவையான வரிகள் இவை. [உமர் கய்யாம் தன்னை மறந்த நிலையில் இறைவனை நினைத்து பாடிய பாடல்கள் ஏராளம். ஒவ்வொன்றுக்கும் ஒரு உட்பொருள் உண்டு.

“கோப்பையிலே என் குடியிருப்பு” என்பது தாயின் கருவயிற்றில் குடியிருந்ததைக் குறிக்கும், “கோலமகள் என் துணையிருப்பு” என்பது தாயின் அரவணைப்பை குறிக்கும் என்பது ஆராய்ச்சியாளர்களின் விளக்கம். அது இங்கே நமக்கு தேவையில்லாதது]

“பாரசீகப் பாவலனும் சேராத பைங்கிளிகாள்” (தொகுதி IV-பாடல் 1) என்று உமர்கய்யாம் குறித்தே கவிஞன் பாடியிருக்கிறான்.
கண்ணதாசனின் பாடல்களில் சங்ககால புலவர்கள் முதல் சமகால அறிஞர்கள் கருத்துக்கள்வரை தழுவல்களாக படித்து இன்புற முடியும். (கண்ணதாசனுக்கு ‘தழுவல்’ என்றால் சொல்லிக் கொடுக்கவா வேண்டும்?)
இத்’தழுவல்’ காரியங்களைப்பற்றி கவிஞர் கண்ணாதாசன் கூறிய விளக்கமிது.
“சமஸ்கிருத மொழியில் ஓதப்படும் கல்யாண மந்திரத்தில் 'நான் மனமாக இருந்து நினைப்பேன்... நீ வாக்காக இருந்து பேசு' என்று ஒரு வரி வரும். அது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?. ஆனால் அதையே நான் "நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்" என்று பாடல்வரிகளாக எழுதியபோது பெரும்பாலான மக்களை சென்று அடைந்ததல்லவா?" என்று கேட்டிருந்தான். அவன் சொன்னது முற்றிலும் உண்மை.

“காயமே இது பொய்யடா
வெறும் காற்றடித்த பையடா
மாயனாராம் மண்ணு குயவன் செய்த
மண்ணு பாண்டம் ஓடடா”

என்று சித்தர்கள் பாடிய ஞானப் பாட்டையும்,

“கத்தன் பிரிந்திடில் செத்த சவமாச்சு
காணாது காணாது கண்டதெல்லாம் போச்சு
எத்தனைப்பேர் நின்று கூக்குரலிட்டாலும்
எட்டாமல் போய்விடும் கட்டையல்லோ?” -

என்ற குணங்குடி மஸ்தானின் ஞானத் தத்துவத்தை எல்லாரும் புரிகின்ற மொழியில்

“பார்த்தா பசுமரம் படுத்து விட்டா நெடுமரம்
சேர்த்தா விறகுக்காகுமா ஞானத்தங்கமே
தீயிலிட்டால் கரியும் மிஞ்சுமா?” -
என்று பாடியிருப்பான்.
பிற அறிஞர்களின் சாத்திரங்களை நம் மொழியில் பெயர்க்கும் போது நம் மொழிக்கு மற்ற மொழியினரும் ரசிகர்களாகிறார்கள் என்பது மட்டுமின்றி, உலகளவில் ஒரு அங்கீகாரம் கிடக்கிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

கணியன் பூங்குன்றனார் என்ற ஒரு பழம்பெருங்கவிஞன். ஒரே ஒரு பாடல்தான் எழுதினான். அதுவும் வெறும் பதினான்கே வரிகள். “யாதும் ஊரே யாவருங் கேளிர்’ ஒரு வரி வாசகம் உலகத்திலுள்ள அத்தனை மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது. எழுதியவனுக்கு மாத்திரமல்ல தமிழன்னைக்கே சூட்டப்பட்ட மலர்க்கிரீடம் அது.

“அம்மா என்றழைக்காத உயிரில்லையே” என்ற பாட்டில் கவியரசர் எழுதிய
“மழை கூட ஒரு நாளில் தேனாகலாம் - சிறு
மணல் கூட ஒரு நாளில் பொன்னாகலாம்
ஆனாலும் அவை யாவும் நீயாகுமா?
அம்மா என்றழைக்கின்ற சேயாகுமா?”

என்ற இந்த வரிகளைச் சாகித்திய அகாதெமி அமைப்பு கிட்டத்தட்ட பதினாறு மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டது நம்மை பெருமை கொள்ள வைக்கிறது.

“பால்மணக்கும் பருவத்திலே
உன்னைப்போல் நானிருந்தேன்
பட்டாடைத் தொட்டிலிலே
சிட்டுபோல் படுத்திருந்தேன்
அந்நாளை நினைக்கையிலே
என்வயது மாறுதடா
உன்னுடன் ஆடிவர
உள்ளமே தாவுதடா”

என்ற வரிகள் வோர்ட்ஸ்வொர்த் சொல்வானே “Reflections in Tranquility” என்று; அதைத்தான் நினவு படுத்துகிறது. ‘ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!’ என்று நடந்து முடிந்த கதைகளை அசைப் போடும் மனநிலை அது.

"தனி ஒரு மனிதனின் வாழ்கையில் நடக்கும் எந்த ஒரு சம்பவத்திற்கும் பொருத்தமாக என்னுடைய பாடல் ஒன்று அங்கே ஒலிக்கும்" என்று கண்ணதாசன் சொன்னது முழுக்க முழுக்க உண்மை. அவன் தொடாத பாடமே கிடையாது. சுட்டிக் காட்டாத நிகழ்வுகளே கிடையாது.

சர்ரியலிஸக் கவிதைகளின் முன்னோடிகளில் ஒருவர் பிரான்ஸ் நாட்டு அப்போலினைர். அவரை பிரான்ஸ் தேசத்தின் ‘கடைசிக் கவிஞன்’ என்று அழைப்பார்கள். (அதாவது அவருக்குப்பின் பிரான்ஸில் வேறு கவிஞர்களே இல்லை என்ற அர்த்தத்தில்)

“And my heart is as heavy as
A Damascan lady’s backside”

என்று எழுதுவான். இறுதி வரியில் ஒரு அதிர்ச்சி வைத்தியம் இருக்கும்.

வரவு எட்டணா
செலவு பத்தணா
அதிகம் ரெண்டனா

என்ற பாடலில் இந்த மூன்று வரிகளில் தென்பாடத ஒரு அதிர்ச்சி யுக்தி “கடைசியில் துந்தனா” என்ற இறுதி வரியில் காணப்படும். இந்த ‘Shock Treatment’ பக்குவப்பட்ட கவிஞனால் மட்டுமே கொடுக்க முடியும்.

“தோள் கண்டார் தோளே கண்டார்;
தொடுகழல் கமலமென்ன
தாள் கண்டார் தாளே கண்டார்
தடக்கை கண்டாரும் அஃதே”

(கம்பராமாயணம், பாலகாண்டம்: உலாவியற் படலம்:19)

என்ற கம்பனின் வரிகளை

“தோள் கண்டேன் தோளே கண்டேன்
தோளில் இரு கிளிகள் கண்டேன்
வாள் கண்டேன் வாளே கண்டேன்
வட்டமிடும் விழிகள் கண்டேன்

- என சுவைபட எளிய நடையில் வடித்திருப்பான் கண்ணதாசன்.

“உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி” என்ற பாரதியின் வரியை “வியாட்நாம் வீடு” படத்தில் கவிஞன் கையாண்டபோதும் கூட அதை காப்பியென்று யாரும் சொல்லவில்லை. மாறாக அவ்வரிகள் பாரதிக்கு மேலும் புகழை ஈட்டித் தந்தது.

“கல்லைத்தான் மண்ணைத்தான்
காய்ச்சித்தான் குடிக்கத்தான்
கற்பித்தானா?”

என்று ராமச்சந்திரக் கவிராயரின் பாடல் கண்ணதாசனுக்கு ஒரு தாக்கதை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

“அத்தான் என் அத்தான் - அவர்
என்னைத்தான்... எப்படி சொல்வேனடி - அவர்
கையைத்தான் கொண்டு மெல்லத்தான் - வந்து
கண்ணைத்தான்.... எப்படி சொல்வேனடி?”

காதலன் பூனைப்பாதம் வைத்து பதுசாய் காதலியின் கண்ணைப் பொத்தும் நிகழ்வை ராமச்சந்திர கவிராயனின் தத்துவார்த்த சிந்தனையோடு முடிச்சு போடுவதற்கு ஒரு தனித்திறன் வேண்டும். அது கண்ணதாசனிடம் மிதமிஞ்சி இருந்தது.

“மீன் செத்தா கருவாடு; நீ செத்தா கருவாடு; இது கண்ணதாசன் சொன்னதுங்க” என்றும் “கண்ணதாசன், காளிதாசன், கவிதை நீ நெருங்கி வா” என்றும் மறைந்த அந்த மகாகவியின் மேல் பாராட்டு மழை பொழிந்து விட்டு வேறொரு புறம் “கண்ணதாசன் காரைக்குடி, பேரைச் சொல்லி ஊத்திக்குடி” என்று இன்றைய சினிமா பாடலாசிரியர்கள் எழுதுவது உண்மையிலேயே அவரை பாராட்டுகிறார்களா அல்லது அவரை கிண்டல் செய்கிறார்களா என்று புரிந்துக் கொள்ள இயலவில்லை.

“He came. He saw, He conquer and He has gone” என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். “அவன் வந்தான், வென்றான், சென்றான்” என்று சொல்வதை விட வந்தான், வென்றான், நின்றான் என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நம் நெஞ்சில் நின்ற வண்ணம்தானிருப்பான்.

நன்றி : திண்ணை
ஏப்ரல் 17, 2008

Read more...

நாசமத்துப் போ !

அப்துல் கையூம்
நன்றி : திண்ணை Thursday May 1, 2008

“உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?” – பாடலொன்றில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நம்மைப் பார்த்து கேட்கின்ற கேள்வி இது.

ஹிரோஷிமா, நாகாசாகி நகரங்களில் அமெரிக்கன் வீசினானே அதுபோன்ற வலிமைமிக்க அணுகுண்டா அல்லது கண்டம் விட்டு கண்டம் பாய எந்நேரத்திலும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் ராட்சஸ ஏவுகணைகளா என்று நாம் விடையைக் குடைவதற்கு முன்பே “நிலை கெட்டுப் போன நயவஞ்சகரின் நாக்குதான் அது!” என்று நாம் சற்றும் எதிர்பாராதவண்ணம் ஒரு பதிலைத் தருவான் அந்த பாட்டாளிக் கவிஞன்.
நயவஞ்சகர்களின் நாக்கு மட்டும்தான் கொடியதா? சிற்சமயம் நல்லவர்களின் நாக்கும் கொடிய ஆயுதமாக உருமாறி விடுகிறதே? கோபத்தில் கொந்தளிக்கும் சாபம் பலித்திருப்பதாகவும் பகர்கிறார்களே? உண்மைதானோ?

வரம்பு மீறி வீசப்படும் வசைமொழிகள் இருக்கிறதே அது அணுகுண்டைக் காட்டிலும் ஆபத்தானது; ஏவுகணையைக் காட்டிலும் நாசம் விளைவிக்கக் கூடியது. சிலர் கடுமையான வார்த்தைகளை கண்ணிமைக்கும் நேரத்தில் கக்கி விடுவார்கள். கணநேர ஆத்திரம் அவர்களின் கண்களை மறைத்து விடும். அதன் பின்னர் அவர்கள் அறியாமல் சொன்னதை நினைத்து மனம் வருந்துவார்கள்.

“தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு”

என்று வார்த்தைகளின் கொடூரத்தன்மையை விளக்குவான் ஐயன் திருவள்ளுவன்.

மனமாரச் சொன்ன வாழ்த்தும், மனமெரிந்து சொன்ன சொல்லும் கட்டாயம் பலிக்கும் என்பார்கள். இரு மனங்களுக்குள் ஏற்படும் திருமண பந்தத்தை, ஊரறிய, உலகறிய ‘சுற்றம் சூழ வந்திருந்து வாழ்த்தியருள வேண்டுகிறேன்’ என்று அழைப்பிதழ் அச்சடித்து, அனைவரையும் வரவேற்று, ஆனந்தம் அடைகிறோம். ஏன்? நான்கு பேர்கள் கூடி நின்று நாவால் முழங்கும் நல்லாசிகள் இளம் தம்பதியினரின் வாழ்க்கையில் வளம் சேர்க்கும் என்ற எதிர்பார்ப்பில்தான். “நூறாண்டு காலம் வாழ்க” என்றும் “பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க” என்றும் ஆன்றோர்களின் ஆழ்மனதிலிருந்து வரும் ஆசிகளுக்கு ஈடு இணையேது?

நான் பிறந்த மண்ணான நாகூரில் சில விசித்திரமான பழக்க வழக்கங்கள் காணக் கிடைக்கும். வாசலில் நின்று யாசகம் கேட்கும் ஆசாமிகளுக்கு ஈவதற்கு ஏதும் இல்லாதபோதும் கூட இல்லத்திலிருப்பவர்கள் இசைக்கின்ற பதில் நம் இதயத்தைக் கவரும்.

“மாப்பு செய்யுங்க பாவா” என்று மனம் நோகாத வண்ணம் கூறுவார்கள். “பாவா” என்றால் தந்தைக்குச் சமமான சொல். “மாப்பு செய்யுங்கள்” என்றால் மன்னித்துவிடுங்கள் என்று பொருள். ஒரு சாதாரண பிச்சைக்காரனிடம் சென்று தாங்கள் ஏதோ தகாத செயல் செய்து விட்டதைப் போன்று மன்னிப்பு கேட்பது விந்தையாக இருக்கிறதல்லவா? உயர்ந்த பண்பாட்டுக்கு இது ஒரு உன்னத அளவுகோள்.

ஒரு வார்த்தை வெல்லும். ஒரு வார்த்தை கொல்லும்” - என் தாயார் எனக்கு அடிக்கடி கூறும் அறிவுரை இது. நம்மைச் சுற்றிலும் இரு வானவர்கள் இருக்கிறார்கள். நாமுரைக்கும் ஒவ்வொரு சொல்லுக்கும் ‘அப்படியே ஆகட்டுமென்று’ ஆசி வழங்குகிறார்கள் என்பார். உள்ளத்திலிருந்து அல்லாமல் உதட்டளவில் உச்சரிக்கும் வார்த்தைகள் கூட ஒரு சில நேரத்தில் உண்மையாகி விடுவது இதனால்தான்.

நல்ல விஷயங்களை நடைமுறையில் இருப்பதைப்போன்று களைய வேண்டிய கேடு கெட்ட பழக்கங்களும் எங்களூரில் கண்கூடு.
“களிச்சல்லே போவா”, “கொள்ளையிலே போவா”, “படிய விழுகுவா”, “கட்டையிலே போவா”, “கசங்கொள்ளுவா”, “கர்மம் கொள்ளுவா”, “பலா கொள்ளுவா”, இதுபோன்ற வசைமொழிகள் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் இருப்பதில் காணலாம். இதன் ஆழ்பொருளை உணருபவர்கள் ஒருக்காலும் இவ்வார்த்தைகளை தங்கள் நாவால் மொழியவே மாட்டார்கள்.

ஒருகாலத்தில் “டயேரியா” என்ற ஒரு கொடுமையான வியாதி பரவி தொடர்பேதி வந்து உயிரைக் குடித்தது. அவ்வியாதி வந்து மாய்ந்துப்போ என்ற அர்த்தத்தில் அமையப்பட்ட ஒரு சொற்றொடர் இந்த “களிச்சல்லே போவா” என்ற வசைமொழி. இன்னும் ஒரு படி மேல் சென்று “ஒரு களிச்சல்லே போவா” என்று திட்டுவார்கள். வியாதி தாக்கிய மாத்திரத்தில் உடனடியாக ஒரு வயிற்றுப்போக்கிலே நீ செத்து மடி என்ற பொருள் பதிந்த மிகக்கொடிய சொற்றொடர் அது.

கொள்ளை நோய் என்பது பிளேக் (Plague) நோயைக் குறிக்கும். ஒரு காலத்தில் இந்நோய் தாக்கி மாண்டவர்களின் எண்ணிக்கை ஆயிரமாயிரம். “கொள்ளையிலே போவா” என்றால் இதைத்தான் குறிக்கும்.

Brain Hemorrhage ஒரு மனிதனை தாக்கும் போது மூளைக்குச் செல்கின்ற நரம்பு மண்டலக் குழாய்கள் வெடித்துச் சிதறும். தடாலென்று கீழே விழுந்து இறந்து விடுவார்கள். இதைத்தான் “படிய விழுகுவாய்” என்று ஏசுவது.

மோசமான மரணமென்பது ‘கோமா’ ஸ்டேஜில் சென்று மடிவதுதான். மரணத் தருவாயில் இறை நாமத்தைக் கூட உச்சரிக்க இயலாது. கோமாவில் இருப்பவர்களுக்கு இதயத் துடிப்பு மட்டுமே இருக்கும். மற்ற பாகங்கள் செயலிழந்து விடும். உணர்வு அறவே இருக்காது. உடம்பு மரக்கட்டையாக போய் விடும். அதைத்தான் “கட்டையிலே போவா” என்று வசை பாடுவது.
மிகக்கொடுமையான நோய்களில் ஒன்று குஷ்டம். பாதிக்கப்பட்டவனின் தேகத்தை சிறுகச் சிறுக குலைத்து அவன் மேனியழகை சிதைத்து விடும். “கசங் கொள்ளுவா“ “பலா கொள்ளுவா” “கர்மம் கொள்ளுவா” என்று சொல்லுவதும் இக்கொடிய நோய் தாக்கி அவலட்சணமடைந்து சாவாயாக என்ற பொருள்தான்.

பிற்பாடு இந்த உள்ளர்த்தங்களை உணரத் தொடங்கியதும் இத்தகைய வசைமொழிகள் குறையத் தொடங்கின. திட்டுவதிலும் ஒரு சுகம் இருக்கின்றது போலும். அந்த சுகத்தை இழக்க இவர்கள் தயாராக இல்லை. திட்டுகின்ற அதே கடுமையான பாணியில் சில நல்ல வார்த்தைகளையும் கூறத் தொடங்கினர். “அட நீ நல்லா இருப்பே” போன்ற வாசகங்கள் திட்டுகின்ற அதே தொனியில் இருக்கும். ஆனால் வாழ்த்துக்களாக இருக்கும்.

பற்பல ஊர்களில் “நீ நாசமாப் போவா” என்ற ஏசுதலை “நீ நாசமத்துப் போ” என்று சொல்லக் கேட்கலாம் “நாசம் அற்றுப் போ” என்றால் “நாசமெலாம் கலைந்து நீ நன்றாக இருப்பாயாக” என்று பொருள்.

பெரும்பாலான வீடுகளில் தம் பிள்ளைகள் வெளியே போகும்போது “நான் போகிறேன்” என்று விடைபகர்ந்தால் “அப்படிச் சொல்லக் கூடாது. போய் வருகிறேன் என்றுதான் சொல்ல வேண்டும்” என்று பெரியவர்கள் அறிவுரை கூறுவார்கள்.

சில வீடுகளில் பிள்ளைகளைப் பார்த்து “எங்காவது போய்த் தொலை” என்று திட்டுவார்கள். இதுவும் திருத்தப்பட வேண்டிய வழக்கங்களில் ஒன்று.

“எண்ணத்தின் அளவே செயல்” என்பார்கள். எண்ணங்களும் பேச்சுக்களும் நல்லவைகளாக இருந்தால்தான் நம்முடைய செயல்களும் நல்லதாக இருக்க முடியும்.

“யானை வேட்டுவன் யானையும் பெறுமே குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே”

என்பது புறநானூற்றுப் பாடல். யானையை வேட்டையாடி வருவேன் என்று காட்டுக்குப் போகின்றவனின் நோக்கம் நிறைவேறுவது திண்ணம். அவனுள் ஏற்படும் அந்த உயர்ந்த எண்ணத்தின் மனபலமானது அவனுக்குள் ஒரு உத்வேகத்தை உண்டு பண்ணுகிறது. முயலை வேட்டையாடி வருவேன் என்று போகின்றவன் வெறுங்கையோடுதான் வருவான். எண்ணம் எப்பொழுதும் உயர்ந்ததாக இருத்தல் வேண்டுமென்பது இப்பாடலின் கருத்து.

கம்பராமாயணம், பெரியபுராணம், நெடுநல்வாடை போன்ற நூல்களில் ‘வையம்,’ அல்லது ‘உலகம்’ என்ற மங்கல வார்த்தைகளோடு தொடங்குவதைக் காணலாம் இவைகளை “அமுதச் சொற்கள்” என்று பகுத்தறிந்து சொல்வார்கள்.

இதே ‘சென்டிமென்ட்’ தமிழ்த் திரையுலகிலும் பரவலாகவே காணப்படுகிறது. படப்பதிவின் ஆரம்பத்தில் “வெற்றி! வெற்றி! வெற்றி!” என்று சொல்வதைப் போன்றோ அல்லது “ஆத்தா நான் பாஸாயிட்டேன்” என்றோ வசனங்களை பதிவு செய்வது வழக்கமான ஒன்றாக ஆகி விட்டது.

‘தூறல்நின்னு போச்சு’ என்றெல்லாம் படப் பெயர் வைப்பது முறையல்ல. பலபேர்களின் வாயிலிருந்து இவ்வார்த்தைகள் வரப்போக மழையே இல்லாமல் போய்விட்டது என்று ‘டணால்’ தங்கவேலு ஒரு பேட்டியில் கூறியிருந்தார். நல்ல வார்த்தைகள் மாத்திரமே நம் வாயிலிருந்து வெளி வரவேண்டுமென்பது அவரது ஆதங்கம்.

“பாடமாட்டேன்.. நான் பாடமாட்டேன்” என்ற ஒரு பாடலை நடிப்பிசைப் புலவர் K.R. ராமசாமி ஒரு படத்திற்காகப் பாடினார். அவரது வாக்கு பலித்ததாலோ என்னவோ மேற்கொண்டு அவருக்கு படத்தில் நடிக்க வாய்ப்பே கிடைக்கவில்லை. இத்தகவலை கண்ணதாசன் ஒரு கூட்டத்தில் சொன்னார்.

பாலச்சந்தர் இயக்கிய ‘நீர்க்குமிழி’ என்ற படத்திற்காக வி.குமார் இசையமைக்க பாடல் பதிவு தொடங்குகிறது. சீர்காழி கோவிந்தராஜன் “ஆடி அடங்கும் வாழ்க்கையடா” என்று பாடத் தொடங்கியதும் மின்சாரம் நின்று போனதாம்.

டி.எம்.எஸ். மேடையில் எந்தப் பாடலை வேண்டுமானாலும் பாடுவார். ஒரே ஒரு பாட்டைத் தவிர. டி.ராஜேந்தரின் ‘ஒருதலை ராகம்’ என்ற படத்தில் அவர் பாடிய நேரம் பொல்லாத நேரம் போலும். “நான் ஒரு ராசியில்லா ராஜா” என்று அவர் பாடியதற்குப் பிறகு அவருக்கு இறங்குமுகம்தான்.

பெருந்தலைவர் காமராஜர் இறந்து போவதற்கு முன்பு கடைசியாக சொன்ன வார்த்தை “விளக்கை அணைத்து விடுங்கள்” என்பது. இதனை தீர்க்கதரிசன வார்த்தைகள் என்று சில பத்திரிக்கைகள் அப்போது எழுதின. ஒத்தமைவு (Coincidence) என்பதைத் தவிர வேறென்ன இதில் இருக்க முடியும்?

“அழிந்துடுவாய் வேண்டாம்; கெட்டுடுவாய் கெட்டுடுவாய் என்றால் கெட்டேபோவார்கள்” என்று கண்ணதாசன் ஒரு முறை கூறியிருக்கிறார். அப்படிப்பட்ட அறிவுரை வழங்குகின்ற கவிஞர் பிறிதோரிடத்தில்

“மன்னவன் பசியால் சாக
மடையர்கள் கொழுத்து வாழ
தென்னவர் நாடு செய்தால்
தீயில்தான் சாம்ப லாகும்
அன்னையே தமிழே இந்த
அறம் வெல்ல வேண்டு கின்றேன்”

என்று தென்னவர் நாடு தீயில் சாம்பலாகுமென அறம் பாடுகிறார். அவர் முரண்பாடுகளின் மொத்த உருவமென்பது இதிலிருந்து வெட்ட வெளிச்சமாகிறது.

பாரதி மாத்திரம் என்னவாம்? தமிழ் வாழ வேண்டும் என்ற உள்ளூர எண்ணம் கொண்டிருந்த அந்த மகாகவிஞன் ‘மெல்லத் தமிழினி சாகும்’ என்று சொல்லியிருக்கக் கூடாதுதான். இன்று ஊடகங்களில் உச்சரிக்கப்படும் தமிழை காது கொடுத்து கேட்கையில் பாரதியின் வாக்குதான் பலித்து விட்டதோ என்ற ஐயம்தான் எழுகிறது.

எனது நண்பர் ஒருவர் எதற்கெடுத்தாலும் “எழவு” என்ற வார்த்தையை பயன் படுத்துவார். “என்ன இது ஒரே எழவா போச்சு” – இது அவர் வாயிலிருந்து அடிக்கடி வந்து விழும் வாசகம். ஒருநாள் அவருடைய வீட்டில் உண்மையிலேயே ஒரு “எழவு” விழுந்து விட்டது, அதற்குப் பிறகு அவரது வாயிலிருந்து அந்த வார்த்தை அறவே போய் விட்டிருந்தது.

அறம் பாடிய புலவர்கள் என்று தமிழ் இலக்கியத்தில் நாம் படித்திருக்கிறோம். அறம் என்றால் தர்மம். அரம் என்றால் சாபம். அரம் பாடிய புலவர்கள் என்று சொல்வதே சரியான வழக்கு என்று சிலர் வாதாடுவதுண்டு. எது சரியான சொற்பதம் என்று ஆராய்ந்து நான் குழம்பிப் போனதுதான் மிச்சம். பிரபலமான படைப்பாளிகள் அனைவரும் “அறம்” என்றே கையாண்டிருப்பதால் நானும் “அறம்” என்றே இங்கே கையாண்டிருக்கிறேன்.

“அவன் பொடி வைத்து பேசுகிறான்” என்று பலர் சொல்ல கேள்விப் பட்டிருக்கிறோம். உள்ளர்த்தம் வைத்து பேசுவதைத்தான் இப்படிச் சொல்கிறோம். இதே போன்று அறம் வைத்து பாடுவதென்றால் பிறருக்கு கேடு ஏற்படும் வண்ணம் வசை பாடுவது.

அறம் பாடுவதில் பலவகை உண்டு. கடுமையான வார்த்தைகள் அறியாத வண்ணம் வாயிலிருந்து வந்து விழுந்து விடுவது முதல் வகை. போற்றுவது போலும் தூற்றுவது போலும் இருபொருள் பட பாடுவது இரண்டாவது வகை. வேண்டுமென்றே பிறர் நாசமடையும் வண்ணம் நேரடியாகவே சாபம் விடுவது மூன்றாவது வகை. தனக்குத்தானே தீமை உண்டாவதற்கு தானே அறம் பாடிக் கொள்வது நான்காவது வகை.

ஒரு தமிழ்ப் பண்டிதர் தன் மாணவனைப் பார்த்து கீழே அமர்ந்து படி என்ற அர்த்தத்தில் “இரும் படியும் பிள்ளாய்” என்று சொல்வதற்கு பதிலாக சேர்த்தாற்போல் “இரும்படியும் பிள்ளாய்” என்று சொல்லப்போக அவர் வார்த்தை பலித்து பிற்காலத்தில் அவன் இரும்படிக்கும் தொழிலாளியாக ஆகிவிட்டானாம். அறியாமல் வரும் வார்த்தைகள் சிற்சமயம் “சொற்பலிதம் “ ஆகி விடுவதுண்டு.

இன்னொரு தமிழ்ப்புலவர் தன் வறுமையை போக்க வேண்டி ஒரு தனவானிடம் சென்று ஒரு தொகை கேட்டிருக்கிறார். புலவரைப் பார்த்து “காசு என்றால் உனக்கு அவ்வளவு லேசாக போய் விட்டதா?” என்ற பொருளில் “காசா லேசா?” என்று இளக்காரமாக தனவான் கூறியிருக்கின்றார். பணம் படைத்தும் மனம் படைக்காத கருமியின் வார்த்தைகள் புலவரின் உள்ளத்தை முள்ளாய் தைத்துவிட “காசாலே சா” என்று அவர் சொன்ன வார்த்தைளை வைத்தே சாபம் விட்டாராம்.

பிறர் வாயிலிருந்து இதுபோன்ற வார்த்தைகள் வந்து வீழாத வண்ணம் நம்மை நாமே காத்துக் கொள்வது நம் தலையாய கடமை. ஏனெனில் வஞ்சிக்கப்பட்டவனின் உள்ளத்திலிருந்து வேதனை கலந்து வெளிப்படும் வார்த்தைகளுக்கு இறைவனின் சபையில் உடனடி அங்கீகாரம் கிடைத்து விடுகிறது.

“தேரா மன்னா! செப்புவதுடையேன்” என்று பாண்டியன் நெடுஞ்செழியனின் சபையில் தன் கணவனுக்கு நேர்ந்த கொடுமைக்கு எதிராக வாதாடுகிறாள் கண்ணகி. தீர ஆராயாமல் தவறான ஒரு தீர்ப்பினை கோவலனுக்கு தந்து விட்ட மன்னன்

“யானோ அரசன், யானே கள்வன்கெடுக என் ஆயுள்”

என்று தனக்குத்தானே அறம் பாடிக் கொண்டு உயிரை மாய்த்துக் கொண்ட நிகழ்வை சிலப்பதிகாரத்தில் நாம் காண்கிறோம்.
அதே போன்று நல்லோரை விலக்கி தீயோரை தீக்கிரையாக்குவதற்கு கண்ணகி விடும் சாபம் இவ்வாறாக இருக்கிறது :

“பார்ப்பார் அறவோர் பசுப் பத்தினிப் பெண்டீர்மூத்தோர் குழவி எனும் இவரை கைவிட்டுத்தீத்திறத்தார் பக்கமே சேர்க ..”

என்று கண்ணகி விட்ட சாபத்தில் மதுரை மாநகரமே தீப்பிடித்த கதையை தன் காவியத்தில் வடிக்கிறார் இளங்கோவடிகள்.

முன்னொரு காலத்தில் நாகூரில் வாழ்ந்த இஸ்லாமியக் கவிஞர் ஒருவர் மீது வேறொருவர் பொய்வழக்கை தொடர்ந்து விட, வெகுண்டுப் போன கவிஞர்

“செல்லா வழக்கை என்மீது தொடுத்தானோ?
அல்லா விடுவானோ அம்புவீர்
நில்லாமல் போகும் அவன் வாழ்வும்…”

என்று அறம் பாட, பாடப்பட்டவரின் சந்ததியே சின்னா பின்னமாகி விட்டதாம்.
சதாவதானி செய்குத் தம்பிப் பாவலர் தம்புச் செட்டி என்பவரிடம் ரமலான் மாதத்தில் பள்ளிவாயிலில் வினியோகிக்க வேண்டி மாம்பழம் தருவித்திருக்கிறார். அவை யாவுமே அழுகிப்போன பழங்களாக இருக்க பாவலருக்கு வந்ததோ கோபம்.

“கும்மியடிப் பெண்ணே கும்மியடி
தம்புச்செட்டி தலைதெறிக்க கும்மியடி”

என்று பாட அச்சமயம் மாடிப்படியிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த செட்டியார் கீழே உருண்டு விழுந்தார் என்பார்கள்.

வேறொரு முஸ்லிம் புலவர் சாத்தான் குளம் என்ற ஊருக்கு வந்த போது அவருக்கு அங்கு கொடுமை நிகழ்ந்துப் போக மனம் புழுங்கி

சாத்தான் குளத்தாரே சங்கைகெட்ட தீனோரேசோத்தாரே நீங்கள் சுகம்பெறவே மாட்டீர்கள்”

என்று அறம் பாடிச் சென்றதாக ஏடுகள் பகர்கின்றன.
தமிழ்ச் சங்கத் தலைமைப் புலவராக நக்கீரர் கோலோச்சிக் கொண்டிருந்த காலம். குயக் கொண்டான் என்னும் வடமொழிப் புலவனொருவன் தமிழகத்திற்கு வருகை புரிகிறான். தமிழ் மொழியை நீசர் பாஷை என்றும் வடமொழிக்கு நிகர் அது சற்றும் இல்லையென்றும் இழித்தும் பழித்தும் கூறுகிறான். தமிழைத் தரக்குறைவாக கூறுவதைக் கேட்ட நக்கீரருக்கு வந்த கோபத்தை கேட்கவா வேண்டும்? சினங் கொண்ட நக்கீரர்,

“முரணில் பொதியன் முதற்புத்தேள் வாழிபரண கபிலரும் வாழி - அரணியஆனந்த வேட்கையான் வேட்கோக் குயக்கொண்டான்ஆனந்தஞ் சேர்க்க சுவாஹா”

என்று அறம் பாடி விடுகிறார். வடமொழிப் புலவனின் உடல் தீயிற் பட்டால் போல எரியத் தொடங்கி விடுகிறது.

பாடுவார் முத்தப்பச் செட்டியார் என்ற புலவரொருவர் செட்டிநாட்டுப் பகுதியிலுள்ள செவ்வூர் என்ற ஊருக்குச் சென்றிருக்கிறார். நண்பகல் நேரம். புலவருக்கு கடும்பசி. அவரவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இவரை யாரும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. மனிதருக்கு வந்ததே கோபம்;

“எவ்வூர்க்குப் போனாலும் எத்தேசம் சென்றாலும்
செவ்வூர்க்குச் செல்ல மனம் செல்லாதே - அவ்வூரார்
பாத்திருக்க உண்பார்; பசித்தமுகம் பாரார்;
கோத்திரத் துக்கேற்ற குணம்.”

- என்று பாடி விட்டார்.

அட்டூழியம் புரிந்துக் கொண்டிருந்த லிங்காநாயக்கன் மீது பாடுவார் முத்தப்பச் செட்டியார் அறம் வைத்து பாடிய வசைப்பாடல் இதோ :

“பத்தலார்க்கு உதவுபதி எரசு மேவும்
பாக்கியனே இம்முடிலிங்கேந்த்ரா நின்,
தத்துவாம் பரிகளெங்கே கிரீடமெங்கே
தண்டிகை பல்லக்குமெங்கே தனந்தான் எங்கே,
மெத்தை கொண்ட வீடுமெங்கே யதனுள்மேவும்
மேலான பவுசோடு பண்டாரமெங்கே
சுத்தவீரங்களெங்கே சும்மா போச்சோ
தொப்பைவீரனை வதைத்த தோடந்தானே!”

என்று சபிக்க அவருடைய செல்வமும் பதவியும் பறிபோய் துன்ப நிலையை அடைந்தார் என்ற செய்தியை ஏடுகள் மூலம் அறிகிறோம்.

‘ஆசுகவி வீசு புகழ்க் காளமேகம்’ என்றும் ‘வசைக்கொரு காளமேகம்’ என்றும் அழைக்கப் பட்டவர் கவிக்காளமேகப் புலவர். அபார கவித்திறன் பெற்றிருந்த இப்புலவரை கண்டால் எல்லோருக்கும் குலை நடுங்கும். கோபம் வந்தால் புலவர் அறம் பாடிவிடுவார், எங்கே ஏதாவது கடுமையானதொரு வார்த்தை அவர் வாயிலிருந்து வந்து விடுமோ என்று அஞ்சி அவர் கேட்கும் முன்பே அவருக்கு உணவளிப்பார்களாம்.

ஒருநாள் நாகை வீதியில் சிறுவர்கள் சிலர் பாக்கு கொட்டைகளை வைத்து ‘கோலி விளையாட்டு’ விளையாடிக் கொண்டிருக்க, பசிபொறுக்க மாட்டாத காளமேகம் “சோறு எங்கே விக்கும்?” என்று கொச்சைத் தமிழில் சிறுவர்களுக்கு விளங்கும் வண்ணம் கேட்டிருக்கிறார்.

நாகை வாழ் சிறுவர்களுக்கு கிண்டல் பேச்சுக்கு சொல்லியா கொடுக்க வேண்டும்? “சோறு தொண்டைக் குழியிலே விக்கும்” (விக்கல் எடுக்கும்) என்று நக்கல் செய்து விட்டார்கள். சினமடைந்த புலவர் ஒரு கரித்துண்டை எடுத்து தெருச் சுவற்றில் எழுத ஆரம்பித்து விட்டார்.

“பாக்கு தெறித்து ஆடும் பாலருக்குநாக்கு….”

என்று எழுதிக் கொண்டிருக்கும் போதே பக்கத்திலிருந்த கோவிலில் ‘ஆலயமணி’ ஒலிக்க புலவர் அங்கே பிரசாதம் வாங்கிச் சாப்பிட விரைகிறார். அதைக் கண்ட சிறுவர்கள் முற்றுப் பெறாமால் இருந்த வாக்கியத்தில்

“பாக்கு தெறித்து ஆடும் பாலருக்கு
நாக்கு தமிழ் மணக்கும் நன்நாகை”

என்று எழுதி வைத்து விட்டனர். திரும்பி வந்து பார்த்த காளமேகம் திகைத்துப் போய் நின்று விட்டார். ஏனெனில்

“பாக்கு தெறித்து ஆடும் பாலருக்குநாக்கு தெறிக்க …..”
என்று வசைபாடும் எண்ணத்தில் எழுதத் தொடங்கிய வரிகளை தலக்கீழாக மாற்றிவிட்ட சிறுவர்களின் சமயோசித புத்தியை எண்ணி வியந்துப் போகிறார்.

கண்ணதாசனின் அண்ணன் மகனுக்கு மகன் பிறந்திருந்தான். கவிஞர் தன் பேரக் குழந்தையைக் காணச் செல்கிறார். தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் தூக்கத்தை கலைக்க வேண்டாம் என்கிறார்.

“அவனை எழுப்பாதீர்அப்படியே தூங்கட்டும்”

என்று தொடங்கி குமுதம் இதழில் ஒரு பாட்டாகவே வடித்து விட்டார். அவர் எழுதிய ஏழே நாட்களுக்குள் அந்தக் குழந்தை இறந்து விடுகிறது.

“அவனை எழுப்பாதீர்;அப்படியே தூங்கட்டும்
என்றே நான் எழுதியதன்
ஈரம் உலரவில்லை;
ஏழுநாள் ஆகுமுன்னே
இளங்கன்று தூங்கி விட்டான்!
அறம் பாடி விட்டேனோ!
அறியேன்”

என்று துடிதுடித்துப் போய் விடுகிறார். அறம் பாடும் திறம் தனக்குமுண்டு என்ற கவிஞரின் கற்பனையாகவும் இது இருக்கக் கூடும்
தண்டிவர்மனின் மகன், மூன்றாம் நந்திவர்மன் என்ற பல்லவ மன்னனுக்கு தன்மேல் அறம்பாடி கேட்கவேண்டும் என்ற விபரீத ஆசை வந்தது. நந்திவர்மனின் தம்பி, நாட்டை அபகரிக்க வேண்டி தன் தமையனின் தமிழார்வத்தை பயன்படுத்தி அறம் பாடுதலை கேட்க ஏற்பாடு செய்தான். அரண்மனையில் இருந்து மயானம் வரை நூறு பந்தல்கள் போடப்பட்டன. நூறாவது பந்தலின் மேல் நந்திவர்மனை இருத்தி புலவரைக் கொண்டு அறம் பாடசெய்தான். ஒவ்வொரு பாடலின் போதும் ஒரு பந்தல் எரிந்து போனது. இறுதியாக

“வானுறு மதியை அடைந்ததுன் வதனம்
வையகம் அடைந்ததுன் கீர்த்தி
கானுறுபுலியை அடைந்ததுன் வீரம்
கற்பகம் அடைந் ததுன் கரங்கள்
தேனுறுமலராள் அரியிடம் சேர்ந்தாள்
செந்தழல் புகுந்ததுன் மேனி
யானுமென்கவியும் எவ்விடம் புகுவேம்
எந்தையே! நந்தி நாயகனே…”

என்ற பாடலை அப்புலவன் பாடியதும், பந்தல் தீப்பற்றி எரிந்தது. மன்னனும் தீயில் சிக்கி உயிர்நீத்தான். இதனை நந்திக்கலம்பகத்தில் காணலாம்.

“செய்யாத செய்த திருமலைரா யன்வரையில்
அய்யா அரனே அரைநொடியில் - வெய்யதழல்
கண்மாரி யால்மதனைக் கட்டழித்தாற் போல்தீயோர்
மண்மாரி யால்அழிய வாட்டு.”

என்று காளமேகம் அறம் பாட திருமலைராயன் ஆண்ட ஊரை நாசமுறச் செய்தான் என்ற தகவல் வேறு நமக்குக் கிடைக்கிறது.

அக்காலத்தில் அறம் பாடிய புலவர்கள் என்று பலபேர்கள் இருந்திருக்கிறார்கள். ஜவ்வாதுப் புலவர், ‘வெண்பாப்புலி’ வீர கவிராயர், வசைக்கவி ஆண்டான், சிங்கம்புணரி சித்தர் முத்தவடு நாதர், பாடுவார் முத்தப்பச் செட்டியார், கவிக் காளமேகம், இரட்டைப் புலவர்கள், என்று பட்டியல் நீண்டுக் கொண்டே போகிறது.

இது தமிழ் மொழியின் சிறப்பென்றும், தமிழ் மொழியைக் கையாண்ட புலவர் பெருமான்களின் கவியாற்றல் என்றும் கற்றவர்கள் கருத்துரைக்கிறார்கள். இதனால்தானோ என்னவோ கவிபாடும் வல்லுனர்களிடம் கவித்திறனோடு சேர்த்து கர்வத்தையும் காண முடிகிறது. “படைப்பதினால் என் பெயர் இறைவன்” என்பார் கண்ணதாசன். பிறிதோரிடத்தில்

“கவிஞன் யானோர் காலக் கணிதம்
புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
ஆக்கல் அளித்தல் அழித்தல் இம்மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை! அறிக!
நானே தொடக்கம்; நானே முடிவு!
நானுரைப்பது தான் நாட்டின் சட்டம்!”

இதனைக் கவிச்செருக்கு என்பதா? அல்லது தன் கவியாற்றலின் மேல் அவர் கொண்டிருந்த அதிகப் படியான மமதை கலந்த நம்பிக்கையா என்று சொல்லத் தெரியவில்லை. மேலும் அவர் நிதானத்தில்தான் இதை எழுதினாரா என்ற சந்தேகம்கூட பிறக்கிறது,

‘அறம் பாடுவது’ என்ற ஒரு துருப்புச்சீட்டினை வைத்துக் கொண்டே மக்களை அச்சுறுத்தி காரியத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சில கீழ்த்தரமான புலவர்களும் அக்காலத்தில் இருந்திருக்கிறார்கள். இம்முறைகேடுகளை தமிழ்த் தாத்தா உ.வே.சா. ஓரிடத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

எதற்குத்தான் அறம் பாடுவதென்ற ஒரு வரைமுறை இன்றியும் போயிருக்கிறது. காளமேகப்புலவர் இதற்கு நல்லதோர் உதாரணம். இஞ்சிகுடி என்ற ஒரு சிற்றூருக்கு அவர் சென்றிருந்த சமயத்தில் கலைச்சி என்ற தாசியிடம் உறவு கொள்ள ஆசைப் பட்டிருக்கிறார். இவரை அவள் உதாசீனப் படுத்த உடனே அவள் மீது அறம் பாடி விட்டார்.

“ஏய்ந்த தனங்கள் இரண்டும்இரு பாகற்காய்
வாய்ந்தஇடை செக்குலக்கை மாத்திரமே - தேய்ந்தகுழல்
முக்கலச்சிக் கும்பிடிக்கும் மூதேவியாள் கமலை
குக்கலிச்சிக் கும்கலைச் சிக்கு.”

அவலட்சணம் பொருந்திய மூதேவி கலைச்சியை நாய்தான் விரும்பும் என்ற அர்த்தத்தில் பாடலை முடித்திருப்பார். பயந்துப் போன கலைச்சி அவருடைய ஆசைக்கு இணங்க காளமேகம் ‘பல்டியடித்து’ அவளைப் புகழ்ந்து தொலைத்தாராம்.

தகாத செயல்களுக்குக் கூட தமிழ் மொழியின் தெய்வீகத் தன்மையை புலவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள் என்றால் அது தமிழுக்கே இழுக்குதானே?

அல்லலுற்றவன் அழுத கண்ணீர் கொடுஞ்செயல் புரிந்தவனை அழித்துவிடும் என்பது இயற்கையின் விதி. அந்த சாபம்/ அறம் தமிழில்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. தமிழுக்கு மட்டுமே அந்த ஆற்றலுண்டு என்பதில் எனக்கு உடன்பாடில்லை. தவறு செய்தவனை தண்டிக்க இறைவனுக்கு தமிழ்ப் புலவனது பரிந்துரைதான் தேவை என்பதில்லை. தமிழின் சிறப்பாக கூறப்படும் அறம் பாடும் கலையில் மிகைப் படுத்தப்பட்ட சில விஷயங்கள் காப்பிய நடைக்காக மெருகேற்றப்பட்டு இருப்பதென்னவோ முற்றிலும் உண்மை

நன்றி : திண்ணை
மே 1, 2008

Read more...

Friday, 5 December 2008

இஸ்லாமும் தமிழிலக்கியமும்

முனைவர்.பீ.மு. அஜ்மல்கான்

இஸ்லாமியத் தமிழிலக்கியங்கள் என்பன இஸ்லாமிய மார்க்கக் கருத்துக்களை உள்ளடக்கமாகக் கொண்டெழுந்த தமிழ்மொழி இலக்கியங்களே. ஒரு மொழியில் ஒரு சமயத்தைச் சார்ந்த இலக்கியங்கள் தோன்றுவதற்கு அடித்தளமாக இருப்பது மொழிக்கும் சமயத்திற்குமுள்ள உறவு நிலையே. இவ்வுறவு நிலை பலப்படுத்தப்பட்ட பின்னரே எந்தவொரு மொழியிலும் ஒரு குறிப்பிட்ட சமய இலக்கியங்கள் தோன்றுவதற்கான சூழல் அதிகரிக்கும். இவ்வகையில் இன்றைக்குத் தமிழிலக்கிய உலகில் சுட்டிக்காட்டத்தக்க எல்லைப் பரப்பினைப் பெற்றுச் சிறக்கும் இஸ்லாமியத் தமிழிலக்கியங்களின் தோற்ற வளர்ச்சிக்கு, இஸ்லாம் தமிழகத்துடன் கொண்ட தொன்மை உறவே காரணமாக இருந்திருக்கும். இத்தொன்மை உறவினையும் அதன் பயனாய் மலர்ந்த முதல் இஸ்லாமியத் தமிழிலக்கியத்தையும் ஏனைய பிற இஸ்லாமிய இலக்கியங்களையும் சுட்டிக்காட்டுவதே இங்கு நோக்கமாகும்.
தமிழுக்கும் இஸ்லாத்திற்கும் இணைப்பு ஏற்படுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழகத்துடன் நெருங்கிய தொடர்பினை அரபு நாட்டவர்கள் பெற்றிருந்தனர். எனவே இஸ்லாமியத் தமிழிலக்கிய வரலாற்றிற்கான அடித்தளமாக இருந்தது அரபு நாட்டவர்களின் தமிழக வருகை எனலாம். இவ்வருகைநிலை இஸ்லாம் இவ்வுலகில் பரவுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இருந்திருக்கிறது. பெருமானார் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் தோன்றுவதற்கு வெகு காலத்துக்கு முன்பே அரபு நாட்டிற்கும் தமிழகத்திற்குமிடையே வியாபாரத் தொடர்புகள் இருந்திருக்கின்றன. இத்தொடர்பு பெருமானார்(சல்) அவர்கள் காலத்திலும் தொடர்ந்து, நீடித்தது, பின் வலுப்பெற்றது. அரபு, தமிழக மக்களது தொடர்பிற்கான அகச்சான்றுகள் பலவும் வரலாற்றிலும், இலக்கியத்திலும் விரவிக் கிடக்கின்றன.

அரபு மக்கள் கிழக்கு, மேற்கு வணிகத் துறையில் பெரும் முனைப்பாக இருந்ததை வரலாற்றுச் சான்றுகள் நிரூபிக்கின்றன. தமிழகத்தைப் பொருத்தவரையில் பாண்டிய நாட்டின் துறைமுகப் பட்டினங்களே தூர கிழக்கு நாடுகளுக்கும் மேலை ஆசிய நாடுகளுக்கும் இடையிலான கடல் வணிகத் தொடர்பிற்குக் களனாக விளங்கின. அவற்றுள் முக்கியமானது பவுத்திர மாணிக்கப் பட்டினம். மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள புவுத்திர மாணிக்கம்பட்டினம் ராமேஸ்வரம் அல்லது தனுஷ்கோடியுடன் முடியும், இதற்கு நேர் வடக்கில் அமைந்துள்ள வியாபாரத்தலமாக விளங்கியது தேவிபட்டினம். தென்காயல் என்று அழைக்கப்பட்ட புத்திர மாணிக்கப்பட்டினம் மேற்கு ஆசிய நாடுகளிலிருந்து வரும் வியாபாரத் தொடர்புகளுக்கும் வடகாயல் என்று அழைக்கப்படும் தேவிபட்டினம் தூர கிழக்கு நாடுகளின் வியாபாரத் தொடர்புகளுக்கும் மையமாக விளங்கின. பாண்டியர் ஆட்சிக் காலத்தில் பவுத்திர மாணிக்கப்பட்டினம், தேவிபட்டினம் ஆகிய இரு துறைமுகங்களும் வெளிநாட்டவரின் வியாபாரத் தொடர்பிற்கு இடமாக விளங்கியதை வரலாற்றுச் சான்றுகள் உணர்த்துகின்றன.

பாரசீக வளைகுடாவில் உள்ள கைஸ் என்னும் தீவு இந்நாளைய ஹாங்காங் துறைமுகம் போலப் பெரும் வணிகத் தலமாக விளங்கியது. அன்றைய வணிகத் தலமான கைஸ் துறைமுகம், புவுத்திர மாணிக்கப்பட்டினம், தேவிபட்டினம் முதலானவைகள் ஐரோப்பியர்களுக்கும் அரபு தேசத்தவர்களுக்கும் பண்டமாறறு வியாபாரத்திற்குரிய மையமாகத் திகழ்ந்தன. அன்றைய பாண்டிய நாட்டில் அரபு தேத்து வணிகர்கள் செல்வாக்குப் பெற்றிருந்தனர். அதன் பயனாய் அவர்கள் பாண்டிய நாட்டுக் கடற்கரைப் பட்டினங்களிலே குடியேறத் தொடங்கினர். அரபு நாட்டு மக்கள் தமிழகத்துடன் சங்க கால இலக்கியங்களிலே நிரம்பக் காணலாம். சங்க இலக்கியங்களில் அரபு தேசத்து வணிகர்கள் ‘யவனர்’ என்னும் சொல்லாட்சியில் குறிக்கப்பட்டுள்ளனர். யவனரின் தமிழக வருகை வியாபார நோக்கமாகவே அமைந்தது. இதனை அகநானூற்றுப் பாடல் இவ்வாறு குறிக்கிறது.

கள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்கயவனர் தந்த வினை மாண்கலம்பொன்னெடு வந்து கறியொடு பெயரும்வளங்கெழு முசிறி… (149)
இங்குக் கறி என்னும் சொல் மிளகினையும் முசிறி என்பது முசிறிப்படடினத்தையும் குறிப்பதாகும். எனவே மிளகு போன்ற வாசனைப் பொருட்களால் ஈர்க்கப்பட்டே யவனர்கள் கிழக்கு நாடுகளுக்கும், குறிப்பாகத் தமிழகத்திற்கும் வருகை தந்தனர். அவர்களின் வியாபாரத் தொடர்பே நாளடைவில் தமிழகத்தில் அரபு நாட்டவரின் குடியேற்றமாகத் தொடங்கியது. இந்தக் குடியேற்றம், இஸ்லாம் இவ்வுலகில் பரவுவதற்கு முன்னரே நடைபெற்றிருத்தல் வேண்டும். ‘கிறித்தவ ஆண்டு தொடங்கியதற்கு முன்னரேயே அரபிகள் இலங்கையிலும் தென் இந்தியாவிலும் குடியேறினர்’ என்று பிளனி என்னும் வரலற்றாசிரியர் கூற்றும் மேற்கூரிய கருத்திற்கு அரண் செய்வதாக உள்ளது.

தமிழகத்தில் இஸ்லாத்தைப் பரப்பியவர்களும் இன்றைய முஸ்லீம்களுக்கு முன்னோடியாக விளங்கியவர்களும் மேற்குறித்த வியாபார நிமித்தமாக இங்கு வந்த குடியேறிய அரபியர்களே. அத்தகையவர்களின் குடியேற்றம் பெருமானார் நபிகள் நாயகம் அவர்களது காலத்திலும் தொடர்ந்து வலுப்பெற்றது. வியாபார நிமித்தமான குடியேற்றம் நபிகள் காலத்தில் சமயச்சார்பாகவும் அமைந்து தொடரலாயிற்று. நபிகள் நாயகம் (சல்) அவர்களின் தோழர்களான தமீமுல் அன்சாரி அவர்களினதும் அபீலக்காங் அவர்களினதும் கல்லறைகள் தமிழகத்தில் இருப்பது இஸ்லாத்துக்கும் தமிழகத்திற்கும் உள்ள அப்போதைய நெருங்கிய உறவை எடுத்துக்காட்டுகிறது.

இவ்வுறவு நிலையை எடுத்துக்காட்ட எத்தனையோ அகச் சான்றுகளைத் தமிழகத்தில் காணலாம். ஆனால் ஆரம்பக் காலத்தில் தமிழக முஸ்லிம்கள் வியாபாரக் கண்ணோட்டத்திலேயே அவர்களது கவனத்தைச் செலுத்தினர். பின்னர் நாளடைவில் குடியேற்றம் அதிகரிக்க அதிகரிக்க அது மார்க்கத்திலும் அமையலாயிற்று. இறைநேயச் செல்வர்களும், மார்க்கப் பெரியோர்களும் இஸ்லாமியக் கருத்துகளைப் பரப்புவதை முதற்பணியாகக் கொண்டு செயலாற்றினார்கள். இதற்கு வரலாற்றுப் பின்புலத்தில் தமிழகத்தில் இஸ்லாம் இஇருந்த காலக்கட்டத்தில் தமிழுக்கும் ஏனைய பிற இந்தியச் சமயங்களுக்கும் உள்ள தொடர்பினை இங்குள்ள முஸ்லிம் பெருமக்கள் உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கினார்கள். இதன் பயனாகவே தமிழை அடிப்படையாகக் கொண்டு தங்களது சமயக் கொள்கைகளை வளர்த்துக் கொள்ளும் உத்தியையும் இங்குள்ள முஸ்லிம் சமயப் பெரியோர்கள் பின்பற்றத் தொடங்கினார்கள். அதுவே இஸ்லாமும் தமிழும் இணையும் காலக்கட்டமாக உருவானது. இதன் பயனாய் இஸ்லாம் தமிழகமெங்கும் பரவலாயிற்று. இஸ்லாமிய கருத்துக்களைப் பரப்புவதற்கு மொழியின் தேவையை உணரத் தலைப்பட்ட பின்னரே இஸ்லாமியத் தமிழிலக்கியங்களின் தோற்றம் தமிழிலக்கிய வரலாற்றில் உதயமாயிற்று.
இஸ்லாமியத் தமிழிலக்கிய வரலாற்றிற்கு அச்சாரமிட்ட பெருமை பல்சந்தமாலை என்னும் இலக்கியத்தைச் சாரும். பல்சந்தமாலை என்பது இஸ்லாமியத் தமிழிலக்கியம் என்பதைப் பல்வேறு சான்றாதாரங்களின் அடிப்படையில் அறிய முடிகிறதே தவிர நூல் முழுமையும் நமக்குக் கிடைத்தில. இவ்விலக்கியத்துள் இடம்பெற்றுள்ள எட்டுப் பாடல்கள் மட்டுமே நமக்குக் கிடைத்துள்ளன.

பழங்காலத்தில் தோன்றிய அகப்பொருள் பற்றிய ஒரு நூலுக்கு எழுதப்பட்ட உரையிலேயே மேற்குறித்த எட்டுப் பாடல்களும் சான்றுச் செய்யுட்களாக இடம்பெற்றுள்ளன. இவ்வகப் பொருள் நூல்கூட இன்னும் தமிழிலக்கிய ஆய்வாளர்களால் முழுமையாகக் கண்டுகொள்ள முடியவில்லை. இவ்வகப் பொருள் நூலினை வையாபுரிபிள்ளை ‘களவிற் காரிகை’ என்று பெயரிட்டு 1931இல் பதிப்பித்துள்ளார். இந்நூலின் ஒரே ஒரு கையெழுத்துப் படி சென்னையில் உள்ள அரசாங்கத்தின் தொன்னூல் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டிருந்தது. இதில் இடம்பெற்றிருந்த ஆங்கிலக் குறிப்பினால் இ·து ஆழ்வர் திருநகரி மலையப்பிள்ளைக் கவிராயருக்குரிய ஏட்டுப் படிகளுள் ஒன்றாக இஇருந்தது என்பதும் அவ்வேட்டுப் படியின்றும் நாதமுனைப்பிள்ளை என்பவர் 1920ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பன்னிரண்டாம் தேதியில் படி எடுத்தார் என்பதையும் அறியலாம். அதுவே வையாபுரிப்பிள்ளை களவியல் காரிகை என்ற தலைப்பில் அவ்வகப்பொருள் துறைகளைப் பதிப்பித்து வெளியிட மூலமாக அமைந்தது.

இந்நூல் குறித்துப் பதிப்பாசிரியர் வையாபுரிப்பிள்ளை கூறும்போது ‘கையெழுத்துப் பிரதியில் இறையனாரகப் பொருட்துறையைச் சங்கச் செய்யுளாக உதாரணம் எழுதியது’ எனக் குறிப்பிட்டுள்ளதாகக் கூறியுள்ளார். ‘இக்குறிப்பு’ இன்னதென உணர்வதற்கு அதன் புறத்தே எழுதி வைக்கும் தலைக்குறிப்பாகவே கொள்ளவேண்டுமேயன்றி நூலில் பெயரல்ல என்பது திண்ணம்’ என்பதையும் குறிப்பிடும் வையாபுரிப்பிள்ளை, இவ்வகப்பொருள் நூலுக்கு இஇப்போது இடப்பட்டுள்ள பெயரான களவியற் காரிகை என்பது தம்மாலே சூட்டப்பட்ட பெயர் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார். எனவே தற்போது அவ்வகப்பொருள் நூலுக்குரிய பெயராக, வையாபுரிப்பிள்ளை சூட்டிய களவியற் காரிகை என்னும் பெயரே கொள்ளப்படுகிறது.

களவியற் காரிகையில் விளக்கப்படும் அகப்பொருட் துறைகளுக்கு எடுத்துக்காட்டுகள் பல்வேறு பழைய இலக்கியங்களிலிருந்து தரப்பட்டுள்ளன. இத்தகு எடுத்துக்காட்டுகளில் அடங்கியுள்ள எட்டுச் செய்யுட்கள் மட்டும் பல்சந்தமாலை என்னும் இலக்கியத்தைச் சார்ந்ததாகக் காணப்படுகிறது. நமக்குப் பல்சந்தமாலை என்னும் தனித்ததொரு இஇலக்கியம் கிடைக்காவிடினும் இச்சான்றாதாரச் செய்யுட்களைக் கொண்டு இத்தகு இலக்கியம் இருந்து அழிந்திருக்க வேண்டும் என்பதை நன்கு அறியமுடிகிறது.
இனி, பல்சந்தமாலை, இஸ்லாமியத் தமிழிலக்கியம் என்பதற்குரிய காரணங்கள் சிலவற்றைக் காண்போம். வையாபுரிப்பிள்ளை தம்முடைய பதிப்பின் இறுதியில் மேற்கோள் நூல்கள் பற்றியக் குறிப்பு ஒன்றை இணைத்துள்ளார். அதில் பல்சந்தமாலை குறித்து அவர் கூறும்போது பல்சந்தமாலை என்னும் பெயருடைய நூல் ஒரு சில செய்திகளைப் புலப்படுத்துகின்றது. பன்னிரு பாட்டியலில் பல்சந்தமாலை என்பது ஒரு பிரபந்த வகை எனக் கூறப்பட்டுள்ளது. எனவே இந்நூல் அப்பிரபந்த வகையை சார்ந்ததாக இருத்தல்கூடும். இந்நூல் வச்சிர நாட்டு வகுதாபுரியில் அரசு புரிந்த அஞ்சு வண்ணத்தார் மரபினனாகிய ஒரு முகமதிய முஸ்லிம் மன்னனைக் குறித்துப் பாடப்பெற்றதாகும். வகுதாபுரிக்கு இக்காலத்தில் காயற்பட்டினம் என வழங்குவர். வகுதாபுரிக்கு அந்து பார் என ஒரு பெயரும் இருத்தல் வேண்டும் என்பது பல்சந்தமாலையின் ஒரு செய்யுளால் புலப்படுகிறது’ எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பல்சந்தமாலைச் செய்யுட்களாகக் கிடைத்துள்ளனவற்றின் உள்ளடக்கக் கருத்துக்களை மையமாகக் கொண்டு இச்செய்யுட்கள் அடங்கிய நூல் இஸ்லாமியச் சமயத்தைச் சார்ந்த நூல் என்பதைத் தெளிவாக உணரலாம். இவற்றுள் ஒரு செய்யுளை மட்டும் இங்குக் குறிப்பிடுகிறோம்.

இல்லார் நுதலயு நீயுமின் றேசென்று மேவுதிர்குதெல்லா முணர்ந்தவ ரேழ் பெருந்த தரங்கத் தியவனர்கள்அல்லா வெனவந்து சத்திய நந்தாவகை தொழுஞ் சீர்நல்லார் பயிலும் பழனங்கள் சூழ்தரு நாட்டகமே

இச்செய்யுளின் மூன்றாவது அடியில் வரும் ‘அல்லாவென வந்து சத்திய நந்தா தொழுஞ்சீர்’ என்பது பல்சந்தமாலை இலக்கியம் இஸ்லாமியச் சார்புள்ளது என்பதற்கோர் காரணமாகக் கொள்ளலாம். இதுபோன்று ஏனைய செய்யுட்களின் உள்ளடக்கக் கருத்துக்களும் பல்சந்தமாலை இஸ்லாமியத் தமிழிலக்கியமே என்பதைப் பறைசாற்றுகின்றன. அவற்றை இங்கு எடுத்துக் கூறின் விரியும் என்ற காரணம் தகுதி விடுக்கின்றோம்.

இனி, பல்சந்தமாலையின் காலக் கணிப்பு தொடர்பாகச் சில கருத்துக்களைக் காண்போம். கால ஆராய்ச்சியைப் பல்சந்த மாலையின் மொழி இயல்பினைக் கொண்டு ஓரளவு கணிக்கலாம். பல்சந்தமாலையின் காலம் தொடர்பாக மு. அருணாசலம் கூறும் போது 14-ஆம் நூற்றாண்டினைச் சார்ந்தது என்பர். ஆனால் இது பொருந்துவதன்று. பல்சந்தமாலையில் இடம்பெற்றுள்ள செய்யுட்களில் அதன் ஆசிரியர் தொல்காப்பியரின் மொழி மரபினைப் பின்பற்றியுள்ளார். ஆனால் அதே நேரத்தில் நன்னூல் கருத்துகளுக்கு ஏற்புடையதாகக் காணப்படவில்லை. இதில் ஆசிரியர் சோனகரைக் (முஸ்லிம்களை) குறிக்க இயவனர் என்ற சொல்லாட்சியை இஇரு இஇடங்களில் பயன்படுத்தியுள்ளார். அத்துடன் ‘இயவனராசன்’ என ஒரு செய்யுளை ஆரம்பிக்கின்றார்.

‘இயவனராசன் கலுபா தாழுதலெண்ண வந்தோர்’…

என அமைகிறது இச்செய்யுள். இனி பிறிதொரு செய்யுளில் இரண்டாமடி

‘தெல்லா முணர்ந்த ரேழ்பெருந்த தரங்கத் தியவனர்கள்’

என உள்ளது. இவ்விரண்டு செய்யுட்களிலும் இயவனர் எனவே என உள்ளது. முதலாம் செய்யுளில் இயவனர் என்பது பாடலை ஆரம்பிக்கும் சொல்லாக வர மற்ற செய்யுளில் யகரத்தின் முன் வந்த குற்றயலிகரம் முற்றியலிகரமாக மாறி ‘இயவனர்’ என வந்துள்ளது.

யவனர் எனப் பாடலில் பயன்படுத்தி இருந்தால் அம்மரபு தொல்காப்பிய மொழி வழக்காறு நிலைக்கு முரணாக இருந்திருக்கும். சான்றோர் அதனைத் தவறு எனக் கருதுவர். பல்சந்தமாலை ஆசிரியர் வாழ்ந்த காலததில் அகரத்தோடு யகரமெய் மொழிக்கு முதலில் வரும் என்ற நிலை இருந்திருக்காமல் இருக்கலாம். எனவேதான் பல்சந்தமாலை ஆசிரியர் இயவனர் என்னும் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் இம்மரபு நன்னூல் கூறும் மொழி இலக்கணத்துக்கு முரணானது. எனவே பல்சந்தமாலை ஆசிரியர் காலத்தை நன்னூல் எழுதிய பவணந்தி முனிவர் காலத்துக்கு முற்பட்டதாகக் கொள்ளல் வேண்டும். பவணந்தியாரின் காலம் 13-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி என்பது தெளிவு. அப்படியாயின் அதற்கு முற்பட்ட காலமான 12-ஆம் நூற்றாண்டினையே பல்சந்தமாலை சார்ந்ததாக இருத்தல் வேண்டும். இக்காலத்தையே இஸ்லாமியத் தமிழிலக்கியங்களின் தொடக்க காலமாகக் கொள்ளலாம்.

பல்சந்தமாலை என்னும் தமிழிலக்கியத்தின் மூலமாக தமிழிலக்கிய உலகில் கால்கோள் கொள்ளத் தொடங்கிய இஸ்லாமியத் தமிழிலக்கியப் பிரிவு இன்றளவு ஒன்பது நுற்றாண்டு கால இலக்கியப் பாரம்பரித்தைத் தமக்கெனவுடையதாகக் கொண்டுள்ளது.

இவ்வொன்பது நூற்றாண்டு கால எல்லையில் ஏறத்தாழ இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறான வகைப்பட்ட தமிழிலக்கியங்களைப் பெற்றுத் தமக்கெனச் சுட்டிக்காட்டத்தக்க இலக்கிய வரலாற்றுப் பின்னணியை இஸ்லாமியத் தமிழிலக்கியப் பிரிவு பெற்றுள்ளது.

பல்சந்தமாலைக்கு அடுத்த நிலையில் யாகோபுச் சித்தர் பாடல்கள் (15 ஆம் நூற்றாண்டு) ஆயிர மசலா (கி.பி. 1572), மிகுராஜ் மாலை (கி.பி.1590), திருநெறி நீதம் (கி.பி. 1613), கனகாபிஷேக மாலை (கி.பி. 1648), சக்கன் படைப்போர் (கி.பி. 1686), முதுமொழி மாலை (17 ஆம் நூற்றாண்டின் இறுதி) சீறாப்புராணம் (கி.பி. 1703), திருமக்காப்பள்ளு (17ஆம் நூற்றாண்டு) முதலான ஒன்பது இலக்கியங்கள் இடம் பெறுவதாக அவற்றின் கால எல்லை அடிப்படையில் வரையறை செய்யலாம் - பல்சந்த மாலையுடன் சேர்த்து இப்பத்து இலக்கியங்களையும் தொடக்க கால இஸ்லாமியத் தமிழிலக்கியங்களாகக் கொள்ளலாம்.

தொடக்க காலத்தில் இஸ்லாமும் தமிழும் இணைந்த நிலையிலேயே படைப்போர் இலக்கியம் ஒன்றும் தோன்றி இருப்பது இங்கு குறிப்பிடற்பாலது. தொடக்க காலத்தில் ஒருசில இலக்கியங்களே வரப்பெற்ற போதிலும் இஸ்லாமியத் தமிழிலக்கியங்களின் வருகை நிலை காலப்போக்கில் பெருகலாயிற்று. கி.பி. 18, 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் இன்றுள்ள இஇஸ்லாமியத் தமிழிலக்கியங்கள் அனைத்தும் அடங்கும். இந்நூற்றாண்டுகளை இஸ்லாமியத் தமிழிலக்கிய ஆக்கத்தின் பொற்காலமாகக் கருதலாம்.

இஸ்லாம் தமிழுக்காற்றியுள்ள பணிகளுள் குறிப்பிடத்தக்கது, வேறு எந்தவொரு தனிப்பட்ட சமயமும் அளித்திராத எண்ணிக் கையில் காப்பியங்களைப் படைத்தளிருப்பதாகும். கனகவிராஜரின் கனகாபிரேஷக மாலை, உமறுப்புலவரின் சீறாப்புராணம், கேசாதி நயினாரின் திருமணக்காட்சி, பனியகுமது மரைக்காயரின் சின்ன சீறா, வண்ணக் களஞ்சியப் புலவரின் இராஜ நாயகம், சேகனாப் புலவரின் குத்புநாயகம், வண்ணக்களஞ்சியப் புலவரின் குத்பு நாயகம், பதுறுத்தீன் புலவரின் முஹியித்தீன் புராணம், சேகனாப் புலவரின் திருமணி மாலை, புதுகுஷ்ஷாம், திருக்காரணப் புராணம், வண்ணக் களஞ்சியப் புலவரின் தீன்விளக்கம், ஐதுறூசு நயினார் புலவரின் நவமணிமாலை, குலாம் காதிறு நாவலரின் நாகூர் புராணம், ஆரிபு நாயகம் போன்ற பதினைந்து இஸ்லாமியத் தமிழ்க் காப்பியங்களை இயற்றித் தந்த பெருமை முஸ்லிம் தமிழ்ப் புலவர்களைச்சாரும்.

காப்பியங்களுடன் முஸ்லிம் தமிழ்ப்புலவர்கள் நின்றுவிடவில்லை. தமிழிலக்கிய வரலாற்றில் காலத்திற்கேற்ப தோன்றியுள்ள பல்வேறான இலக்கியவகைகளில் தங்களது பங்களிப்பினை நிலைநாட்டியுள்ளார்கள். அத்துடன் தமிழிலக்கிய வரலாற்றிற்குச் சில புதிய இலக்கிய வடிவங்களையும் அறிமுகம் செய்வித்த பெருமை முஸ்லிம் புலவர்களைச் சாரும்.இத்தகு இலக்கிய வடிவங்களே புதுவகை இஸ்லாமியத் தமிழிலக்கியங்களாக இடம் பெற்றுள்ளன. இங்ஙனம் இஸ்லாமும் தமிழும் இஇணைந்ததின் பயனாக எண்ணிலடங்காத் தமிழிலக்கியங்கள் தோன்றியுள்ளன. இன்றும் தோன்றிய வண்ணம் உள்ளன. இதன் காரணமாக இஸ்லாமியத் தமிழிலக்கியப் பிரிவுத் தமக்கெனத் தனித்ததொரு இலக்கிய வரலாற்றுப் பின்னணியைப் பெற்றுச் சிறக்கிறது. இத்தகு இஸ்லாமியத் தமிழிலக்கிய வரலாறு தமிழிலக்கிய உலகிற்கு ஓர் உன்னதமான கொடையாகவே விளங்குகிறது.

**
நன்றி : ஆறாம்திணை, முனைவர்.பீ.மு. அஜ்மல்கான்
தகவல் : நாகூர் ஆபிதீன்

Read more...

Tuesday, 10 June 2008

தமிழக முஸ்லீம்கள்



மலாய் நாட்டினுடைய வரலாற்றை முறையாக தொகுக்கப்பட்ட வரலாறு எது என்று பார்ககும் போது ‘செஜாரு மலாயு’ என்ற பெரிய நூல் நமக்கு கிடைக்கிறது. அதை எழுதியவர் அப்துல் காதர் என்ற ஆசிரியர் ஆவார். அவர் மலேசியா நாட்டின் பல்கலைக் கழக பேராசிரியர் , நாகப்பட்டினத்தைச் சார்ந்தவர். நாகப்பட்டினத்திலிருந்து மலேசியாவிற்கு வந்து குடியேறி மலாய் நாட்டு மக்களுடைய கலாச்சார முறையை தொகுத்து மலாய் நாட்டிற்கே முறையான ஒரு வரலாற்றை உண்டாக்கிக் கொடுத்த பெருமை ‘செஜாரா மலாயு’ எழுதிய அப்துல் காதர் அவர்களுக்கு உண்டு என்பது தமிழ் முஸ்லீம்களுக்கு பெருமை தரும் விஷயம்.
- சிராஜுல் மில்லத் ஜனாப் அப்துல் சமது சாஹிப் அவர்கள் பேங்காக் நகரில் தமிழ் முஸ்லீம் சங்கத்தில் ஆற்றிய உரையிலிருந்து

Read more...

Friday, 30 May 2008

நாகூர் - ஒரு வரலாற்றுப் பார்வை


பினாங், மலேசியாவில் இருக்கும் நாகூர் தர்கா

ஜெ.ராஜா முகமது M.A., B.Sc., (காப்பாட்சியர் ,அரசு அருங்காட்சியகம் , புதுக்கோட்டை - 622 002 )

நாகூர் என்றதும் நம் சிந்தைக்கு இனிமையுடன் நினைவுக்கு வருவது நாகூர் ஆண்டவர் என்றழைக்கப்படும் இறைநேசச் செல்வர் ஹஜ்ரத் செய்யிது காதிர் ஷாஹுல் ஹமீது மீரான் சாஹிபு அவர்களின் தர்கா ஒன்றுதான். ஆனால் தமிழக முஸ்லிம்களின் கடல் வாணிப வரலாற்றிலும், இஸ்லாம் வளர்த்த இன்பத்தமிழ் இலக்கிய வரலாற்றிலும் கூட நாகூர் சிறப்பான இடம் வகிக்கிறது. இவை குறித்த சில வரலாற்றுச் செய்திகளை இங்கு காண்போம்.

நாகூர், நாகப்பட்டினத்தின் ஒரு அங்கமாகவே இருந்து வந்துள்ளது. கி.பி. 16ஆம் நூற்றாண்டில் ஷாஹ¤ல் ஹமீது வலி அவர்கள் நாகூருக்கு வந்த பிறகு நாகூரின் வரலாறு ஒளி பெறுகிறது. போர்த்துக்கீசியர்களின் பதிவேடுகள் நாகூரை ‘நாகூரு’ என்றும் நாகப்பட்டினத்தின் முஸ்லீம்களின் குடியிருப்புப் பகுதி என்றும் குறிக்கின்றன. போர்த்துக்கீசியர்கள் நாகப்பட்டினத்தை 16ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் பிடித்துக் கொண்டதும் நாகூர் முஸ்லீம்களின் வணிக வரலாறும் தெரிய வருகிறது.
நாகூர் ஷாஹுல் ஹமீது வலி அவர்கள் கி.பி. 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களது காலம் கி.பி 1532-1600 என அறிஞர்கள் கருதுகின்றனர் (1). ஹிஜ்ரி 978ஆம் ஆண்டு (கி.பி. 1558) இவ்வுலக வாழ்வை நீத்தார்கள் எனவும் இவர்களது நினைவாக முதல் கந்தூரி 1559-ல் நடைபெற்றதாகவும் தர்காவின் வரலாறு கூறும் எழுத்தாளர் ஒருவர் கூறுகிறார் (2). ஆற்காட்டை ஆண்ட நவாபுகள் இவர்களது பெயரால் தஞ்சாவூர் நகரை காதர் நகர் என பெயரிட்டனர்(3). நாகூர் பகுதியில் அமைதி வழியில் தனது அன்பு அழைப்பால் எண்ணற்ற மக்களை இஸ்லாத்தின் பக்கம் கொண்டுவந்த பெருமை நாகூர் ஆண்டகை அவர்களைச் சாரும். இவர்களது அருட்கொடையைத் தொடர்ந்து பெறும் பொருட்டு தமிழகத்தின் பிற பகுதியிலிருந்தும் முஸ்லிம் மக்கள் இங்கு வந்து குடியமர்ந்தனர். இஸ்லாமியர் பெருகினர். இப்பகுதியில் இஸ்லாம் செழித்தோங்கியது.

ஷாஹுல் ஹமீது வலியுல்லா அவர்கள் நாகூருக்கு வருவதற்கு முன்பே அரேபிய நாட்டிலிருந்து செய்யிது முபாரக் வலியுல்லா அவர்களும், முகமது சித்திக் இப்னு மசூத் அவர்களும் நாகூரில் தங்கி இஸ்லாமிய மார்க்கப் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். இவர்களது கல்லறைகளும் நாகூரில் உள்ளன(4).16ஆம் நூற்றாண்டில் நாகூர் பற்றிய வெளிநாட்டார் குறிப்புகளிலும், இலக்கியங்களிலும் பயணக் குறிப்புகளிலும் ஷாஹுல் வலியுல்லா அவர்களைப் பற்றியோ அல்லது தர்கா பற்றியோ குறிப்புகள் ஏதும் இல்லை.
இதே காலகட்டத்தில் (1545) நாகப்பட்டினம் பகுதிக்கு வருகைதந்து ஏராளமான பரதவர்களை கிருத்துவ மதத்திற்கு மாற்றம் செய்து கொண்டிருந்த புனித ப்ரான்சிஸ் சேவியர் அவர்களின் குறிப்புகளிலும் நாகூர் ஆண்டவர் பற்றிய குறிப்புகள் இல்லை (5).
நாகூர் ஆண்டவர் தஞ்சாவூர் நாயக்க மன்னர் அச்சுதப்ப நாயக்கரின் (1560-1614) நோயினைத் தீர்த்து வைத்ததாகவும் அவர்களது அருளினால் மன்னனுக்கு ஒரு ஆண் மகவு பிறந்ததாகவும் ‘கஞ்சுல் கராமத்து’ கூறுகிறது. நாகூர் தர்காவிற்கும் தஞ்சாவூர் நாயக்க மன்னர்களுக்கும் இக்காலம் முதல் தொடர்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இக்காலத்தில் நாயக்க மன்னர்களைப் பற்றி எழுதப்பட்ட ரகுநாதபியுதாயமு, சாகித்ய ரத்னகாரா, சங்கீதசுதா ஆகிய தெலுங்கு இலக்கியங்களில் நாகூர் ஆண்டவர் பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை. ஆனால் நாயக்க மன்னர்கள் அப்போது நாகப்பட்டினத்தை ஆக்ரமித்துக்கொண்டிருந்த போர்த்துக்கீசியருடன் பகைமை கொண்டிருந்த காரணத்தினாலும் நாயக்க மன்னர்கள் முஸ்லீம் மக்களுக்கு ஆதரவாக இருந்தனர் என்பதாலும் நாகூர் ஆண்டவர் போன்ற வலிமார்கள் மிகப் பெரிய மருத்துவ மேதைகளாகவும் திகழ்ந்தார்கள் என்பதாலும் இத்தகைய வழக்குகள் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று நம்பலாம். (6). இக்காலத்தில் நாகூர் ஆண்டகையின் செயற்பாடுகள் தொடக்க நிலையில் இருந்ததாகக் கொள்ளலாம்.

இறைநேசச் செல்வர்களான புனித அடியார்களைப் பற்றிய வரலாறுகளும், அவர்களது அற்புத ஆற்றல்களை சிறப்பித்து கூறும் செய்திகளும் ஏராளம் உண்டு. தொன்றுதொட்டு வழங்கிவரும் கதைகளை அப்படியே எழுதிவிடுவது என்பது வழக்கமாக உள்ளது. அவற்றை வரலாற்று நிகழ்வுகளுடன் தொடர்பு படுத்தி தெளிவுபடுத்த முஸ்லீம் எழுத்தாளர்கள் போதிய முயற்சிகளை இதுவரை மேற்கொள்ளவில்லை என்றே சொல்லவேண்டும். நமது வரலாறு பிறரால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.
நாகூர் ஆண்டவர் குறித்து நிறைய படைப்புகள் வெளிவந்துள்ளன. ஆனால் இவர்கள் பற்றிய வரலாற்றுச் சான்றிதழ்கள் வலுவிழந்து நிற்கின்றன. உதாரணமாக நாகூர் நாயகர் , கடலில் வந்த கப்பலில் உடைப்பு ஏற்பட்டு தத்தளித்துக் கொண்டிருப்பதை உணர்ந்து தமது கண்ணாடியை கடல் நோக்கி எறிந்ததாகவும் அக்கண்ணாடி கப்பலில் ஏற்பட்ட உடைப்பை அடைத்ததாகவும் சொல்லப்படுகிறது. இப்படி ஆபத்திலிருந்து தப்பிய கப்பல் ஹாலந்து நாட்டைச்சேர்ந்த டச்சுக்காரர்களின் கப்பல் என்றும், இதற்கு நன்றிக்கடனாக டச்சுக்காரர்கள் நாகூர் நாயக்கருக்கு நன்றி செலுத்தியதாகவும், ஒரு ஆசிரியர் குறிப்பிடுகின்றார் (7). நாகூர் ஆண்டவர் அவர்கள் காலத்தில் டச்சுக்காரர்கள் கிழக்குக் கடற்கரைக்குப் பகுதிக்கு வரவே இல்லை. அப்போது நாகப்பட்டினம் பகுதியில் இருந்தவர்கள் போர்த்துக்கீசியர் ஆவார்கள். டச்சுக்காரர்கள் முதன்முதலில் 1605ம் ஆண்டிலேயே கிழக்குக் கடற்கரைப் பகுதிக்கு வருகின்றனர் (8). 1658-ம் ஆண்டில்தான் நாகப்பட்டினம் துறைமுகம் டச்சுக்காரர்கள் வசமாகிறது (9).
தஞ்சாவூரை ஆண்டுவந்த மராத்திய மன்னர்கள் நாகூர் தர்காவை விரிவுபடுத்துவதற்கு பல்லாற்றானும் உதவிகள் செய்துள்ளனர். கி.பி. 18-ம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை நாகூர் தர்கா சிறிய கட்டிடங்களுடனேயே இருந்து வந்திருக்கவேண்டும் எனக் கருதலாம்.

மராட்டிய மன்னர் பிரதாப்சிங் (1739-1763) நாகூர் தர்கா கட்டிடங்களை விரிவு படுத்திக் கட்டினார். இம்மன்னர் நாகூர் தர்கா கட்டிடங்களின் Founder என்று சொல்லப்படுகிறது. (10). மேலும் பிரதாப்சிங் தர்காவின் பராமரிப்பிற்கு பதினைந்து கிராமங்களை மானியமாக அளித்ததாக கல்வெட்டுச் செய்தி ஒன்று கூறுகிறது (11). தர்காவில் உள்ள மிக உயரமான (131) அடி மனோராவைக் கட்டியதும் இம்மன்னரே ஆவார். பிரதாப்சிங்கிற்குப் பிறகு வந்த மராட்டிய மன்னர்களும் தர்காவிற்கு பல கொடைகள் வழங்கியுள்ளனர். இக்கொடைகள் குறித்த செய்திகள் தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் மோடிப் பதிவேடுகளில் நிறையக் காணப்படுகின்றன.

கந்தூரி உற்சவத்தின்போது ஆண்டுதோறும் மராட்டிய மன்னர்களிடமிருந்து அலங்கார ஆடைகள் வருவது வழக்கமாக இருந்தது (12). நாகூர் பகுதி ஆங்கிலேயருடைய ஆட்சிக்குட்பட்டபின்னும் மராட்டிய மன்னர்கள் தர்காவின் நிர்வாக செயல்பாடுகள் குறித்து பெரிதும் அக்கறைகாட்டி வந்தனர். பிரதாப்சிங் கட்டிய மனோராவை ஆங்கிலேயர்கள் தங்களது கொடிக்கம்பமாகப் பயன்படுத்தி வந்தனர். மராட்டிய மன்னர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இப்பழக்கம் நிறுத்தப்பட்டதாக ஆங்கிலேயரின் பதிவுகள் தெரிவிக்கின்றன (13).மேலும் ஜாதி மத பாகுபாடின்றி இந்துக்களும் முஸ்லீம்களும் தர்காவிற்கு வந்து வழிபடுவதை ஆங்கிலேயர் வெகுவாகப் பாராட்டி எழுதியுள்ளனர் (14).

இந்து மதத்தைச் சேர்ந்த பக்தர்கள் பலர் தர்காவின் கட்டிடங்களைக் கட்டுவதற்கு நிறைய பொருளுதவி செய்துள்ள செய்திகளை தர்காவில் காணப்படும் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. 18-ம் நூற்றாண்டில் நடைபெற்ற கர்நாடகப் போரின்போது பிரஞ்சு தளபதி லாலி நாகூர் தர்காவை கொள்ளையிட்ட செய்தியும் நமக்கு கிடைக்கிறது (15).19-ம் நூற்றாண்டில் தர்காவின் தரிசனத்திற்கு வரும் கூட்டம் மிகவும் அதிகரித்துக் கொண்டுவந்தது. இதனால் தர்காவின் வருமானமும் பெருகியது. ஆகவே தர்கா நிர்வாகத்தைக் கவனிக்கப் பல குழுக்கள் நியமிக்கப்பட்டன. இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து இந்த தர்காவைப் போற்றி வந்ததால் ஒரு சமயம் முத்துசாமிப்பிள்ளை என்பவர் தர்காவின் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்தார் (16). தர்காவிற்கான மானியங்கள் முறைப்படுத்தப்பட்டன. மானிய நிலங்களிலிருந்து வரும் நெல் வருமானத்தை வலியுல்லா அவர்களின் சந்ததியினர் நிர்வகித்து வர வழிவகை செய்யப்பட்டிருந்தது (17).

1817-ம் ஆண்டு அறநிலைய சட்டப்படி ஆங்கிலேய அரசே தர்காவின் நிர்வாகத்துக்கு வந்தது. 1934-ம் ஆண்டு முஸ்லீம் அறநிலையங்களுக்கென தனிச்சட்டம் ஏற்படுத்தப்பட்டது (18). 1954-ம் ஆண்டு வக்பு சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டபின் தர்கா நிர்வாகம் இச்சட்டத்தின்படி முறைப்படுத்தப்பட்டது.

நாகூர் தர்காவில் கந்தூரி 14 நாட்கள் நடைபெறுகிறது. அப்போது இந்தியாவில் பல பகுதிகளிலிருந்தும் உலகின் பல பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கூடி வலியுல்லா அவர்களின் அருள் வேண்டுகின்றனர். 9-ம் நாள் பீர் என்னும் பக்கீர் மௌனமாக அமர்ந்திருக்கும் பழக்கம் ஆந்திர மாநிலம் பெணுகொண்டா தர்கா நடைமுறைப் பழக்கங்களிருந்து பெறப்பட்டதாக தெரியவருகிறது (19). மேலும் இந்து கலாச்சாரத் தாக்கத்தினால் பல வழிபாட்டு முறைகள் தர்காவில் பின்பட்டு வருவதைக் காண்கிறோம்.

நாகப்பட்டினத்திலும், நாகூரிலும் முஸ்லிம் வணிகர்கள் பலர் வாழ்ந்து வந்தனர். நாகூரில் வாழ்ந்து வந்த முஸ்லிம் வணிகர்கள் பற்றிய செய்திகளும், நாகூர் துறைமுகம் குறித்த செய்திகளும் 16-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்தே நமக்கு கிடைக்கின்றன. இங்கு வாழ்ந்த முஸ்லிம் வணிகப் பெருமக்கள் கப்பல் உரிமையாளர்களாகவும், கப்பல் செலுத்தும் தொழிலில் ஈடுபட்டவர்களாகவும், கடல் கடந்த நாடுகளுக்குச் சென்று வாணிபம் செய்பவர்களாகவும் இருந்தனர். முஸ்லிம் வணிகர்கள் அனைவருமே கப்பல்கள் வைத்திருக்கவில்லை. ஒருசில வணிகர்களுக்குச் சொந்தமாக இருந்த கப்பல்களில் பிற வணிகர்கள் தங்களது வணிகப் பொருட்களை ஏற்றிச் சென்று வாணிபம் செய்துள்ளனர்.

நாகூர் கடற்கரையில் 16-ம் நூற்றாண்டில் ஐந்து கோயில்கள் இருந்தன. இந்தக் கோயில்கள் கப்பல்களுக்கு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தன. இத்துறைமுகத்திற்கு ஒன்றை மரப்பாய் கப்பலிலிருந்து, 300 டன் எடையுள்ள கப்பல் வரை வந்து சென்றன. இங்கு வாழ்ந்த முஸ்லிம் வணிகர்கள் சுமத்தரா, ஜாவா, மலாக்கா, மலேயா, பர்மா, இலங்கை ஆகிய கடல் கடந்த நாடுகளுடன் வணிகத் தொடர்பு வைத்திருந்தனர். முக்கிய ஏற்றுமதிப் பொருள்களாவன : அரிசி, சங்கு , மிளகு மற்றும் துணிவகைகள். இறக்குமதிப் பொருட்களாவன : பாக்கு, யானை, குதிரை, தேங்காய், உலோகங்கள் மற்றும் வாசனை திரவியங்கள் (20).

நாகூர் துறைமுகத்திலிருந்து மேற்கு கடற்கரைத் துறைமுகங்களுக்கும் கிழக்குக் கடற்கரையோரமாக உள்ள பிற துறைமுகங்களுக்கும் வணிகத் தொடர்பு மிக அதிகமாக இருந்து வந்தது. மேலும் நாகூர் துறைமுகம் வெட்டாறின் கிளையான குடவளாற்றின் முகத்துவாரத்தில் இருந்ததால், ஆற்றில் தண்ணீர் அளவு கணிசமாக இருக்கும்போது, ஆற்றினுள் குறைந்த எடையுள்ள கப்பல்கள் மற்றும் படகுகள் போக்குவரத்து நடந்து வந்தது. இதன்மூலம் உள்நாட்டு விளைபொருட்களை, துறைமுகத்திற்கு ஏற்றிவர ஏதுவாக இருந்தது (21).16-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் போர்த்துக்கீசியர் நாகப்பட்டினம் துறைமுகத்தைப் பிடித்துக் கொண்டனர். இயல்பாக அவர்கள் முஸ்லிம்கள் மீது காட்டிய பகை உணர்வு அங்கு வாழ்ந்த முஸ்லீம் வணிகர்களை நிலைகுலையச் செய்தது. போர்த்துக்கீசிரியன் அனுமதிச்சீட்டுடன் (cartaz) முஸ்லீம் வணிகர்களும் வாணிபத்தில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர். ஆனால் முஸ்லீம் வணிகர்கள் அவர்களை விட்டு விலகிச் சென்று நாகூர் துறைமுகத்திலிருந்து தங்களது வாணிப நடவடிக்கைகளை நடத்தி வந்தனர்.

நம் நாட்டு மன்னர்களிடையே ஏற்பட்ட பிணக்குகளினாலும் ஐரோப்பியர்களின் தலையீட்டினாலும் தமிழகத்தின் அரசியல் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதன் விளைவாக முஸ்லீம் வணிகர்களும் அவர்களது பொருளாதாரமும் பாதிக்கப்பட்டன. பிரஞ்சு தளபதி லாலி நாகூர் தர்காவை கொள்ளையிட்டது மட்டுமின்றி நாகூர் துறைமுகத்திலிருந்த முஸ்லிம் வணிகர்களுக்குச் சொந்தமான இரண்டரை லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களையும் கொள்ளையிட்டுச் சென்றார் என்பதிலிருந்து முஸ்லிம் வணிகர்களின் செல்வச் சிறப்பையும் அதே சமயத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களையும் அறிய முடிகிறது (22).

1773-ல் மராட்டிய மன்னர் நாகூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களை டச்சுக்காரர்களுக்கு விற்றுவிட்டனர். இதை ஆற்காடு நவாப் எதிர்த்து தம் வசப்படுத்திக்கொண்டார் (23). பின்னர் 1788-ல் நாகூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 277 கிராமங்களை மராட்டிய மன்னர் இரண்டாம் துளஜா ஆங்கிலேயருக்கு அளித்தார். இதன்பின் நாகூர் துறைமுகம் ஆங்கிலேயரின் வசமானது (24).1780-ல் ஹைதர்அலி நாகப்பட்டினத்தின் மீது படையெடுத்து வந்தார். அப்போது நாகூர் ஆங்கிலேயர் வசமிருந்தது. நாகப்பட்டினத்திலிருந்து டச்சுக்காரர்கள் ஹைதர்அலிக்கு உதவி அளித்தனர். ஹைதரின் படைகள் நாகூர்ப் பகுதியில் பெரும் அழிவை ஏற்படுத்தின. நாகூர் பகுதி மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பெரும் சேதம் ஏற்பட்டது. நாகூரிலிருந்த வணிகப் பெருமக்களும் பொதுமக்களும் பயந்து பல இடங்களுக்கு குடிபெயர்ந்தனர் என்று நாகூரிலிருந்த ஆங்கிலேய பிரதியின் அறிக்கை கூறுகிறது (25).தஞ்சாவூர் பகுதி முழுவதும் 1799-ல் ஆங்கிலேயர் வசமானது. நாகப்பட்டினமும் நாகூரும் ஒரே நகராகக் கருதப்பட்டது. நாகூர் மாவட்டத் தலைநகராக இருந்தது (26). பின்னர் நாகப்பட்டினம் மாவட்டத் தலைநகரானது (27).

அரசியல் குழப்பங்களினால் குடிபெயர்ந்து சென்ற வணிகர்களையும், நெசவாளர்களையும் நாகூருக்கு வந்து குடியமர ஆங்கிலேய அரசு பல சலுகைகளை அளித்தது. முஸ்லீம் வணிகர்கள் மீண்டும் நாகூருக்கு வந்து சேர்ந்தனர். நாகூரில் பலவித வரிச்சலுகைகள் அளிக்கப்பட்டன (28). வீட்டுவரி தவிர பிற வரிகள் ரத்து செய்யப்பட்டன. வணிகர்களுக்கு பொருளாதார உதவி செய்யும் பொருட்டு ஆங்கிலேயர் ஒரு வங்கியை நாகூரில் ஏற்படுத்தினர் (29).

நாகூரில் ஒரு வகை ஊதா நிறத் துணி உற்பத்தி செய்யப்பட்டது. Naguri Blue Cloth எனும் இத்துணிக்கு இங்கிலாந்திலும் தூரக்கிழக்கு நாடுகளிலும் நல்ல கிராக்கி இருந்தது (30). நாகூரில் ஒரு சாயத் தொழிற்சாலையும் ஏற்படுத்தப்பட்டது. நெசவாளர்களுக்குப் பல சலுகைகள் அளிக்கப்பட்டன. நாகூர் பகுதியில் சுமார் 4000 நெசவாளர்கள், 1100 தறிகளில் இவ்வகை ஊதா துணிகளை உற்பத்தி செய்து ஏற்றுமதிக்கு அளித்து வந்தனர். நெசவாளர்களில் பெரும்பாலோனோர் முஸ்லிம் மக்கள் என்பது குறிப்பிடத் தக்கது. உற்பத்தியாகும் ஊதா துணியில் பெரும் பகுதியை முஸ்லிம் வணிகர்கள் வாங்கி ஜாவா, இங்கிலாந்து, மலாக்கா, இலங்கை ஆகிய நாடுகளுக்கு தங்களது கப்பல்களிலும் ஆங்கிலேய வணிகர்களின் கப்பல்களிலும் அனுப்பினர். ஆங்கிலேய கம்பெனியும், செட்டியார் இன வணிகர்களும் ஆங்கிலேய தனியார் வணிக நிறுவனங்களும் இவ்வகைத் துணி ஏற்றுமதியில் ஈடுபட்டிருந்தனர். இந்து வணிகர்களும், முஸ்லிம் வணிகர்களும் ஒற்றுமையுடன் இருந்து வாணிபம் நடத்தி நாகூரின் வளம் பெருக்கினர் (31).

முஸ்லிம் வணிகர்களான மரைக்காயர்கள் குறித்த செய்திகள், போர்த்துக்கீசியர், டச்சுக்காரர்கள், டேனிஷ்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயரின் பதிவேடுகளில் நிறைய காணப்படுகின்றன. மரைக்காயர், நகுதா, மாலுமி, செறாங்கு, சுக்காணி போன்ற பட்டங்களுடன் ஏராளமான முஸ்லிம் வணிகர்களின் பெயர்கள் இப்பதிவேடுகளில் காணக்கிடக்கின்றன. இவர்கள் வணிகத் தொடர்பு கொண்டிருந்த நாடுகளிலெல்லாம் பெரும் செல்வாக்குடன் விளங்கினர். சில வணிகர்கள் தங்களுக்குத் தேவையான கப்பல்களை வெளிநாடுகளிலிருந்து வாங்கும் அளவிற்கு வசதி படைத்தவர்களாக இருந்தனர்.

1722-ல் ஆங்கிலேயர் அச்சை நாட்டில் ஒரு வணிகச் சாவடி ஏற்படுத்தும் பொருட்டு அந்நாட்டு மன்னரிடம் அனுமதி பெற, முகமது காசிம் மரைக்காயர் மூலமாகவே அணுகவேண்டி வந்தது. இவர் நாகூரைச் சேர்ந்த ஒரு கப்பல் வணிகர்; மேலும் முகமது காசிம் மரைக்காயர் பினாங்கிலும் கெத்தானிலும் அந்நாட்டு மன்னர்களிடமும் பெரும் செல்வாக்கு உடையவராக இருந்தார் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும் (32). இவருக்கு ஆங்கிலேய அரசு பல வரிச் சலுகைகளை அளித்துள்ளது (33). இது போன்று தூரக்கிழக்கு நாடுகளில் சிறப்புடன் விளங்கிய நாகூர் வணிகர்கள் பலர் குறித்த செய்திகளும் நமக்குக் கிடைக்கின்றன. இவர்களது வணிகச் சாவடிகள் பினாங்கு, அச்சை, சுமத்தரா, பெரு, கெத்தா, இலங்கை, பர்மா ஆகிய நாடுகளில் வளமுடன் விளங்கியதை ஆங்கிலேயரின் பதிவேடுகள் தெரிவிக்கின்றன (34).1796-ம் ஆண்டு பதிவேடு ஒன்று நாகூரில் சுமார் 70 முஸ்லீம்கள் கப்பல் வணிகர்களாகத் திகழ்ந்தனர் எனத் தெரிவிக்கிறது. இவர்கள் தங்களுக்குத் தேவையான கப்பல்களை நாகூரிலேயே கட்டிக் கொண்டனர்.

இவ்வாண்டில் ஏழு கப்பல்கள் மட்டும் நாகூர் மற்றும் நாகப்பட்டினத் துறைமுகங்களில் முஸ்லிம் வணிகர்களுக்குச் சொந்தமானவையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள வணிகர்கள் இக்கப்பல்களில் தங்கள் வணிகப் பொருட்களை ஏற்றிச் சென்றிருக்க வேண்டும். இதற்குரிய வாடகை, கமிஷன் போன்றவற்றை கப்பல் உரிமையாளர்கள் பெற்றுக் கொண்டனர். கப்பல் சரக்குக் கட்டணம், பொருட்களின் மதிப்பில் 14% கமிஷன், 7 1/2% இன்ஷுரன்ஸ் திட்டமும் இருந்தது. பிரிமியம் 16% ஆகும். பெரும்பாலும் கப்பல் உரிமையாளர் கப்பலில் செல்வது கிடையாது. கப்பல் தலைவரான நகுதாவின் பொறுப்பில் கப்பல் ஒப்படைக்கப்படும். நகுதாவும் தனது ஊதியத்திற்குப் பதிலாக தனது வணிகப் பொருட்களை கப்பலில் ஏற்றிச் செல்லுவார்.

நாகூர் வணிகர்களின் வணிக நடைமுறைகள் பழக்கங்கள் குறித்த சுவையான பல செய்திகள் ஐரோப்பியரின் பதிவேடுகளில் நமக்கு கிடைக்கின்றன (35). தங்களது கப்பல்களை பதிவு செய்து கொண்டு உரிய சுங்கத் தீர்வைகளை செலுத்திய வணிகர்கள் மட்டுமின்று பதிவு செய்யப்படாத கப்பல்களும் பல இருந்தன. சுங்கத் தீர்வையை ஏய்த்து பொருட்களை ஏற்றிவந்த இதுபோன்ற கப்பல்கள் ஆங்கிலேயரால் பறிமுதல் செய்யப்பட்டன. அபராதமும் விதிக்கப்பட்டது.

நாகூர் பக்கிரி மரைக்காயர் 1823-ல் இலங்கையிலிருந்து அனுமதியின்றி பாக்கு ஏற்றிக் கொண்டுவந்தபோது கண்டுபிடிக்கப்பட்டு அவரது கப்பல் பறிமுதல் செய்யப்பட்டது (36). கபூல் முகமது மரைக்காயர் தனது கப்பலில் அனுமதியின்றி வங்காளத்திற்கு சங்கு ஏற்றிச் சென்றபோது கப்பல் பறிமுதல் செய்யப்பட்டது (37).நாகூர் துறைமுகக் கப்பல்களில் நகுதா, சிராங்கு, மாலுமி, கிராணி, சுக்காணி போன்ற பணிகளில் ஈடுபட்டிருந்த பல முஸ்லிம்களின் பெயர்கள் ஆங்கிலேயரின் பதிவேடுகளில் நிறைய காணப்படுகின்றன (38).

கி.பி. 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாகூர் மரைக்காயர்கள் தங்களது கப்பல்களை கொழும்பு, அச்சை, பினாங்கு, மலாக்கா, மலேயா ஆகிய நாடுகளுக்கு வணிக நிமித்தம் அனுப்பி வந்தனர். ஐரோப்பாவில் நடைபெற்ற போர்களின் தொடர்பாக இந்தியாவிலும் ஆங்கிலேயருக்கும் பிரஞ்சுக்காரருக்கும் பகை மூண்டது. இப்போர்களில் நடுநிலை வகித்து வந்த டேனிஷ்காரர்களின் கொடி மற்றும் அனுமதிச்சீட்டுடன் நாகூர் மரைக்காயர்கள் தங்கள் கப்பல்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வந்தனர். ஆனால் டேனிஷ்காரர்கள் நடுநிலையிலிருந்து மாறியபோது, அவர்களது அனுமதிச்சீட்டுடன் சென்ற கப்பல்களை பிரஞ்சு நாட்டு போர்க்கப்பல்கள் வளைத்துப் பிடித்தன. பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையிலிருந்து தங்களை காப்பாற்றக்கோரி நாகூர் முஸ்லிம் வணிகர்கள் ஆங்கிலேய அரசிடம் விண்ணப்பித்துக் கொள்ளுகின்றனர்.

இந்த விண்ணப்பத்தில் கையொப்பமிட்டுள்ள பதினேழு பேர்களுள் பதிமூன்று பேர் முஸ்லிம்கள் ஆவர். அவர்களது பெயர்கள் வருமாறு :- முகமதலி மரைக்காயர், முகமது சையது மரைக்காயர், அலிசாயபு நகுதா, ஹபீப் முகமது மாலுமி, பீர் சாஹிப் நகுதா, முத்துனா சாஹிப், சையது இஸ்மாயில் லப்பை, முகமது ஹபீப் மரைக்காயர், மதார் சாஹெப் நகுதா, சையது முகமது நகுதா, சுலைமான் மாலுமி, பக்கீர் முகமது நகுதா, சித்தி முகமது இப்ராஹிம் நகுதா (39).

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து நாகூர் வணிகர்களின் கப்பல்கள் வாணிகப் பொருட்களோடு பயணிகளையும் தூரக்கிழக்கு நாடுகளுக்கு ஏற்றிச் சென்றன. மலாக்கா, மலேஷியா, இலங்கை, பர்மா ஆகிய நாடுகளுக்கு பெருமளவிற்கு முஸ்லிம்கள் சென்றனர். அங்கெல்லாம் ஆங்கிலேய ஆட்சி ஏற்பட்டதின் பயனாக தொழிலாளர்கள் நிறைய தேவைப்பட்டனர். நாகூரிலிருந்தும் இந்நாடுகளுக்குச் சென்றவர்கள் அந்நாடுகளில் தொழிலாளர்களாகவும், வணிகர்களாகவும் ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் ஈடுபட்டும் இருந்தனர்.

1786-ல் பினாங்கும் 1824-ல் சிங்கப்பூரும் உருவானபோது நாகூர் மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மரைக்காயர்கள் அங்கெல்லாம் கணிசமான என்ணிக்கையில் இருந்தனர். நாகூரிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்ற மரைக்காயர்கள் தங்களது ஆன்மீகத் தேவைகளுக்காக அங்கெல்லாம் நாகூர் ஆண்டவர் பெயரால் தர்காக்கள் கட்டி ஆண்டுதோறும் நாகூரில் நடைபெறுவதுபோல் கந்தூரியும் நடத்தினர். இதுபோன்ற கலாச்சார மையங்கள் (தர்காக்கள்) சிங்கப்பூரிலும், பினாங்கிலும் இன்றும் உள்ளன (40).
(பார்க்க மேலேயுள்ள படம்)
மேலும் நாகூர் தர்காவில் கந்தூரியின்போது ஏற்றுவதற்காக ‘கொடி’, கப்பல் மூலம் அனுப்பி வந்தனர்.1848-ல் சுமார் பத்து கப்பல் உரிமையாளர்கள் மட்டும் நாகூரில் இருந்தனர் என்பதற்கு அங்கு பதிவாகியுள்ள கப்பல்களின் பெயர்களைக் கொண்டு அறிகிறோம். இவை அனைத்தும் பாய்மரக் கப்பல்கள். அவையாவன : காதர்மீரா, ஷம்ஷீர், ஜூலிக்ஸ், கூடு காதர் பக்ஸ், பதேகாசிம், சகியா, பால காதர், அகமது பக்ஸ் முகமது மைதீன் பக்ஸ், ஜஹாங்கீர், ஷாஹுல் ஹமீது. இக்கப்பல்கள் சிங்கப்பூர், பினாங்கு, பர்மா, ஆகிய நாடுகளுக்கு பெரும்பாலும் பயணிகளை ஏற்றிச் சென்றன. குறைந்த அளவில் வணிகப் பொருட்களையும் ஏற்றிச் சென்றன (41).
19-ம் நூற்றாண்டின் இறுதியில் ஒரு சில கப்பல் உரிமையாளர்களையும், கப்பல் வணிகர்களையும் நாகூரில் காண முடிகிறது. இவர்களும் பொருளாதரத்தில் முனைப்பாக இல்லை என்பதும் தெரிய வருகிறது. இக்காலத்தில் செட்டியார் வணிகர்கள் பெரும் பணக்காரர்களாக விளங்கினர். முஸ்லிம் வணிகர்கள் பலர் அவர்களிடம் கடன் பெற்று வணிகம் செய்துள்ளனர். நாகூரில் வசித்த அரசன் குத்தூஸ் மரைக்காயர், லார்டு ஹாரிஸ் என்ற கப்பலுக்கு உரிமையாளர். இவர் 1890-ல் சாமிநாத செட்டியார் என்பவரிடம் ரூ.10,000 கடனாகப் பெற்று, பெற்ற கடனை திருப்பி அளிக்க முடியாமல் கப்பலையே கொடுத்து ஈடு கட்ட வேண்டியதாயிற்று (42). இவரது சகோதரர் அகமது நைனா மரைக்காயர் ஒரு கப்பல் வணிகர் என்ற செய்தியும் கிடைக்கிறது (43). மேலும் பல கப்பல் வணிகர்கள் வாழ்ந்திருக்கின்றனர். அவர்களைப் பற்றிய செய்திகளை அறியக்கூடவில்லை.

மரைக்காயர் தெரு, செராங்கு தெரு, மாலுமியார் தெரு, நகுதா தெரு, பயலட் தெரு என்பன இங்கு வாழ்ந்த கப்பல் வணிகர்களை நினைவு படுத்துகின்றன.1867-ம் ஆண்டில் நாகூர் மற்றும் நாகப்பட்டினம் துறைமுகங்கள் ஒன்றிணைக்கப்பட்டன. இருபதாம் நூற்றாண்டில் நாகூர் வணிகர்களும் நாகப்பட்டினத்திலிருந்து தங்களது வாணிபத்தைத் தொடர்ந்தனர். சிறிய பாய்மரக் கப்பல்கள் மூலம் இலங்கை, மேற்குக் கடற்கரை, கல்கத்தா, துறைமுகங்கள், ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டத் துறைமுகங்கள் ஆகியவற்றுடன் சிறிய அளவில் வணிகம் செய்து வந்துள்ள செய்திகள் தெரிய வருகின்றன. ஆனால் பிற நாடுகளுக்குச் சென்ற செய்திகள் கிடைக்கவில்லை. அதிக எடை கொள்ளளவு உள்ள ஆங்கிலேயரின் நீராவிக் கப்பல்களுடன் மரைக்காயர்களின் பாய்மரக் கப்பல்கள் போட்டி போட முடியவில்லையாதலாலும் ஆங்கிலேலேயரின் பெரும் மூலதனத்துடன் இவர்களது குறைந்த மூலதனம் ஈடுகொடுக்க முடியாததாலும் ஏறத்தாழ 16-ம் நூற்றாண்டிலிருந்து முஸ்லிம் இனம் சார்ந்த அரசுகளில் ஆதரவு இல்லாததாலும், கிழக்குக் கடற்கரை முஸ்லிம்களின் கடல் வாணிப வரலாறு 19-ம் நூற்றாண்டின் இறுதியில் நசிந்து மறைந்து போயிற்று. இதில் நாகூர் வணிகர்களும் அடங்குவர்.
17-18-ம் நூற்றாண்டுகளில் நற்றமிழ் புலவர்கள் பலர் நாகூரில் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் இலக்கிய உலகிற்கும் தமிழுக்கும் நல்ல சேவை புரிந்துள்ளனர். இக்காலக்கட்டத்தில் ஏறத்தாழ 30-க்கும் மேற்பட்ட புலவர்களின் பெயர்களும் 50-க்கும் மேற்பட்ட படைப்புகளும் நமக்கு தெரிய வருகின்றன. நாகூர் தந்த நல்ல தமிழ் புலவர் வரிசையில் முதலிடம் வகிப்பவர் குலாம் காதிர் நாவலர் ஆவார்கள். திரைகடலோடி தேடிய திரவியத்தை தக்கார்க்கு வேளாண்மை செய்வதில் நாகூர் வணிகர்கள் சிறந்து விளங்கினர். இவர்களது கொடைத் தன்மையினால் பல இஸ்லாமிய இலக்கியங்கள் உருவாகியுள்ளன என்பதை இஸ்லாமிய இலக்கிய வரலாற்று நூல்கள் பெருமையுடன் பேசுகின்றன (44).

நாகூரின் வணிக, ஆன்மீக கலாச்சார வரலாறு குறித்த ஒரு அறிமுகமே இக்கட்டுரை. நாகூர் குறித்து பதிவேடுகள் கூறும் விரிவான செய்திகள் மூலம் தமிழக முஸ்லிம்களின் வரலாற்றை தெளிவுபட தெரிந்துகொள்ள மேலும் பல செய்திகள் நமக்குத் தெரியவருகின்றன.

References :
1. T.W. Arnold , the Preacings of Islam, p. 267; Quadir Hussain Khan, South Indian Mussalmens pp.36-38
2. ஜே.எம். சாலி, தமிழகத்து தர்காக்கள், சென்னை,. 1981, பக்கம் -32.
3. S,. Mohamed Hussain Nainar, Tuzuki Wallahjahi, Madras - part I p.60.
4. M. Abdul Rahim, the Dargah of Nagore and Culture of Tamil Muslims, in Bulletin of the Institute of Traditional Culture, Madras, 1973, Jan to June pp. 92-104.
5. M. Joseph Costilloe, Francis Xavior, His lilfe and his time, Rome, 1997 - Vol II pp. 544-545.
6. V. Vridhagirisan, The Nayak, of Tanjore, Annamalai Nagar, 1942 - pp-32-33; M. Abdul Rahim op. cit.
7. ஜே.எம். சாலி, தமிழகத்து தர்காக்கள், சென்னை, பக்கம் -34
8. Tapan Roy Choudry, Jan company in Coromandel 1605-1690. A study in the inter relations of European Commerce and traditional economies. The Hague 1963-pp. 15-16.
9. The Cambridge History of India Vol. V. p. 127; Viridagirisan, opt. cit. pp. 155-6.
10. Thanjavur District Collectorate Records (TDCR) No. 3396 dt. 11th Sep. 1785.
11. Rangachari, Inscription in the Madras Presidency (Tanjore Dist.) no. 893 A & B.
12. Thanjavur Saraswathi Mahal Modi script record (TR) 4-488; 2-271, 187/C2; 104/C/9.
13. TDCR No. 3396 July 9th 1783.
14. TDCR No. 3331, p. 63.
15. Tazaki Wallajahi, pt. II pp. 196-197.
16. TDCR No. 3268. pp. 182-183.
17. ibid No. 3416 p.9. 19th July 1814; No. 3224, pp. 64-65 7th July 1788; No. 3496 pp. 69. 20th Feb. 1809.
18. G.O. Ms. 882 Law Dept. 17-2-1934.
19. B.S. Baliga, Tanjore District hand Book.
20. S. Arasarathnam Merchants companies and come in Coromandel 1600 - 1740, Cambridge pp. 27-29; TDCR No. 3335 p. 13.
21. TDCR No. 3271 p. 195.
22. Dodwell, the Madras Despatches, 1754-1765, p. 146. Sanjay Subramaniyam, Political Economy of South India and commerce, cambridge. p.92.
23. Tanjore Original papers, Vol I p. 239.
24. C.K. Srinivasachari, Maratha Rule in Carnatic p.306; Saraswathi Mahal Modi Script (Tr) No. n5-395.
25. Military consultations 1781-74A, letter from Sir Ire coot to Col. Barthwit, Ist March 1761 and also p. No. 728; M.C. 1781-47D p. 1371.
26. TDCR No. 3228 p.82.
27 ibid No. 3182 p.250.
28. FSG Public sundries Vol. No. 36, p.39; TDCR 4238 p. 2324.
29. TDCR No. 3175 p. 163.
30. FSG Commercial consultations for 1821, Vol. 29, p.1582.
31. Public consultations, 1806 pp. 56-57; Revenue sundries 1793-94 Vol. 18 pp. 1-15; TDCR No.
3349, p.5; No. 3325 p.65.
32. Public sundries No. 21, 25th June 1772.
33. FSG Board of Revenue No. 404 18th March 1805 pp 1842-1848.
34. TDCR No. 3337 p.45
35. TDCR No. 3325 p. 65; Public consultation Vol. 340 pp. 2450-60; Pleading of Mayors Court 1745, Vol V. pp. XV-XXI; India and Indian Ocean 1500-1800 (Ed) Ashin Das Gupta and M.N. Pearson, Calcutta-1987. pp. 10-19.
36. TDCR No. 4326 pp. 14-15
37. ibid No. 3336 pp. 38-42.
38. ibid No. 4252 pp. 148-49
39. FSG public consultation 1808, Vol 339, pp. 1314-1315.. 17th Feb. 1808
40. Susan Bayly, Saints, Goddesses and Kings, Muslims and Chiristians in South Indian Society 1700-1900 Cambridge p.93-94.
41. Public consultation, Vol. No. 831 p. 7-9. 1848; Vol. 832 p.7-9, 1848.
42. Indian Law Reporter Madras Series Vol. IXXII 1889 June - Dec. p.26-31.
43. Nagore Registration Dept. document No. 904/1893.
44. இஸ்லாமிய தமிழ்ச் சிற்றிலக்கிய மாநாட்டு மலர், புதுக்கோட்டை பிப்- 1992-
நன்றி : இஸ்லாமியத் தமிழிலக்கிய ஆய்வுக்கோவை
நன்றி : ஜெ.ராஜா முகமது M.A., B.Sc. & ‘சொல்லரசு’ மு.ஜாபர் முஹையதீன்.
நன்றி : ஆபிதீன் பக்கங்கள்

தமிழ் வளர்த்த நாகூர்

சித்தி ஜுனைதா

நாகூர் ரூமி

முகலாயர்களும் பாரத நாட்டு ரத்தங்களே !

நாகூர் படைப்பாளிகள்

Read more...

Monday, 26 May 2008

தமிழ் மணி




நியூஸிலாந்தைக் கண்டுபிடித்தது தமிழர்களா?
-ஆய்வுக் கட்டுரை:எச்.எஸ். முகம்மது ராஃபி

நியூஸிலாந்து அருங்காட்சியகம் கப்பல் மணிதிரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற முதுமொழியை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே கடைபிடித்து பல நாடுகளில் வியாபாரத்தில் கோலொச்சியவர்கள் தமிழர்கள். முற்கால இந்தியாவில் கப்பலோட்டும் கலை தமிழருக்கே உரித்தாயிருந்தது என்றால் அது மிகையில்லை.



ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் கப்பல்களைக் கட்டி கடலிலே செலுத்தியதை ஹரப்பா, மொகதஞ்சரோ நாகரிகங்களைப் பற்றிய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. சோழ மன்னர்கள் பலம் வாய்ந்த கப்பற் படைகளை உடையவராயிருந்தனர்.


இராஜராஜசோழன் லட்சக்கணக்கான தமிழ் வீரர்களை கப்பலில் கொண்டு சென்று இலங்கை, மலாய் முதலியத் தீவுகளை வென்றதாக வரலாறு கூறுகின்றது. மேலும் தமிழர்களின் கடல் கடந்த வணிகத்திற்கு முத்திரைப் பதிக்கும் விதமாக அமைந்துள்ளது நியூஸிலாந்து நாட்டின் அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டிருக்கும் தமிழ் மணி. நியூஸிலாந்து நாட்டில் வெங்கேரி என்னுமிடத்திடத்தருகே கண்டெடுக்கப்பட்டு தற்சமயம் நியூஸிலாந்து தலைநகர் வெலிங்டன் அருங்காட்சியத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கும் 'கப்பல்மணி' தமிழர்களின் கடல் கடந்த வணிபத்திற்கு சான்றாக மட்டும் இல்லாமல், நியூஸிலாந்து நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கிய தொன்மையானப் பொருளாகவே இதுக் கருதப் படுகின்றது.



இங்கிலாந்திலிருந்து நியூஸிலாந்திற்கு அனுப்பப்பட்ட சமயப்பரப்புக் குழுவில் இடம் பெற்ற வில்லியம் கோல்ன்ஸோ எனும் பாதிரியாரால் கண்டுபிடிக்கப் பட்ட இந்த வெண்கல மணியின் வாய் விழிம்பில் 'முகைதீன் வக்குசுடைய கப்பல் உடைய மணி' என்று மணியைச் சுற்றிலும் பொறிக்கப் பட்டுள்ளது. இம்மணியில் காணப்படும் எழுத்தைக் கொண்டு இது 17-ஆம் அல்லது 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர். முற்றிலும் வெண்கலத்தினால் ஆன இம்மணியை சுற்றிலும் 23 தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப் பட்டுள்ளது. 1836ஆம் ஆண்டில் இந்த மணியை வில்லியம் கோல்ன்ஸோ கண்டுபிடிப்பதற்கு முன்னர் இதில் உருளைக் கிழங்கை சமைத்துக் கொண்டிருந்தனர் நியூஸிலாந்து மௌரி இனப் பழங்குடியினர்.


வில்லியம் கோல்ன்ஸோ மௌரி இனப் பழங்குடியினரிடம் ஒரு இரும்பிலான சமையல் பாத்திரத்திற்கு இந்த மணியை பண்டம் மாற்று செய்து கொண்டார். மௌரி இனப் பழங்குடியினரோ இந்த மணியை பெரும் சூறாவளியில் கரையடைந்து, ஒரு பெரிய மரத்தின் வேர்களால் சூழப்பட்ட நிலையில் இதனைக் கண்டனர். பாதிரியார் மணியைக் காண்பதற்கு முன்னர் மௌரிகள் இதனை எத்தனை காலம் சமையல் பாத்திரமாக உபயோகித்தார்கள் என்றோ, மௌரிகள் எந்த ஆண்டில் கண்டெடுத்தனர் என்றோ குறிப்புகளும் இல்லை. இறுதியாக பாதிரியாரின் உயிலின் பிரகாரம் இந்த மணி நியூஸிலாந்து நாட்டின் தேசிய அருங்காட்சியத்தில் ஒப்படைக்கப்பட்டது.


நியூஸிலாந்தைக் கண்டுபிடித்தல் 15-ஆம் நூற்றாண்டின் வாக்கிலேயே தமிழர்கள் ஆஸ்திரேலியாக் கண்டத்திற்கு சென்று வாணிபம் செய்திருக்கலாம் என்று நம்பப் படுகின்றது. ஐரோப்பியக் கண்டத்து கடல் ஆய்வாளர்கள் தங்களது வியாபார நோக்கத்திற்காக பல்வேறு புதிய நாடுகளைக் கண்டுபிடித்தனர். இவ்வாறு அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களைக் கண்டுபிடித்த பிறகு வேறு புதிய நாடுகளை கண்டுபிடிக்க பசிபிக் பெருங்கடலில் பல ஆண்டுகள் வெள்ளையர் சலித்தெடுத்தனர்.


இறுதியாக இங்கிலாந்தின் ஜேம்ஸ் குக் எனும் கடல் ஆய்வாளர். 1769-ஆம் ஆண்டில் நியூஸிலாந்தை அவர் கண்டுபிடித்தார். நியூஸிலாந்து நாட்டின் கடற்கரைப் பகுதிகளில் தமிழர் ஒருவரின் பெயர் பொறிக்கப்பட்ட கப்பல் மணி இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் கிடைத்தது என்றால் அது ஆச்சர்யமான விஷயமில்லை தான். ஆனால் நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு தமிழர்கள் வெள்ளையர்கள் கண்டுபிடிப்பதற்கு முன்னரே தடம் பதித்தது மட்டுமின்றி வாணிபமும் செய்ததற்கும் இந்த கப்பல் மணி ஒன்றே போதுமான ஆதாரமாகவும் இதனைக் கருதலாம்.



வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த மணிக்கு தமிழகத்தில் மூன்று ஊரார்கள் உரிமை கோருகின்றனர் இதோ கீழே.வேதாளை மற்றும் மரைக்காயர்பட்டிணம் இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் மண்டபத்திற்கு மேற்கே இரண்டு மைல் தொலைவில் அமைந்துள்ள சிற்றூர்கள் வேதாளை மற்றும் மரைக்காயர் பட்டிணம். பெயருக்கு ஏற்றார் போல் இவ்வூர்வாசிகள் கப்பல் வணிகராகவும், கப்பல் உரிமையாளராகவும், கடல் சார்ந்த தொழில் வித்தகர்களாவும் விளங்கினர். சேது நாட்டின் சிறந்த துறைமுகமாக வேதாளை மற்றும் மரைக்காயர் பட்டிணம் திகழ்ந்தது என்றால் அது மிகைன்று. 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டின் துவக்கம் வரையினிலும் இவர்கள் கப்பல் வணிகத்தில் ஈடுபட்ட காலங்கள் பொற்காலம் என்றே வர்ணிக்கலாம்.


நியூஸிலாந்து நாட்டில் கண்டெடுக்கப் பட்ட மணி எங்களுக்குச் சொந்தமானது என ஒ.மு.சே.மு. உம்மு சல்மா பீவி மற்றும் அவரின் சகோதரர் ஒ.மு.சே.மு. செய்யது முகையதீன் ஆகியோர்; எங்கள் பாட்டனார் சேகப்பா அவர்களின் தாத்தாவே வக்காஸ் ஆவார். அவருக்கு சில கப்பல்களை வைத்திருந்ததாவும் அவற்றில் ஒரு கப்பலின் மணியாக இது இருக்கலாம் என்றும் கூறுகின்றனர். மரைக்காயர் பட்டிணத்து வாசிகள் வக்காஸ் எனும் பெயரை காலகாலமாக தங்களின் குழந்தைகளுக்கு இன்று வரை சூட்டிவருகின்றனர். மேலும் வக்காஸ் எனும் பெயர் தமிழகத்தில் வேறு எந்த ஊர்களிலும் புழக்கத்தில் கிடையாது. இன்று வேதாளை மற்றும் மரைக்காயர் பட்டிணத்தில் வாழும் மக்களில் பெரும்பாலோனோர் முகையதீன் வக்காஸ் அவர்களின் வழியில் வந்தவர்களே என்கின்றக் காரணத்தினாலும் இந்த மணியின் உரிமையை இவர்கள் பெற முனைவதாகத் தெரிகின்றது. வக்காஸிற்குப் பின்னர் அவரது மகன் முகையதீன் மீராசா ஷையாரின் பேரன் சேகப்பா, சேகப்பாவின் மகன்கள் ஐவரும் கப்பல் வணிகர்களாகவே வாழ்ந்து மறைந்திருக்கின்றார்கள். ஹபீபு முகம்மது அரசர் கீழக்கரையைச் சேர்ந்த ஹபீபு முகம்மது அரசர் மரைக்காயர் பட்டிணத்தை நிறுவினார். 1822ஆம் ஆண்டு மதுரை ஜில்லா கலேக்டர் மௌதா ரொசுபீத்தா என்பவர் ஹபீபு முகம்மது அரசரின் சகோதரர் அப்துல் காதர் சாகிபு மரைக்காயர் அவர்களுக்கு எழுதிக் கொடுத்த ஆவணம் ஒன்றின் மூலம் இது நிரூபணமாகின்றது. முதலில் ஹபீபு மம்மது புரம் என்று அழைக்கப் பட்டாலும் பின்னர் மருவி மரைக்காயர் பட்டிணம் என்றானது. இந்த மணி-கீழக்கரை வள்ளல் ஹபீபு மரைக்காயரின் நாப்பது கப்பல்களின் ஒன்றின் மணி எனவும் கீழக்கரை வாசிகள் கருதுகின்றனர். மரைக்காயர் பட்டிணத்தை ஹபீபு முகம்மது அரசர் உருவாக்கினாலும் கீழக்கரையினிலேயெ அவர் வாழ்ந்து மறைந்ததால் இந்த மணியை கீழக்கரைவாசிகள் உரிமை கோருகின்றனர்.மேலும் கீழக்கரை சேதுநாட்டின் முதன்மை துறைமுகமாக இருந்ததும் குறிப்பிடத் தக்கது. ஆயினும் பல இஸ்லாமிய எழுத்தாளர்கள் இந்த மணி ஹபிப் அரசருக்குச் சொந்தமானது என்று பல கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்தாலும் போதிய ஆதாரங்களை இதற்காக அவர்கள் மேற்கொள் காட்டவில்லை.முகையதீன் பக்ஸ் சமீபகால ஆய்வுகளில் பழவேற்காட்டில் மீர் முகம்மது ஷபீ மற்றும் ஜேன் டி மட்டு டி அக்வாரரெஸ் என்னும் டச்சுக்காரரும் இணைந்து கூட்டாக ஒரு கப்பலை நடத்தி வந்தனர். அந்தக் கப்பலுக்கு முகையதீன் பக்ஸ் என்று பெயர். இந்த கப்பல் பழவேற்காடு, நாகப்பட்டிணம் ஆகிய துறைமுகங்களிலிருந்து தூரகிழக்கு நாடுகளான ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து போன்ற நாடுகளுக்கு வாணிபத்தில் ஈடுபட்டிருந்தது. இந்த மணி இது போன்ற கப்பலைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்கின்றார் பிரபல தொல்லியல் ஆய்வாளர் மற்றும் எழுத்தாளருமான முனைவர்: ஜெ.ராஜாமுகம்மது (இவர் முன்னாள் புதுக்கோட்டை அருங்காட்சியகத் தலைவரும்; கூட) இலங்கைத் தமிழர்களின் மணியா! இந்த மூன்று ஊரார்களின் உரிமை போராட்டம் ஒரு புறம் இருக்கட்டும் என்சைக்ளோபீடியா ஆஃப் நியூஸிலாந்தில் (நுnஉலடழிநனயை ழக நெற ணநயடயனெ ) இந்த மணியை ஸ்ரீலங்கா நாட்டின் தமிழ் மணி என்று கூறப்படடிருந்தாலும் அதனை மெய்பிக்க எவ்விதமான சான்றுகளும் அதில் இணைக்கப்பட்டிருக்கவில்லை.தபால் தலை தமிழர்களின் கடல் கடந்த வாணிபத்திற்கு ஒரு மணி மகுடமாகவேத் திகழும் இந்த கப்பல் மணியை தபால்தலையாக வெளியிட்டு கப்பலோட்டியத் தமிழர்களுக்கு மகுடம் சூட்டவேண்டும் செய்வார்களா?.


ஆதார நூல்கள்:


1.வரலாற்றில் ஹபிப் முகம்மது அரசர்- இலங்கை எழுத்தாளர் மானாமக்கீன், மணிமேகலைப்பிரசுரம் (2004)

2.கீழக்கரை இலங்கை இனியத் தொடர்புகள் இலங்கை எழுத்தாளர் மானாமக்கீன், மணிமேகலைப்பிரசுரம் (1995)

3.விடியல் வெள்ளி மாதஇதழ் 2005-பிப்ரவரி மற்றும் 2005-அக்டோபர்

4.இஸ்லாமியக் கலைக் களஞ்சியம்- அப்துற்றகீம் (1979)

5.தமிழககத்தில் இஸ்லாமியர்கள் வரலாறு- ஏ.கே.ரிபாயி 1988

6.எம்கே.ஈ.மவ்லானா அவர்கள் எழுதிய 1.8.90ல் எழுதியக் கட்டுரை


படம்: 1836-ஆம் ஆண்டில் நியூஸிலாந்து நாட்டில் கண்டெடுக்கப்பட்ட தமிழர்களின் கப்பல் மணி.

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP