Tuesday 6 October, 2009

தாயிப் நகரில் தாஹா நபிகள்




நபிகள் பெருமான் -
இல்லாமல் வாடிய
ஏழை உலகம்,
கேட்காமலேயே
கிடைத்த அருட்கொடை !
தட்டாமலேயே
திறந்த கதவு !
தேடாமலேயே
தெரிந்த மூலிகை !

இளமையில் பெற்றோரை
இழந்த இவ்வனாதைதான்
உலகுக்கே தாயாகி
ஊட்டி வளர்த்தவர் !

படிக்கத் தெரியாத – இந்தப்
பாமர நபியிடம்தான்
பள்ளிக் கூடங்களும்
பாடம் பயின்றன
இல்லை ..
பல்கலைக் கழகங்களே
பாடம் பயின்றன !

கந்தல் அணிந்த - இந்தக்
கருணைநபி கையால்தான்
அம்மண உலகம்
ஆடையைப் பெற்றது !

பாலையில் முளைத்த - இந்த
பசுமர நிழலில்தான்
வெயிலும்கூட
இளைப்பாற வந்தது !

இந்த ஏழையை
ஈன்ற பின்னரே
கிடக்காத புதையல்
கிடைத்தது போன்று
இந்த உலகம்
இறுமாப் படைந்தது !

மண்ணில் – இந்த
மணிவிளக்கைக்
கண்டபின்தான்
விண்ணும்தன் சுடர்களுக்காய்
வெட்கம் கொண்டது !

வல்லூறுகளும் – இவர்
வலைக்குள் குடிபுகுந்து
வெள்ளைப் புறாக்களாய்
விண்ணெங்கும் பறந்தன !

உயர்மறை மகுடி – இவர்
ஊதியதகைக் கேட்டவுடன்
நாகத்தின் பற்களிலும்
நல்லமுதம் ஊறியது !

தனித்தனி சாதி
அறைகளில் கிடந்த
மனித எழுத்துக்களை
ஒரே வாக்கியமாக
அச்சுக் கோர்த்து
சகோதரத்துவ
சமுதாயம் கண்டவர் !

பாட்டால் புகழைப்
பலர் பெறுவர் – ஆனால்
பரமனின் நபியைப்
பாடுவதால் நமது
பாட்டுக்கல்லவா
பெரும்புகழ் கிடைக்கும்

அன்று – அந்தத்
தாயிப் நகரில்
தாஹா நபிகள் !

தாயிப் வாசிகளே !
விந்தை மனிதர் நீர்!
கல்லின் மீதுதான்
பூவைத் தூவுவீர்

ஆனால் அன்று
(பூமான் நபியெனும்)
பூவின் மீதல்லவா
கல்லைச் சொரிந்தீர் !

வெல்வதாக நினைத்தீர் !
ஆனால் – தோற்றவர் நீங்களே !
நீங்கள் வணங்கும்
கற்களை அல்லவா
கருணைநபி காலடியில்
மண்டியிட வைத்தீர் !

உங்கள் கற்கள்
ஏற்படுத்தியவை காயங்கள் அல்ல !
பொறுமைக்குக் கிடைத்த
இரத்தினப் பதக்கங்கள் !
இறை சோதனையின்
குங்கும முத்தங்கள் !

பொய்மையை எதிர்த்த
வாய்மைத் தூதருக்கு
ரணங்கள் தானே
ஆபரணங்கள் !

அதோ பாருங்கள் !
நீங்கள் எறிந்த கற்கள்
பச்சை ரத்தம்
படிந்து கிடப்பதை !
காயங்கள் செய்த
பிரச்சாரத்திற்குரிய
பெரிய வெற்றி !
அவை கூட
மதம் மாறி விட்டன !

தாயிப் வாசிகளே !
கனிமரம் என்பதால்
கல்லெறிந்தீரோ?
கல்லடி பட்டால்
கனி மட்டுமா உதிரும்?
காய்கூட உதிருமே !

ஆனால்
கல்லடிக்குக்
கனிமட்டும் உதிர்ந்த
கருணை மரத்தை
வேறு எங்கேனும்
கண்டவருண்டோ?

எங்கள் பெருமான்
காயம்பட்டதோ
அன்றொருநாள் !
ஆனால் இரத்தமோ
இன்றுமல்லவா வழிகிறது
எங்களின்
எழுதுகோல் வழியே !


[1978, நவம்பர் 14-ஆம் நாள் காயல்பட்டினத்தில் நிகழ்ந்த அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய மாநாட்டில் கவிக்கோ தலைமையில் நடந்த இஸ்லாமியக் கவியரங்கில் அவர் பாடிய தலைமைக் கவிதையின் ஒரு பகுதி]



கவிக்கோவைப் பற்றி கலைஞர்

“பாரதிக்கு தாசன்
பாரதி தாசனென்றால் – அந்தத்
தாசர்க்குத் தாசர் இவர்
தமிழ்க் கவிதை பாடுவதில்
குடமிட்ட தீபமிவர் – இனிமேல்
குன்றிலிட்ட விளக்காவார் !
புடமிட்ட தங்கமிவர் – இனிமேல்
புகழ் மீட்டும் வீணையிவர் !”

மு. கருணாநிதி

0 comments:

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP