Friday 9 October, 2009

மனிதனையும் கடவுளையும் பற்றி : மஆரியின் 'தியானங்கள் ' கவிதைத் தொகுப்பிலிருந்து (கி.பி.973-1057)




ஆங்கிலத்திலிருந்து தமிழில் : நாகூர் ரூமி

அரபியிலிருந்து ஆங்கிலத்தில் : ஆர். ஏ. நிகல்சன் (1868-1945)

அறிமுகம்

பாரசீகக் கவிஞர் உமர் கய்யாமைப் பற்றி நல்ல அபிப்ராயம் வைத்திருக்கும் வாசகர்கள் அனைவரும் அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய அரபு கவிஞர் மஆரி. எந்த காரணத்திற்காக உமர் கய்யாம் தனது நாட்டு பாரசீக மக்களிடம் ஆரம்பத்தில் பிரபலமாகவில்லையோ அதே காரணத்திற்காகத்தான் மஆரியும் தனக்கு முந்தைய
கவிஞரான முதனப்பி-யைவிட பிரபலமடையவில்லை. ஏனென்றால் மஆரி கட்டுப்பாடுகள் எதையுமே ஏற்றுக்கொள்ளாத ஒரு சுதந்திரமான முஸ்லிமாக இருந்தார். பல தரப்பட்ட விஷயங்களையும் பரந்து விரிந்த ஒரு தத்துவார்த்த அடிப்படையில் உள்வாங்கக் கூடியதாக அவருடைய பகுத்தறிவு மனம் இருந்தது. அது ஒரு ஒழுங்கற்ற முறையில் இருந்தாலும். உமர் கய்யாமுடையதைப் போலவே மஆரியின் கலாச்சாரமும் பரந்துபட்டதாக இருந்தது.
அவருடைய கவிதைகளை வாழ்வு, இறப்பு, மனித சமுதாயம், தத்துவம், சமயம் என பல பிரிவுகளில் ஆர்.ஏ. நிகல்சன் வகைப்படுத்துகிறார்.

ஒரு முக்கியமான விஷயத்தில் மஆரி உமர் கய்யாமிடமிருந்து வேறுபடுகிறார். அதாவது மஆரி ஒரு ஆன்மீக கவிஞராகவும் இருக்கிறார். உமர் கய்யாம் இந்த வாழ்வின் அவலங்களிலிருந்து தப்பிக்க புலன் இன்பங்களுக்குள் தஞ்சம் புகுந்து தப்பித்துக் கொள்வார். ஆனால் மஆரியோ ஒரு துறவு நிலை ஞானியின் வாழ்வை தேர்ந்தெடுத்துக் கொள்கிறார். அவருடைய தனிப்பட்ட வாழ்வை வைத்து அவருடைய ஆளுமையின் இந்த அம்சத்தை எளிதில் விளங்கிக் கொள்ளலாம். ஆரம்ப காலத்திலேயே அவருக்கு கண் பார்வை போய்விட்டது. ஆனாலும் அவர் இதையும் மீறி வியக்கத்தகு முறையில் கல்வியைப் பெற்றுக்கொண்டார். எனினும் இந்த விஷயம் வாழ்க்கையின் மீது ஒரு கசப்பை ஏற்படுத்தத்தான் செய்தது.

தனக்கான வாழ்வையும் வளத்தையும் தேடி அவர் தன் இளம் வயதில் காவியப் பெரு நகரமான பாக்தாதுக்குச் சென்றார். ஆனால் அங்கு அவர் பெற்ற அனுபவங்கள் அவருடைய கனவுகளையெல்லாம் தகர்ப்பதாக இருந்தது. அவர் வாழ்வின் மீது கொண்டிருந்த கசப்புணர்வை அது பரிபூரணப்படுத்தவே உதவியது. இந்த விரக்தி நிலையின் காரணமாக மனிதனை வேதனையில் இருந்து காக்கின்ற வழி குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருப்பதுதான் என்று கருதினார். அவருடைய வாழ்வின் பிற்பகுதி, படிப்பதும் எழுதுவதும் கற்றுக் கொடுப்பதுமாக கழிந்தது.

அவருடைய படைப்புகளாக மூன்று கவிதைத் தொகுதிகளையும் ஒரு உரை நடை தொகுதியையும் என்சைக்ளோபீடியா ப்ரிட்டானிகா 99 குறிப்பிடுகிறது. அவை முறையே : 1. ஸக்த் அல் ஜந்த், 2. லாஸும் மாலம் யல்ஸம் அல்லது லுஸுமியத், 3. ரியாலத்தல் குஃப்ரான், 4. அல் ஃபுசுல் வல் கய்த். முதல் தொகுதி அவருக்கு புகழைத்தேடித் தந்தது. நான்காவது உரை நடைப் படைப்பு திருக்குர்ஆ 'னைக் கிண்டல் செய்யும் தொனியில்
அமைந்திருந்தது.

தியானங்கள் என்று நிகல்சனால் பெயரிடப்பட்ட படைப்புகள் மூலமாகவே மரியை மேற்கத்திய உலகம் அறிந்து கொண்டது. அதிகாரம், பாரம்பரியம் கியவற்றைவிட அறிவையும் மனசாட்சியையும் மேலாக நினைத்த ஒரு ஞானத்தெளிவு பெற்ற முஸ்லிமுடைய வாழ்க்கையின் மீதான மறைமுகமான விமர்சனமாக அவை இருந்தாலும் மிகவும்
கூர்மையானதாகவும் சக்தியுடையதாகவும் செறிவு கொண்டதாகவும் இருந்தன அவருடைய கவிதைகள்.

கீழ்வரும் மொழி பெயர்ப்புகளில் சந்தம், எதுகை, மோனை, அளவு போன்ற விஷயங்களில் சுதந்திரம் எடுத்துக்கொள்ளப் பட்டிருக்கிறது. சாறுகள் பழங்களாக்கப் பட்டுள்ளன. ஆனால் ஒட்டு மொத்தமாகப் பார்க்கும்போது கவிஞரின் சிந்தனை மற்றும் வெளிப்பாடு ஆகியவற்றுக்கு துரோகம் செய்யாத முறையிலேயே மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

1

மறுமையின் பெட்டிக்குள்
ஆழப்புதைந்து காத்திருக்கின்றன நிகழ்வுகள்
பாதுகாப்பு வானவர்கள்
மூடியைத் தூக்குவதற்காக.

காலத்தை கவிதையாகக் கொண்டிருக்கும்
நித்தியப் படைப்பாளன்
நெய்ய வேண்டியதில்லை அதற்குள்
புதுமையற்ற செயற்கையான சந்தத்தை.

இப்படியே கழிகின்றன இரவுகள்
குரல்கள் ஊமைகளாக.
வேகமாகவோ மெதுவாகவோ
வருவதென்னவென்று தெரியாமல்.

* * *

அல்லாஹ்வின் விருப்பம் கொண்டு
பாதுகாப்பாய்
பாதைவிலகாமல் காலத்தின் முனைகள்
இறங்குகின்றன நம்மீது.

அவன் கொடுத்ததெல்லாம் கடனே
திரும்ப எடுத்துக்கொள்ள;
அவன் பரிசில் மகிழ்ந்து வாழ்கின்றன
மனிதர்களின் முட்டாள்தனங்கள்.

2

நான் தேர்ந்தெடுத்துக் கொள்ளவில்லை
பிறப்பையோ முதுமையையோ வாழ்வையோ;
நேற்று தரவிரும்பாத எதை இன்று தரப்போகிறது ?
இங்குதான் நான் தங்கவேண்டும், விதியின் இரு கைகளாலும் கட்டப்பட்டு
போகவும் முடியாது, போகச்சொல்லும் வரை.
இருட்டு மாயையிலிருந்து எனக்கு வழிகாட்டும் நீங்கள்
பொய் சொல்கிறீர்கள் - உங்கள் கதை குழப்பவே செய்கிறது
மாற்ற முடியுமா நீங்கள் வெட்கமுடன் முத்திரை குத்துவதையெல்லாம் ?
மாற்ற முடியாததால்தானே அவை அப்படி உள்ளன ?

3

சில இதயங்கள் லேசாக எடுத்துக்கொள்கின்றன கட்டளைகளை
எனினும் யாருக்கு அழிவு என்று எவருக்குமே தெரியாது
முஹம்மதின் குர்ஆனும், ஆமாம், மூஸாவின் தவ்ராத்தும்
மர்யத்தின் மகனின் இன்ஜீலும் தாவூதின் ஸபூரும்
அவை தடுத்தவை பற்றி தேசங்களுக்கு அக்கறையில்லை,
அழிந்தது அவைகளின் அறிவு வீணாக,
மக்களோடு சேர்ந்து.
மனிதன் தங்க இரண்டு வீடுள்ளது, வாழ்க்கையோ
நிற்காமல் கடந்து செல்லும் பாலத்தைப் போல் உள்ளது.
வீட்டை விட்டுவிட்டு கல்லறையில் கூடுகிறது கும்பல் !
இருப்பில் இருப்பதில்லை இல்லமோ இடுகுழியோ.

4

காலம் காலமாக காரிருளே கவிழ்ந்திருந்தது
எந்த விடியலும் எழுப்பவில்லை ஒரு சூரியனை.
எல்லாம் மாறுகிறது, இம்மை மட்டும் நிற்கிறது அசையாமல்
தன் அனைத்து மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய நிலங்களுடன்.

எழுதுகோல் இயங்க, கட்டளை நிறைவேறிவிட்டது
உலர்ந்து விட்டது மை எழுதுதோலின்மீது, விதியின் விருப்பப்படி
பாதுகாவலர்களால் காப்பாற்ற முடியவில்லை கிஸ்ராக்களை
பிரபுக்களால் கல்லறையிலிருந்து சீசரை.

5

இஷ்டத்துக்கு சுற்றி வந்தவனை
இடுகுழிக்குள் போ என்று ஒரு நாள் சொல்லுவது
மனிதனுக்கு மிகவும் துன்பமானதே.
எத்தனை முறை நமது பாதங்கள் மிதித்துள்ளன மண்ணுக்குக் கீழே
பெருமை கொண்ட புருவத்தையோ மிருதுவானவரின் எலும்புகளையோ !

6

நான் வரவேற்கிறேன் இறப்பின் வருகையையும் புறப்பாட்டையும்
தன் ஆடைகளினால் என்னை மூடிவைப்பான் என்பதால்
இவ்வுலகம் எப்படிப்பட்ட இடமெனில்
இங்கிருப்பவர் இருக்கும் அறிவனைத்தும் பெற்றால்
அழமாட்டார் இங்கு இல்லாதவருக்காக.
எண்ணிலடங்காத் துன்பங்கள் எத்தனை பேரை கொண்டுவந்தன
தன் கைகளின் கீழும் நெஞ்சோடணைத்தும் !
வகிர்ந்தெடுக்கிறது, வெட்டிச் சாய்க்கிறது தன் வாட்களைக் கொண்டு நம்மை
வீட்டிலேயே நம்மை ஈட்டி கொண்டு குத்துகிறது,
நிச்சயச் சிறகுகள் கொண்ட அம்புகளால்.
செல்வமும் செல்வாக்குமாய் அதன் பரிசுகளை வென்றவர்கள்
கொஞ்ச தூரம்தான் தள்ளி நிற்கின்றார்கள்
பரிசுகளை இழந்தவர்களை விட்டும்.
* * *
என்ன வினோதம், எவ்வளவு விரும்புகிறான் மனிதன்
துர் நாற்றத்தின் தாயை, திட்டிக்கொண்டே !

7

காலம் உன் வெற்றிக்கு உதவுமானால் விரைவில்
உன் எதிரியையும் பழி தீர்க்க வைக்கும்.
பகலின் உஷ்ணங்கள் எடுத்துக்கொள்கின்றன யுத்தத்தில் எஞ்சியதென
ஈரவிடியல்கள் விட்டுச் சென்றதை.

8

ஓ தாமின் மகனே, போகும்போதே தங்கிக்கொள்கிறாய் நீ
உறங்கியும் கொள்கிறாய் உனக்கான உறைவிடத்தில்,
இரவு முழுவதுமான பயணத்தில்.
இவ்வுலகில் தங்குவோர் அனைவருக்கும் உள்ளது லாபம் பற்றிய நம்பிக்கை
எனினும் வாழும் மனிதர் அனைவரும் எப்போதும் நஷ்டவாளிகளே
கிழக்கிலும் மேற்கிலும் எங்கு நோக்கினும் குருடர்கள்
தாங்கள் சாய்ந்து கொள்ளும் கழிகளை சொத்தாக எண்ணிக்கொண்டு.

9

என் சைகளின் முத்துக்களை நான் கோர்க்கும்போது
ஐயகோ, வாழ்வின் குறுகிய நூல் போதவில்லை.
பெரிய பெரிய பக்கங்களும் போதவில்லை
மனிதனின் முழு நம்பிக்கையையும் கொள்ள,
மனித வாழ்வோ ஒரு மகாதொகுப்பு.

10

பல இனங்களின்மீது பரவியது பகலவனின் வெளிச்ச வலை
அவிழ்த்தது தன் முத்துக்களை, ஒரு நூல் கூட விட்டுவிடாமல்.
இந்த பயங்கர உலகம் பரவசப்படுத்துகிறது,
அவள் பெற்றெடுக்கும் அனைவரும்
அநித்யக் கோப்பையிலிருந்தே குடித்தாலும்.
கெடுதிகளின் தேர்வு : எது வேண்டும் உனக்கு ?
மடிந்து வீழ்தலா வேதனையான வாழ்வா ?

11

தனது கேவலமான நோக்கங்களுக்காக
ஏறுகிறான் மேடை
மறு உயிர்ப்பில் நம்பிக்கை இல்லாவிடினும்
கேட்போரை அச்சுறுத்துகிறான்
நினைவுகொள்ளலை ஸ்தம்பிக்க வைக்கும் தன்
கடைசி நாளைப் பற்றிய கதையை அவிழ்த்துவிடும்போது.

12

உன் சிந்தனை தூண்டிய நெருப்பு
உன்னருகில் ஒரு பாதையைக் காட்டியது
உன்னை வழி நடத்த
ஒளியை நீ தேடிக்கொண்டிருக்கும்போது.
வானசாஸ்திர வல்லுனர்களும், மந்திரவாதிகளும்,
குறிசொல்பவர்களும் ஏமாற்றுக்காரர்கள்,
இவரெல்லாம் மறைக்கின்றனர் நேர்மையற்ற சுயநலப் பேராசையை.
வயசான பிச்சைக்காரனின் கைகள் நடுங்கினாலும்
வாங்கிக்கொள்ள மறுப்பதில்லை எப்போதுமே.

13

சத்தியத்தை மறைக்கிறது செல்வம்,
கிளம்பிவிடுகிறது வெளியில் குறைபாடுகளின் குரல்
அனைத்துப் பிரிவுகளும் அகமகிழ்கின்றன
அதற்கு மரியாதை செய்ய.
முஸ்லிமுக்கு கிடைக்கவில்லை ஜகாத்
பள்ளிவாசலை விட்டு செல்கிறான் பக்கத்து தேவாலயத்துக்கு.

14

யார் காப்பாற்றுவார் என்னை
பொருத்தமற்று புகழும் நகரத்தில் வசிப்பதினின்றும் ?
பணக்காரன், பக்திமான், பண்டிதன் : இப்படிப்பட்டது எனது புகழ்
எனினும் எனக்கும் அவற்றுக்கும் இடையில் எத்தனையோ தடைகள்.

* * *

அறியாமைக்குக் கடன்பட்டிருந்தேன், அறிஞனாக அறியப்பட்டபோது
சிலரால் - அதிவினோதமில்லையா என் நிலை ?
உண்மையில் நாமனைவரும் உருப்படாதவர்கள்
உன்னதமானவனல்ல நானோ அவர்களோ.

வாழ்வின் இறுக்கமான பிடியை பொறுக்கமுடியவில்லை எனது உடம்பால்
அழிவையும் எப்படி அணைக்க வைப்பது ?
ஓ மரணத்தின் மாபெரும் பரிசுகளே ! அவன் கொண்டுவருகிறான்
வலியின் பின் வசதியையும்
சப்தத்தின் பின் நிசப்தத்தையும்.

15

நின்று வணங்கு நாயனை நன் பகலில்
பொறுத்துக்கொள் கவனிப்பை, முடியும்போது.
உனக்குப் பிடித்த உணவை உன்
தாராளக் குதிரைக்கும் தந்து சமபங்களிப்பதே சரியானது.
மின்னும் எண்ணெயும் உலர்ந்த திராட்சையும்
உனக்கு முன்னால் வைத்துக்கொள் உணவாக ..
குறைவு என்றாலும் அதுவே நிறைவு.
குடிப்பதற்கொரு களிமண் ஜாடி போதும்
விரும்பாய் நீ வெள்ளியிலோ தங்கத்திலோ.
கோடையில்
உன் நிர்வாணம் மறைக்கும் துணிகளே போதும்;
பருத்த நாட்டுத்துணி பனிக்காலத்துக்கு.
நான் தடைசெய்கிறேன் நீ நீதிபதியாயிருப்பதை
பள்ளிவாசல்களில் பிரசங்கமும் வேண்டாம்
தொழுகையையும் நடத்த வேண்டாம்;
தளபதியாகவும் வேண்டாம் சாட்டையுடன்
வீரன் வெளிப்படுத்தும் வாளைப்போல.
நெருங்கிய உறவினரிடமும் நல்ல நண்பரிடமும்
நேசிக்கவில்லை நான் இவற்றை.
இஷ்டப்படி செலவு செய் உனது ஆன்மாவை
அல்லது காப்பாற்று.

அவமானமாயுள்ளது சிலரது ஆதரவு :
ஒப்படைத்துவிடு உன்னை
அவனது நித்திய அக்கறைகளிடம்
அவனைப் பற்றிய பயங்களினால் அலங்கரிக்கட்டும்
உன் மனைவி தன்னை
முத்துக்களையும் மரகதங்களையும் மிஞ்சி மின்ன.
அனைத்தும் புகழ்கின்றன அவனை :
காகங்களின் கரைசலும் வெட்டுக்கிளியின் வாய்மொழியும்
பறைசாற்றுகின்றன அவன் புனிதத்தை.
அவை உனது கண்ணியத்தை
எல்லாப்புகழும் உள்ள இடத்தில் :
மலை நாட்டுக் காற்றைத் தேடும்
பள்ளத்தாக்கில் வசிப்பவனல்ல அவன்.

16

இம்மையின் சிறப்புகள் வெளிப்படும் மனிதகுலமே -
தலைவர்கள் தங்களுக்குள் நிறுவும் ஆட்சியெல்லாம்
வளரும் அல்லது தேயும் நிலவின் காட்சிகள்தான்.
பிள்ளைகளின்மீது கொண்ட பாசத்தை
செய்கையினால் நிறுவமுடியுமெனில்
ஞானத்தின் ஒவ்வொரு சொல்லும்
பிள்ளை பெறாமலிருக்கச் சொல்லும்.

17

இரண்டு விதிகள் நம்மை இறுக்கிப்பிடிக்கின்றன இன்னும்
நாளையும் நேற்றும்
இரு பெரும் பாத்திரங்கள் இறுகத்தழுவுகின்றன
நம்மைச் சுற்றி - காலமும் இடமும்.

இயக்கியவனின் இலக்கு என்னவென
இயம்பும்போதெல்லாம் நாம்
கேட்கிறது ஒரு பதில் குரல்
மனிதர்கள் சொல்லாத சொல்.

18

குற்றத்தை தண்டிப்பது தவறு
குற்றவாளிகளாக விதிக்கப்பட்டிருப்பின்.
தாதுப்பொருளை கடவுள் படைத்தபோது
அவருக்குத் தெரியும் ஒரு காலத்தில்
அவைகள் காரணமாகும்
இரும்புச் சேணம் பூட்டப்பட்ட,
இரும்பு லாடமடிக்கப்பட்ட
குதிரைகளின் பிடரிகளிலிருந்து
ரத்தத் துளிகள் சொட்டும் வாட்களாய் மின்னும் என.

19

இவ்வுலகில் வடிவம் தரும் உடல்
ஒரு ஜாடி; ஏமாந்து விடாதே ஆன்மாவே !
நீ தேன் ஊற்றும் கோப்பை மலிவானது
உள்ளே உள்ளதோ விலை மதிப்பற்றது.

20

சிரிக்கிறோம் நாம், நமது நகைப்போ நகைப்புக்குரியது.
நாம் அழலாம், கடுமையாகவே
கண்ணாடியைப் போல சிதறடிக்கப்படுகிற நாம்
திரும்ப வடிவமைக்கப் படாமலே.

குறிப்புகள்
-------------
1. தவ்ராத், சபூர், இன் ஜீல், ஃபுர்கான்(குர் ஆன்) ஆகிய நான்கு வேதங்களும் முறையே தாவூது(டேவிட்),
மூஸா(மோசஸ்), ஈஸா(மரியத்தின் மகன் என்று குர் ஆனில் குறிப்பிடப்படும் இயேசு கிறிஸ்து), முஹம்மது
ஆகியவர்களுக்கு அருளப்பட்டதாக இஸ்லாம் கூறுகிறது.

2. கிஸ்ரா - பாரசீக (ஈரான்) மன்னர்

3. துர் நாற்றத்தின் தாய் - இந்த உலகம்.
ஒருவரைத் திட்டும்போதோ புகழும்போதோ ஒன்றின் தந்தை என்றோ தாய் என்றோ சொல்வது அரபியரின்
பழக்கம். முட்டாள் என்று திட்டுவதற்கு பதிலாக, அறியாமையின் தந்தையே (யா அபூ ஜஹில்!) என்பார்கள்.
ஒருவர் ரொம்ப தூசி படிந்த மேனியராக இருந்தால், தூசியின் தந்தையே (யா அபா துராப்!) என்பார்கள்.
அந்த முறையில்தான் இந்த உலகம் துர் நாற்றத்தின் தாய் என்று கவிஞரால் வர்ணிக்கப்படுகிறது. தந்தை என்பதும்
தாய் என்பதும் காரணகர்த்தா, பிறப்பிடம் என்ற அர்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது.

4. ஜகாத் - (முஸ்லிம்களின் ஐந்து கடமைகளில் ஒன்றான) ஏழை வரி.

-- புது எழுத்து 7, 2003
நன்றி திண்ணை / Thursday November 13, 2003

Read more...

Tuesday 6 October, 2009

தாயிப் நகரில் தாஹா நபிகள்




நபிகள் பெருமான் -
இல்லாமல் வாடிய
ஏழை உலகம்,
கேட்காமலேயே
கிடைத்த அருட்கொடை !
தட்டாமலேயே
திறந்த கதவு !
தேடாமலேயே
தெரிந்த மூலிகை !

இளமையில் பெற்றோரை
இழந்த இவ்வனாதைதான்
உலகுக்கே தாயாகி
ஊட்டி வளர்த்தவர் !

படிக்கத் தெரியாத – இந்தப்
பாமர நபியிடம்தான்
பள்ளிக் கூடங்களும்
பாடம் பயின்றன
இல்லை ..
பல்கலைக் கழகங்களே
பாடம் பயின்றன !

கந்தல் அணிந்த - இந்தக்
கருணைநபி கையால்தான்
அம்மண உலகம்
ஆடையைப் பெற்றது !

பாலையில் முளைத்த - இந்த
பசுமர நிழலில்தான்
வெயிலும்கூட
இளைப்பாற வந்தது !

இந்த ஏழையை
ஈன்ற பின்னரே
கிடக்காத புதையல்
கிடைத்தது போன்று
இந்த உலகம்
இறுமாப் படைந்தது !

மண்ணில் – இந்த
மணிவிளக்கைக்
கண்டபின்தான்
விண்ணும்தன் சுடர்களுக்காய்
வெட்கம் கொண்டது !

வல்லூறுகளும் – இவர்
வலைக்குள் குடிபுகுந்து
வெள்ளைப் புறாக்களாய்
விண்ணெங்கும் பறந்தன !

உயர்மறை மகுடி – இவர்
ஊதியதகைக் கேட்டவுடன்
நாகத்தின் பற்களிலும்
நல்லமுதம் ஊறியது !

தனித்தனி சாதி
அறைகளில் கிடந்த
மனித எழுத்துக்களை
ஒரே வாக்கியமாக
அச்சுக் கோர்த்து
சகோதரத்துவ
சமுதாயம் கண்டவர் !

பாட்டால் புகழைப்
பலர் பெறுவர் – ஆனால்
பரமனின் நபியைப்
பாடுவதால் நமது
பாட்டுக்கல்லவா
பெரும்புகழ் கிடைக்கும்

அன்று – அந்தத்
தாயிப் நகரில்
தாஹா நபிகள் !

தாயிப் வாசிகளே !
விந்தை மனிதர் நீர்!
கல்லின் மீதுதான்
பூவைத் தூவுவீர்

ஆனால் அன்று
(பூமான் நபியெனும்)
பூவின் மீதல்லவா
கல்லைச் சொரிந்தீர் !

வெல்வதாக நினைத்தீர் !
ஆனால் – தோற்றவர் நீங்களே !
நீங்கள் வணங்கும்
கற்களை அல்லவா
கருணைநபி காலடியில்
மண்டியிட வைத்தீர் !

உங்கள் கற்கள்
ஏற்படுத்தியவை காயங்கள் அல்ல !
பொறுமைக்குக் கிடைத்த
இரத்தினப் பதக்கங்கள் !
இறை சோதனையின்
குங்கும முத்தங்கள் !

பொய்மையை எதிர்த்த
வாய்மைத் தூதருக்கு
ரணங்கள் தானே
ஆபரணங்கள் !

அதோ பாருங்கள் !
நீங்கள் எறிந்த கற்கள்
பச்சை ரத்தம்
படிந்து கிடப்பதை !
காயங்கள் செய்த
பிரச்சாரத்திற்குரிய
பெரிய வெற்றி !
அவை கூட
மதம் மாறி விட்டன !

தாயிப் வாசிகளே !
கனிமரம் என்பதால்
கல்லெறிந்தீரோ?
கல்லடி பட்டால்
கனி மட்டுமா உதிரும்?
காய்கூட உதிருமே !

ஆனால்
கல்லடிக்குக்
கனிமட்டும் உதிர்ந்த
கருணை மரத்தை
வேறு எங்கேனும்
கண்டவருண்டோ?

எங்கள் பெருமான்
காயம்பட்டதோ
அன்றொருநாள் !
ஆனால் இரத்தமோ
இன்றுமல்லவா வழிகிறது
எங்களின்
எழுதுகோல் வழியே !


[1978, நவம்பர் 14-ஆம் நாள் காயல்பட்டினத்தில் நிகழ்ந்த அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய மாநாட்டில் கவிக்கோ தலைமையில் நடந்த இஸ்லாமியக் கவியரங்கில் அவர் பாடிய தலைமைக் கவிதையின் ஒரு பகுதி]



கவிக்கோவைப் பற்றி கலைஞர்

“பாரதிக்கு தாசன்
பாரதி தாசனென்றால் – அந்தத்
தாசர்க்குத் தாசர் இவர்
தமிழ்க் கவிதை பாடுவதில்
குடமிட்ட தீபமிவர் – இனிமேல்
குன்றிலிட்ட விளக்காவார் !
புடமிட்ட தங்கமிவர் – இனிமேல்
புகழ் மீட்டும் வீணையிவர் !”

மு. கருணாநிதி

Read more...

Wednesday 16 September, 2009

Day & Night


Read more...

Friday 11 September, 2009

மு.மேத்தாவின் கவிதை



உன்னுடைய கொடியை
உயர்த்திப் பிடித்துக் கொள்!
எதற்காக
அடுத்தவர் கொடிக்கம்பத்தை
அறுக்கத் துடிக்கிறாய்?

உன்னுடைய மார்க்கத்தில்
பூக்களைத் தூவிக் கொள்!
எதற்காக
அடுத்தவர் மார்க்கத்தில்
முட்களைப் பரப்புகிறாய்?

உன்னுடைய படத்தை
ஆணியில் மாட்டிக் கொள்!
எதற்காக
அடுத்தவர் படத்தின் மேல்
ஆணி அறைகிறாய்?

உன்னுடைய நிறைகளை
ஊரெங்கும் சொல்லிக் கொள்!
எதற்காக
அடுத்தவர் குறைகளை
ஆராய்ச்சி செய்கிறாய்?

உன்னுடைய தோட்டத்தில்
வேலி போட்டுக் கொள்!
எதற்காக
அடுத்தவர் தோட்டத்தில்
அத்து மீறுகிறாய்?

ஊரை எழுதுகிறாய்!
பேரை எழுதுகிறாய்!
எப்போது
உண்மையில் நீ யாரென்று
எழுதப் போகிறாய்?

மதத்தைச் சொல்கிறாய்!
சாதியைச் சொல்கிறாய்!
எப்போது
மனிதன் என்று நீ
சொல்லப் போகிறாய்?

****
“மனிதனைத் தேடி..” - மு. மேத்தா
கவிதா பதிப்பகம், சென்னை-17

Read more...

Monday 31 August, 2009

பவுனு பவுனுதான்

கடந்த 19.08.2009 ஆம் ஆண்டு புதன்கிழமை இரவு 8.30 மணிக்கு நாகூர் தர்கா உட்புறம் திறந்த வெளி அரங்கில் நாகூர் தர்கா ஆஸ்தான சங்கீத மகா வித்வான் உயர்திரு S.M.A. காதிர் அவர்கட்கு "வாழ்நாள் சாதனையாளர்" விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

25.08.1952 - ஆம் ஆண்டு நாகூர் தர்கா வித்வான் என்ற சிறப்புப் பதவி அளிக்கப் பெற்ற இவரை 57 வருடங்கள் கழித்து இதே மாதத்தில் இம்மாமனிதனின் மணிமகுடத்திற்கு மேலும் ஒரு சிறகினைச் சொருகி அழகு பார்த்திருக்கிறது நாகூர் தமிழ்ச்சங்கம்.

வாழ்த்துவதற்கு வயது தேவையில்லை என்று உணர்த்தியிருக்கிறது நாகூர் தமிழ்ச் சங்கம். பிறந்து இரண்டரை வயதான தத்தித் தவழுகின்ற இந்த குழந்தை 86 வயதான இந்த சங்கீத சாம்ராட்டினை வாழ்த்தியிருப்பது நமக்ககெல்லாம் பெருமை.

ஆங்கிலத்தில் "Better Late than Never" என்பார்கள். இந்த பாராட்டு தாமதமாக வந்தடைந்தாலும் தகுந்த நேரத்தில் கிடைத்திருப்பது நமக்கு மட்டிலா மகிழ்ச்சி.


யான் வாசித்தளித்த கவிதை இது :

"சுவைப்போர்" நிறைந்த ஊர்
இந்த ஊர் - என் சொந்த ஊர்
ருசியைச் சுவைப்போரும்
இசையைச் சுவைப்போரும்
வசிப்போர் இந்த ஊர்

"வாரரோ வாராரோ
ஞானக்கிளியே"
என்று பாடிய
கானக்குயிலுக்கு
வாழ்த்துப்பா பாட
[பாப் (Pop) ஆட அல்ல]
வாய்த்தமைக்கு
வல்லோனை வணங்குகிறேன் !

சரீரம் தளர்ந்தாலும்
சாரீரம் தளராத
வீரியமிக்க
ஆரிய வாசம் வீசும்
ஸ்வரம் இவர் வசம் - இது
இறைவன் கொடுத்த வரம் !

மரபிசைக்கு ஒரு ICON
இந்த மேதகு மரைக்கான்

இவருக்கு சங்கீதமும் தெரியும்
இங்கிதமும் தெரியும்

பாடிப் பாடியே
பாடி இப்படியே
(இப்போது தான் Body இப்படி!)
பணக்காரன் ஆனவர் இவர் !!

ஆம் .. .. ஒருகாலத்தில்
பெரும் பணக்காரனாய் இருந்து .. ..
பாடிப்பாடியே
பணக்காரன் ஆனவர் !!!

இவருக்கிருந்த செல்வத்தில்
மாளிகைகள் கட்டி இருக்கலாம்
ஆனால் ..
மாளிகைகள் ஒருநாளில்
மண்ணோடு மண்ணாக இடிந்து விடும்.

இவரிழைத்த
- ராகமாலிகை
- தாளமாலிகை
என்றென்றும்
எங்கள் காதுகளில்
தேனாய் இனிக்கும்.

பணக்கட்டுகளை காட்டிலும்
தாளக்கட்டுகளை கூடுதலாய் நேசித்தவர் - வீட்டின்
நடுக்கட்டில் இவர் பாடல்
களைகட்டும்

இவருக்கு இன்னும்
எத்தனையோ கோடிகள்
இறுக்கமாய் உண்டு
உண்மைதான் .. ..
சிஷ்ய-கோடிகள் பலவுண்டு

பாட்டென்றாலே
பலபேர் கத்துவான் - இந்த
பாட்டுடைத் தலைவன்
எல்லோருக்கும் வித்துவான்

இவருக்கு மணியான சீடர்கள்
many many - அதில்
தலையாய சீடர்தான்
இந்த "இசைமணி"

இவர் மட்டும்
ஐயர்வாளாய் இருந்திருந்தால்
இந்நேரம்
ஐநா வரை இவர் குரல்
எட்டியிருக்கும்

நாகூரில் பிறந்ததினால்
நாற்சுவரில் இவர் புகழ்
அடங்கிப் போனதோ?

திருட்டுத் தொழில்
இவர் தொழில்.
எத்தனை உள்ளங்களை
இவர் குரல் இதுவரை
கொள்ளை கொண்டிருக்கும்???

இவர் கலப்படக்காரர் ..
செய்ததோ முறையான கலப்படம்
கலப்படத்தில் அதுவென்ன
முறையான கலப்படம்?

இந்துஸ்தானியையும்
கர்னாடகத்தையும்
கலப்படம் செய்தது
நிருபணம்

- பாகேசீரி (நமக்கு ரவாகேசரிதான் தெரியும்(
- மால்கோஸ் (நமக்கு தெரிந்தது வெறும் முட்டைகோஸ்)
- மோகனம்
- சஹானா
- சுபபந்துவராளி
இவையனைத்தையும்
ஒன்றாக இணைத்து
பாடவல்ல வல்லமை
இவருக்குள்ள பெருமை

தர்பாரில்
கானடா ராகம்
இசைப்பவர் இவர்.
ஆம் ..
நாகூரார் தர்பாரில் !

தலைக்கனமில்லா இவருக்கு
ஆரோகணம் முதல்
அவரோகணம் வரை
அத்தனையும் அத்துப்படி

இவர் தொடாத ராகமில்லை .. ..
இவர் பாடாத புலவர்களில்லை ..

- உமறுப் புலவர்
- காசீம் புலவர்
- காலகவிப் புலவர்
- வண்ணக் களஞ்சியப் புலவர்
- ஆரிபு நாவலர்
- ஆபிதீன் புலவர்
- பண்டிட் உசைன்
- குணங்குடி மஸ்தான்
- கலைமாமணி சலீம்

ஆம் ..
இவர் தொடாத ராகமில்லை .. ..
இவர் பாடாத புலவர்களில்லை ..

- கும்மிப்பாட்டு
- குறவைப் பாட்டு
- ஞானப் பாட்டு- சாஸ்திரிய
கானங்கள் பாடியது பலநூறு
இவரை இவ்வூர் பெற்றது
நாம் செய்த பெரும்பேறு

தாளம் அறிந்த இவரை
ஞாலம் கண்டு கொள்ளாதது
காலத்தின் கோலம்

"சேதுசாரா" என்ற
ஆதிதாள உருப்படி - இவரை
உயரே கொண்டு சென்றது ஒருபடி

கிட்டப்பா பயின்ற
தாவுது மியான்
இந்த காதருக்கு
குருநாதர்

சென்னை சபாக்களில்
டிசம்பர் மாதமென்றாலே
சங்கீதம் களைகட்டும்
ஏன் தெரியுமா?
எங்கள் பாகவதர்
பிறந்த மாதம் அது.

சமய நல்லிணக்கத்திற்கு
இமயம்
இச்சங்கீதச் சிகரம்.
சமாதானத் தூதர்
இந்த காதர்

இவரை அழைப்பது
பவுனு வீட்டுத் தம்பி.
பவுனு பவுனுதான் !!

ஏழிசை கற்ற இவரை
வாழிய வாழியவென
வாயார வாழ்த்துகிறேன் !

- அன்புடன் அப்துல் கையூம்





ஆரம்பகால கட்டங்களில் ஏ.ஆர்.ரஹ்மான் நாகூர் வருகை தந்தபோது எடுதத படம்
ஆஸ்கார் நாயகனும் ஆஸ்தான பாடகனும்


இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஒருமுறை நாகூர் தர்கா ஆஸ்தான வித்வான் எஸ்.எம்.ஏ. காதிர் அவர்களது சங்கீத மேன்மையைக் கேள்விப்பட்டு அவரைக் காண அவரது இல்லம் தேடி வந்திருக்கிறார்.

உலகமே போற்றி வியக்கும் ஆஸ்கார் நாயகனை நடுக்கட்டில் அமர வைத்துவிட்டு தந்தையை அழைப்பதற்காக உள்ளே சென்றிருக்கிறார் அவர் புதல்வன்.

“ஏ.ஆர்.ரஹ்மான் உங்களைப் பார்ப்பதற்காக வந்திருக்காஹா வாப்பா” என்று மகன் சொல்ல கசங்கிப்போன கைலியும், கிழிந்துப்போன முண்டா பனியனும் அணிந்திருந்த சங்கீத மேதை, அவரை சந்திப்பதற்காக அப்படியே கிளம்பியிருக்கிறார்.

“வாப்பா!~ பனியன் கிழிஞ்சிருக்கு வேற உடுப்பு போட்டுக்கிட்டு போங்க” என்று மகன் அன்புக்கட்டளை போட வித்வானுக்கு வந்ததே கோவம்.

“ஓய் அவரு என்னை பார்க்க வந்திருக்காரா? இல்லே என் சட்டையை பார்க்க வந்திருக்காரா?” என்று எரிந்து விழ, மீறி வற்புறுத்தினால் எங்கே முரண்டு பிடித்து ஏ.ஆர்.ரஹ்மானை பார்க்க மறுத்து விடுவாரோ என்று மகன் அமைதியாகி விட்டார்.

கவிஞர் ஜபருல்லாஹ்வின் பாஷையில் சொல்லப்போனால்
“அட.. இப்படியும் ஒரு மனிதரா..?



நாகூரின் பொக்கிஷம்


- நாகூர் ரூமி

நாகூரின் வரலாற்றில் இது ஒரு முக்கியமான நாள். மதிக்க வேண்டியவர்களையும், மதிக்க வேண்டியவைகளையும் மதிக்காமல் போவதும், மதிக்கக் கூடாதவற்றையெல்லாம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடுவதும்தான் நாம் படும் கஷ்டங்களுக்கெல்லாம் காரணம். அதை மாற்றி, நாகூர்த் தமிழ்ச்சங்கம் இன்று ஒரு வரலாற்று முக்கியத்துவம் கொண்ட ஒரு காரியத்தைச் செய்திருக்கிறது. அதற்காக முதலில் என் பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறேன். நேரில் வந்து என் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள முடியாத என் சூழ்நிலைக்கு மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்.

நாகூருக்கென்று பல சிறப்புக்களுண்டு. அவற்றில் மிகமிக முக்கியமானவை ஆன்மிகம், இலக்கியம், இசை என்ற இம்மூன்றும். மூன்றுமே ஒன்றோடொன்று தொடர்பு கொண்டவைதான். அந்தக் காலத்தில் எழுதப்பட்ட இலக்கியங்கள் பெரும்பாலும் ஆன்மிக இலக்கியங்களாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது. குலாம் காதிர் நாவலர் அவர்களின் ‘கன்ஜுல் கராமாத்' தொடங்கி, என்னுடைய ‘நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர்' என்ற நூல்வரையிலும் அந்த ஆன்மிக இலக்கிய பாரம்பரியம் நீள்கிறது. இன்னும் நீளும்.

இசையைப் பொறுத்தமட்டில் நிறைய ஆளுமைகளை நாம் பார்க்க முடியவில்லை. இசையில் மிகப்பெரிய ஆளுமையாக முதலில் இருந்தது பெரிய எஜமான்தான். இதுகூட எனக்கு எனது இசை குருநாதர், என் நண்பர் நூர் சாதிக்கின் வாப்பா அவர்கள் சொல்லித் தெரிய வந்ததுதான். எஸ்.எம்.ஏ.காதர் என்று சட்டென்று பெயரைக் குறிப்பிட என் மனம் தயங்குகிறது. எனவே தேவைப்படும் இடங்களில் ‘எஸ்.எம்.ஏ.கே.' என்று குறிப்பிட அனுமதி கோருகிறேன். அவர்களோடு எனக்கு ஏற்பட்ட இரண்டு ஆண்டுகால நெருக்கமான அனுபவம் என் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த ஒரு அருள் என்றுதான் நான் சொல்லுவேன்.

இசை என்பது இஸ்லாத்துக்கு விரோதமானது என்று சொல்பவர்கள் அல்லது நினைப்பவர்கள் கற்பூர வாசனை அறியாதவர்கள். இறைவனோடு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கு சில சிறந்த வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று இசை என்பது என்னுடைய அனுபவம். ‘எஸ்.எம்.ஏ.கே.' அவர்கள் ஒரு இசை மேதை என்பதை நான் புரிந்து கொண்ட, ஒவ்வொரு நாளும் அனுபவித்த காலகட்டம் அது.

நான் எம்.ஏ. படித்து முடித்து வேலையில்லாமல் இருந்த காலகட்டம் அது. ஒருநாள் நானும் நண்பர் பிலாலும் கடற்கரையில் அமர்ந்து இசை பற்றியும் பாடல் பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். அவர்தான் ‘எஸ்.எம்.ஏ.கே.' அவர்களிடம் சங்கீகதம் கற்றுக்கொண்டால் என்ன என்ற ஒரு கருத்தை எனக்குள் ஏற்படுத்தினார். உடனே தாமதம் செய்யாமல் நேரே புதுமனைத் தெருவில் இருக்கும் ‘எஸ்.எம்.ஏ.கே.' அவர்களின் வீட்டுக்கு நாங்கள் சென்றோம்.
அடடே, நீங்க ஷரீஃப் பே மாமாட பேரனாச்சே என்று சிரித்துக் கொண்டே சொன்னாலும், சங்கீதம் ரொம்ப கஷ்டமாச்சே என்றும் சொன்னார்கள். என்றாலும் ஒரு பாட்டுப் பாடுங்கள் என்று என்னிடம் சொன்னார்கள். நான் திருவிளையாடல் திரைப்படத்தில் வரும், ‘ஒரு நாள் போதுமா' பாடலைப் பாடிக் காட்டினேன். சொல்லிக் கொடுத்தால் எனக்கு சங்கீதம் வரும் என்று அவர்களுக்குத் தோன்றியிருக்க வேண்டும். உடனே நல்ல நாள், நேரம் பார்த்து என்னை வரச் சொன்னார்கள்.

அன்று தொடங்கியது என் இசை வாழ்வு. கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் மூன்று மணி நேரம் பயிற்சி. ஒவ்வொரு நாளும் ஒரு அல்லது இரண்டு கச்சேரிகள் செய்வது போன்ற களைப்பு அவர்களுக்கு ஏற்படும். தம்பூரா மீட்டப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். ஸ்வரங்கள் சொல்ல வேண்டும். தப்பாமல் தாளம் போட வேண்டும். இப்படி நிறைய நுணுக்கமான விஷயங்கள் அதில் உண்டு.

ஏழெட்டு ஆண்டுகள் பயின்றால் எவ்வளவு கற்றுக்கொள்ள முடியுமோ அவ்வளவு பாடத்தை எனக்கு ஆறே மாதங்களில் அவர்கள் சொல்லிக் கொடுத்தார்கள். அவர்களுக்கு அதில் சந்தோஷம் இருந்தது. எனக்கு ஆர்வம் இருந்தது. அவ்வப்போது சோட்டு மியான், நன்னு மியான், தாவுத் மியான் கான் ஆகியோரின் வரலாறுகளையும் எனக்கு சொல்லிக் காட்டுவார்கள்.

எனக்கு பிரமிப்பாக இருக்கும். அதற்கு பல காரணங்கள். இந்தியாவைப் பொறுத்தவரை இசை என்று சொன்னால் வடக்கில் முஸ்லிம்களின் ஆதிக்கமும், தெற்கில் பிராமண வித்வான்களின் ஆதிக்கமும்தான். ஷெனாய் என்றால் பிஸ்மில்லாஹ் கான், சரோத் என்று சொன்னால் அலி அக்பர் கான், தப்லா என்று சொன்னால் அல்லாஹ் ரக்கா அல்லது ஜாகிர் ஹுசைன் - இப்படித்தான் வடக்கில் பெயர்கள் இருக்கும். ஹிந்துஸ்தானி இசையில் வடக்கில் முஸ்லிம்களின் கொடிதான் பறந்து கொண்டிருந்தது. இன்னும் இருக்கிறது. தெற்கே கர்நாட இசை என்று சொன்னால் அது பெரும்பாலும் பிராமண வித்வான்களின் கையிலும் வாயிலும்தான் இருந்தது. மற்ற ஜாதிக்காரர்கள் இருந்தாலும் எண்ணிக்கையில் ரொம்பக் குறைவு. இதை நான் விமர்சனமாகச் சொல்லவில்லை. நடப்பு நிஜமாகச் சொல்கிறேன். மணி அய்யரிலிருந்து உன்னி கிருஷ்ணன் வரை இதுதான் உண்மை. சினிமா இசையில்கூட இளையாராஜாவுக்கு முன் அதுதான் உண்மையாக இருந்தது. இந்த சூழ்நிலையில் ஒரு முஸ்லிம், அவர்களுக்கு இணையாக, சமயங்களில் அவர்களைவிட சிறப்பாக இசைத்துறையில் மின்ன முடியும் என்பது ஒரு அற்புதம்தான்.

அந்த அற்புதத்துக்கு சொந்தக்காரர் என்னுடைய குரு ‘எஸ்.எம்.ஏ.கே.' அவர்கள் என்று சொன்னால் அது மிகையே அல்ல. இதை நான் பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன். எனக்குத் தெரியும். அவர்களுடைய குருநாதர் தாவூத் மியான் அவர்கள் கர்நாடக இசையிலும், ஹிந்துஸ்தானியிலும் வல்லுணர். எனவே ‘எஸ்.எம்.ஏ.கே.' அவர்களும் இரண்டிலுமே பாண்டித்தியம் பெற்றிருந்தார்கள். மிக விரிவாக என்னால் பேச முடியும் என்றாலும் கேட்பவர்களுக்கு இசை ஞானம் இல்லாதிருப்பின் புரியாமல் போகக்கூடும் என்ற அச்சத்தால் ஒரு சில உதாரணங்களை மட்டும் நான் இங்கே சொல்ல விரும்புகிறேன்.

‘எஸ்.எம்.ஏ.கே.' அவர்களின் கச்சேரி எங்கே நடந்தாலும் நானும், நண்பர்கள் பிலாலும் ஆபிதீனும் போய் முடியும்வரைக் கேட்போம். ‘எஸ்.எம்.ஏ.கே.' அவர்களுடைய ஸ்வர ஞானமும் தாளம் பிசகாத பாடலும் எங்களுக்கு மட்டுமல்ல, இசை அறிந்தவர்களுக்கும் பிரமிப்பு ஊட்டக்கூடியவை.

உதாரணமாக, ஸ்வரம் பாடுவதில் முதல் காலம், இரண்டாம் காலம், மூன்றாம் காலம் என்று ஒரு கணக்கு உண்டு. ஒரு பாடலுக்கு ஸ, க, ரி, க என்று நான்கு ஸ்வரங்களை ஒரு தாளத்தில் முதல் காலத்தில் பாடினால், அடுத்த காலத்தில், அதே தாளத்தில், அதாவது அதே நேரத்துக்குள், எட்டு ஸ்வரங்களைப் பாடவேண்டும். மூன்றாம் காலத்தில் அது பன்னிரண்டாக இருக்க வேண்டும். இது ஒரு பாரம்பரிய சங்கீத கணக்கு. இந்த கணக்கின்படி இன்றைக்கு மூன்று காலத்திலும் பாடும் ஒரு வித்வான்கூடக் கிடையாது. ஒரே ஒருவர்தான் உண்டு. அது எனது மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய ‘எஸ்.எம்.ஏ.கே.' அவர்கள் மட்டும்தான் என்று நான் அடித்துக் கூறுவேன்.

பால முரளி கிருஷ்ணா, பீம்ஷன் ஜோஷி, ஜேசுதாஸ், ஸ்ரீனிவாஸ், எம். எஸ்., சுதா ரகுநாதன் என்று பலருடைய பாடல்களை நான் தொடர்ந்து கேட்டுள்ளேன். மிகத்துரிதமாகப் பாடும் மூன்றாம் காலத்தில் யாருமே பாடுவதில்லை. காரணம் அது அவ்வளவு கடினமான சாதகம் என்பதுதான். இந்தக் காலத்து வித்வான்கள் எல்லாருமே ஃபாஸ்ட் ஃபுட் மாதிரியான வித்வான்கள்தான். நான் மேலே சொன்ன யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனாலும் ‘எஸ்.எம்.ஏ.கே.' அவர்கள் ஒவ்வொரு கச்சேரியிலும் கொடுக்கும் அந்த துரித கால இசையனுபவத்தை அவர்கள் கொடுக்கவில்லை என்பதே உண்மை.

நான் இதுவரை சொன்னதற்கு நேர் மாறான ஒரு திறமையும் ‘எஸ்.எம்.ஏ.கே.' அவர்களிடம் நான் கண்டேன். அதுதான் தாளக்கட்டு பின்னோக்கிப் போய்க் கொண்டே இருப்பது. வரையறை செய்யப்பட்ட தாள கதியில் ஒவ்வொரு காலத்துக்கும் தாளம் பின்னால் போய்க்கொண்டே இருப்பதைப் போன்றது இது. இதை வார்த்தைகளில் என்னால் விளக்க முடியவில்லை. ஆனால் பல முறை ‘எஸ்.எம்.ஏ.கே.' அவர்கள் இப்படிப் பாடும்போது வயலின் வித்வான்கள், மிருதங்க வித்வான்கள் தங்களால் வாசிக்க முடியவில்லை என்று கைகூப்பி வணங்கி மன்னிப்புக் கேட்டுவிட்டு வாத்தியங்களைக் கீழே வைத்ததை நான் பார்த்திருக்கிறேன்.

‘எஸ்.எம்.ஏ.கே.' அவர்கள் நாகூருக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம். ஆனால் அவர்கள் முஸ்லிமாக இருந்துவிட்ட காரணத்தினால் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய அளவுக்கு மரியாதையும் அங்கீகாரமும் கிடக்காமல் போய்விட்டது துரதிருஷ்டமே. இஸ்லாத்தில் இசை கூடாது, கோயில்களில் பாடக்கூடாது என்றெல்லாம் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் சாதனையின் உச்சத்துக்குப் போகமுடியாமல் அவர்களைத் தடுத்துவிட்டன என்பதுதான் உண்மை. இல்லையெனில், ஒரு ஏ.ஆர்.ரஹ்மானை இந்த உலகம் அறிந்திருப்பது மாதிரி சங்கீத உலகம் ‘எஸ்.எம்.ஏ.கே.' அவர்களையும் கொண்டாடி இருக்கும்.

எனக்கு வேலை கிடைத்துவிட்ட காரணத்தினால் சங்கீதப் பாடங்களைத் தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டபோது, ஒரு நாள் நானும், ‘எஸ்.எம்.ஏ.கே.' அவர்களும், அவர்களுடைய பேரர் ராஜாவும் உட்கார்ந்திருந்தோம். அப்போது நான் வர்ணம் என்ற பாடம் வரை வந்திருந்தேன். அடுத்தது ராகம்தான். அவர்கள் இல்லாமலே நான் எப்படி மேலும் கற்றுக்கொண்டு அப்பாடங்களைத் தொடர்ந்து வித்வானாவது என்று அன்று ராகங்களுடைய அடிப்படைகளையெல்லாம் ஆரோகரணம், அவரோகணத்தோடு அவர்கள் பாடிக்காட்டினார்கள். என் நண்பர் பிலால் சிறப்பான முறையில் அதைப் பதிவு செய்தார். அந்த ஒலிநாடா என்னிடம் இன்னும் உள்ளது. அதைப் போன்ற ஒரு காரியத்தை வேறு யாரும் செய்ய முடியாது. நான் இதை ஒரு சவாலாகவே இங்கே சொல்லுவேன்.

அவர்கள் என்மீது வைத்திருந்த நம்பிக்கைக்கும் உழைப்புக்கும் ஏற்ற மரியாதையை செய்யவில்லையோ என்ற குற்ற உணர்ச்சி என்னிடம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது.

மால்கோஸ் ராகம் பாடச் சொல்லி தாவூத் மியானின் கால் வியாதியைக் குணப்படுத்திய பெரிய எஜமான் வாழும் இந்த ஊரில் எஸ்.எம்.ஏ.கே. அவர்கள் வாழும் காலத்திலேயே அவர்களைக் கௌரவப்படுத்தும் இந்த முயற்சியானது சரியானதும், பாராட்டத்தக்கதும், நமது கடமையும் ஆகும்.

SMA காதர் என்று அவர்கள் அறியப்படுவது மிகவும் பொருத்தமானது என்று நினைக்கிறேன். SMA என்பதை ‘சங்கீத மேதை ஆன' என்பதன் சுருக்கமாக வைத்துக் கொள்ளலாம். SMA காதர் என்றால் ‘சங்கீத மேதையான' காதர் என்று பொருள். ஆங்கிலத்திலேயே சொல்ல வேண்டுமெனில், Sacred-music Master Artist காதர் என்று சொல்லலாம். ஏனெனில் இஸ்லாமிய வரலாற்றையும், இஸ்லாத்தின் புகழையும் பரப்ப கர்நாடக சங்கீதத்தைப் பயன்படுத்திய மேதை ‘எஸ்.எம்.ஏ.கே.' அவர்கள் ஒருவர்தான்.

அவர்களுடைய எல்லா எல்.பி. ரெகார்டுகளும், கேஸட்டுகளும் சேகரிக்கப்பட்டு வலைத்தளத்தில் ஏற்றப்பட்டு இந்த உலகமே கேட்டுமாறு வழிவகை செய்ய வேண்டும். அதற்கான முயற்சிகளை கையூம், ஆபிதீன் போன்ற இணையம் அறிந்த நண்பர்கள் செய்யலாம். நானும் அதில் நிச்சயம் உதவுவேன். தமிழ்ச்சங்கம் அதற்காக பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று இந்த நேரத்தில் நான் ஒரு வேண்டுகோளையும் வைக்கிறேன்.

நேரில் வரமுடியாவிட்டாலும், ‘எஸ்.எம்.ஏ.கே.' அவர்களின் காலைத் தொட்டு மரியாதை செய்து அவர்களின் ஆசி பெற்றவனாக இதை முடித்துக் கொள்கிறேன். அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ வேண்டும் என்று உங்களைப் போலவே நானும் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

நாகூர் ரூமி
டாக்டர் ஏ.எஸ்.முஹம்மது ரஃபி
ஆங்கிலத் துறைத்தலைவர்
மஜ்ஹருல் உலூம் கல்லூரி
ஆம்பூர்.

தொடர்புடைய சுட்டி : இசையும் இறைவனும்

அவரோகணம்

இஸ்லாத்தில் கவிதை



அட.. இப்படியும் ஒரு மனிதரா..?
- கவிஞர் இஜட். ஜபருல்லாஹ்
வாழ்க்கையை எல்லோருக்கும்
பகிர்ந்து கொடுத்துவிட்டு
இசையை மட்டுமே –
சொத்தாய் வைத்துக் கொண்ட
இவர் – மனிதனுக்கும் மேலே..!
இதனால்தான் என்னவோ?
இரும்புப் பெட்டியை தூரப் போட்டுவிட்டு
கிராமபோஃன் பெட்டியை
பக்கத்தில் வைத்துக்கொண்டு இருக்கிறாரோ?

இவர் வீட்டில்
வெள்ளித் தட்டுகள்
உணவு மேசையில்
சாதாரணமாய் கிடக்கும்..!
இசைத்தட்டுகள் மட்டும்
பூட்டிய அல்மாரிக்குள்
பத்திரமாக இருக்கும்..!

அட இப்படியும் ஒரு மனிதரா..?
“மனைவிக்கு மரியாதை”
இவரிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்..
“வாங்க.. போங்க.. என்னங்க..
சொல்லுங்க..” – “அவங்க சொன்னாங்க”
இவைகள் எல்லாம் – இவரின்
இல்லற அகராதியில் –
மனைவியுடன் பேசும்
அன்பில் தோய்ந்த சொற்கள்..!

இவர் –
நல்ல குடும்பத் தலைவர்
நல்ல கணவர் ..
நல்ல தந்தை .. மட்டும் அல்ல..
நல்ல நடத்தைகளை
சொல்லிக் கொடுத்த ஆசான்..!

இவர் தங்கம்..
அதனால்தான் இவர் பிள்ளைகள்
வைரமாக ஜொலிக்கிறார்கள்..!

அட.. இப்படியும் ஒரு மனிதரா..?
இவர் - சட்டக் கல்லூரிக்குப் போகாத
நீதிபதி..!
இவரின் “நடுக்கட்டு சபை”
நாகூரில் பிரபலம்.
இது – கோர்ட்டு அல்ல ..
சான்றோர் சபை..!
இதில் – சட்டம் பேசாது..!
நீதி – சொல்லும்..!
தர்மம் – தீர்ப்பு வழங்கும்..!
“மேல் முறையீடு”
இன்றுவரை இல்லை..!

சம்பந்திகள் சச்சரவு
சொத்துப் பிரச்சனைகள்
முகத்தில் இனி முழிக்கவே மாட்டேன்
என வருபவர்கள் – நெஞ்சோடு நெஞ்சு
அணைத்துக் கொண்டு –
சிரிப்போடும் - சிறப்போடும் போகும் காட்சி
மந்திரம் அல்ல..
இந்த மனிதரின் சாதனை..!

“உங்களாலேத்தான்
எல்லாம் நல்லபடியா முடிஞ்சுச்சு..!
ரொம்ப நன்றிங்க..” என்று சொன்னால் –
நம்மகிட்ட என்னா இருக்குது..
பேசவைத்தவனும் அவன்தான்..!
எல்லாம் அவன் கையிலே..!
செய்ய வைத்தவனும் அவன்தான்..!
நம்ப கையிலே ரேகைதான் இருக்குது..!
- என்றுச்சொல்லி கலகலவென சிரிப்பார்..!

இந்த சபையில் ஜூரிகளும் உண்டு…
B.A., காக்கா என்ற ஜலீல் காக்கா
இமாம் கஜ்ஜாலி காக்கா
M.G.K. மாலிமார் காக்கா
நாகை தமீம் மாமா ..

இந்த சரித்திர சபையில்
ஒருமுறை நான்
சாட்சியாய்ப் போனேன்
என் மதிப்பு கூடியது..!

நிதிபதிகள் –
அபராதம் போடுவார்கள்…
இவரோ – சிற்றுண்டி தருவார்
வடையும்/ தேநீரும்..!

இவர் சபையில் –
மனிதர்கள் வருவார்கள்…
மதங்கள் வந்ததில்லை..!

அட… இப்படியும் ஒரு மனிதரா..?
கற்பனையால் கயிறு திரித்து
மற்றவர்கள் எழுதிவைத்த
சரித்திரத்தால் –
வரலாற்று நாயகர்களாய்
வலம் வருவோர் நிறைய உண்டு..!

இவர் வாழ்க்கை வரலாற்றை
நேரில் சென்று கேட்டோம்..
இரண்டு மணி நேரம் சொன்னவர்
அவர் வரலாற்றை அல்ல..
அவர் குருவின் சரித்திரத்தை..!

அவர் உஸ்தாத் தாவூது மியான்
பிறந்த தேதி/ இறந்த நாள்
இவர் நினைவில் நிற்கிறது..!
இவர் – நாகூர் தர்கா ஆஸ்தான வித்வானாக
நியமனம் பெற்ற நாள் அல்ல..!
வருடமே நினைவில்லை..!
அட.. இப்படியும் ஒரு மனிதரா..?

“உமர் இஸ்லாத்தை தழுவிய சரிதை”
இவரின் – உன்னதமான பாடல்..!
இந்த பாட்டை பத்தாம் வயதில் கேட்டேன்..!
இன்றுவரை –
கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்..!
பாட்டு காதில் விழுகிறது..!
காட்சி கண்ணில் விரிகிறது..!

இவர் சுருதி –
இன்றுவரை மாறியதில்லை
இசையில் மட்டுமல்ல..!
வாழ்க்கையிலும்..!
ஏற்றம்/ இறக்கம் என்பதை
இசையில் ஆரோகணம்/ அவரோகணம்
என்பார்கள் – இசையில்
இவர் ஆரோகணம்/ அவரோகணம் அதிசுத்தம்..!
வாழ்க்கையில்.. ஆரோகணம் மட்டுமே..!

இவர் தாளம் –
எப்போதும் தப்பாது…
பாட்டில் மட்டுமல்ல..
வீட்டிலும்..!

86 வயது ஆயினும்
இதுவரை – அவரின் கைத்தடி
தம்பூராதான்..!

பாட்டால் நமக்கு அவர்
சொக்குப்பொடி போடுவார்..!
அவரோ – பட்டணம் பொடி போடுவார்..!

பாடிக்கொண்டு இருக்கும்போதே
அவர் வெள்ளை கைக்குட்டை
சமாதான கொடியைப் போல
மூக்கு வரை ஏறும்
உடன் இறங்கும்..!
பொடி போட்டது மூக்குக்கு மட்டுமே புரியும்..!
தும்மல் வராமல் பொடி போடும் மந்திரம்
இவருக்கு மட்டுமே/ தெரியும்..!

புனித மாதங்களின் முதல் பிறையில்
எல்லோரும் ஒதுவார்..!
இவர் பாடுவார்..!
இறைவனைத் துதித்து..!
அவன் –
தூதரை நினைத்து..!

மனிதர்கள் போல –
வாழ்ந்துக் கொண்டிருக்கும்
இந்த நாட்களில்
நாகூர் தமிழ்ச் சங்கம்
ஒரு உண்மையான மனிதரை கண்டுபிடித்து
“வாழ்நாள் சாதனையாளர் விருது”
கொடுக்கிறது..
விருது அவர்களுக்கு என்றாலும்
எங்களுக்கு அல்லவா
புகழ் வருகிறது..!

மாறி மாறி வேஷங்கள்
போடுகின்ற மனிதரிடை
தேறிவந்த மனிதர் இவர்
தெளிவான மனதுடையார்..!
கூறுகின்ற இவர் சொற்கள்
ஆறுதலை பிறக்க வைக்கும்..!
சேருகின்ற இடமெல்லாம்
வரவேற்பு சிறந்திருக்கும்..!

இசையாத பேர்களையும்
இசையவைக்கும் அன்பாளர்..!
இசையாலே மனம் தொட்டு
இன்பம் தரும் இசை ஆளர்..!
இறைநெறியில் நபிவழியில்
இணைந்திருக்கும் பண்பாளர்..!
இம்மைக்கும் மறுமைக்கும்
நலம் சேர்க்கும் நல்லடியார்..!

எப்போதும் சிரித்திருக்கும்
குழந்தை உள்ளம்..!
இவர் இசையை கேட்போரின்
இதயம் துள்ளும்..!
ஒப்பில்லா இவர்வாழ்க்கை
அன்பின் வெள்ளம்..!
உள்ளபடி இவர் நிறைவை
நாளை சொல்லும்..!

வல்லவனே..! யா அல்லாஹ்
யாசிக்கின்றேன்..! இவர்
வாழ்நாளை நலத்தோடு நீடிக்கச் செய்..!

- இஜட் ஜபருல்லாஹ்

Nagore Sessions - Sufi Songs

Ya Allah - Sufi Songs

Read more...

வாழ்நாள் சாதனையாளர் விருது

கடந்த 19.08.2009 புதன்கிழமை இரவு 8.30 மணிக்கு, நாகூர் தர்கா உட்புற வளாகத்தில், சங்கீத மகா வித்வான் உயர்திரு S.M.A. காதிர் அவர்கட்கு "வாழ்நாள் சாதனையாளர் விருதினை" நாகூர் தமிழ்ச் சங்கம் அளித்து கெளரவித்தது.

பாடகர் கலைமாமணி நாகூர் E. குல்முகம்மது இறைவணக்கப் பாடலை பாட கூட்டம் துவங்கியது.

தமிழ்ச் சங்கத்தின் நெறியாளர் புலவர் சீனி சண்முகம் அவர்கள் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் விழா துவக்கவுரை ஆற்ற, சங்க நிர்வாகி டாக்டர் C,சோமசேகரன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

காரைக்கால் வானொலி நிலைய இயக்குனர் K.துரைசாமி, வழக்கறிஞரும், முன்னாள் சட்டசபை உறுப்பினரும், சங்கத்தின் நெறியாளருமான M.G.K.நிஜாமுத்தீன், தமிழ்நாடு அரசு சிறுபான்மை ஆணைய உறுப்பினரும், சங்கத்தின் நெறியாளருமான கவிஞர் இஸட் ஜபருல்லாஹ், பஹ்ரைன் பாரதி தமிழ்ச் சங்கத்தின் இலக்கியச் செயலரும். சங்கத்து புரவலருமான கவிஞர் அப்துல் கையூம், கவிஞர் திட்டை அன்வர்தீன், சங்கத்து நெறியாளர் கலைமாமணி கவிஞர் நாகூர் சலீம், உமா நிறுவனங்களின் அதிபர் P.N.குப்புசாமி ஆகியோர் மகா வித்வானுக்கு பாமாலை/ புகழ்மாலை சூட்டினர்.

மகா வித்வானுக்கு கவிமாலை சமர்ப்பித்தவர் கவிஞர் மு. காதர் ஒலி. தன் குருநாதருடன் தனக்கு ஏற்பட்ட சுவையான அனுபவங்களை அவரது முதன்மை சீடர் இசைமணி M.M.யூசுப் பகிர்ந்துக் கொண்டார். கவிஞர் இதய தாசன் எழுதி, இசைமணி மெட்டமைத்து குருநாதரைப் புகழ்ந்துப் பாடிய பாடல் அனைவரையும் கவரும் வண்ணம் இருந்தது.

நாகூர் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் M.G.K.முஹம்மது ஹூசைன் மாலிம் செயலாற்றிய இந்த நல்ல முயற்சியினை அனைவரும் வியந்து போற்றினர். சங்கீத வித்வானுக்கு அவர் பொன்னாடை போர்த்தி சிறப்பிக்க, அதனைத் தொடர்ந்து நூற்றுக்கு மேலான அவரது அபிமானிகள், சீடர்கள், ரசிகர்கள் பொன்னாடை போர்த்தி கெளரவித்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

பெரிய திரையில் மலரும் நினைவுகளாக வித்வான் 18 ஆண்டுகட்கு முன் நாகூரார் தர்பாரில் நிகழ்த்திய நிகழ்ச்சியினை அழகுற வடிவமைத்துத் தந்தவர் நாகூர் தர்கா வித்வானின் புதல்வர் S.M.A.K. நூர் சாதிக்.

எல்லாவற்றிற்கும் மேலாக இறுதிவரை இருந்து சிறப்பான சொற்பொழிவாற்றி விருது வழங்கி கெளரவித்தவர் நாகை மாவட்ட ஆட்சியர் திருமிகு ச.முனியநாதன் இ.ஆ.ப. அவர்கள்.

நன்றியுரையை கவிப்புயல் நாகூர் இதயதாசன் வழங்க கூட்டம் இனிதே முடிவுற்றது.

இவரது பாடல்களைக் கேட்க

மறைந்த பிரபல தென்னிந்திய பாடகர் காயல் ஷேக் முகம்மது நாகூர் தர்கா விதவான் எஸ்.எம்.ஏ.காதிர் அவர்களின் மானசீக சீடர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது

Read more...

காரை தாரகை

கவிஞர்கள் உருவாக்கப் படுவதில்லை. கருவிலேயே உருவாகிறார்கள் என்பதற்கு காரை கஃபூர் தாசன் ஒரு நற்சான்று. பற்பல ஆண்டுகட்குப் பின் அவரை சந்தித்து உரையாடுவதற்கான ஒரு நல்வாய்ப்பு சென்ற வாரம் ஏற்பட்டது.

இயல்பாகவே இவருக்குள் கவித்துவம் குடிகொண்டிருப்பதை அடையாளம் காண முடிந்தது. அவரை இளமையில் பார்த்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் ஏகப்பட்ட வித்தியாசம்.

எழுதுகோல் மன்னருக்கு, நடப்பதற்கு ஊன்றுகோல் தேவைப்பட்டதைக் கண்டபோது, என் இதயத்துக்குள் யாரோ கன்னக்கோல் இட்டது போன்ற ஓர் உணர்வு.

இவர் இயற்பெயர் செ.மு.வாப்பு மரைக்காயர். பாரதிக்கு ஒரு தாசன் பாரதிதாசன் போல, அந்த பாரதிதாசனுக்கு ஒரு தாசன் சுப்பு ரத்தின தாசன் போல (சுரதா), என் ஆசான் இறையருட் கவிமணி கா.அப்துல் கபூருக்கு மானசீக சீடராய் வாய்த்தவர் இந்த சீலர். அவர்களின் எழுத்தாற்றலின்பால் காதற்கொண்டு தன்பெயரையே கஃபூர்தாசன் என்று மாற்றிக் கொண்ட காதலர்.

நானெழுதிய “போன்சாய்” கவிதை நூலை படித்துவிட்டு பாராட்டிய அவர் தானெழுதிய சில குறுங்கவிதைகளை – நினைவிலிருந்த சில வரிகளை - மனமுவந்து மொழிந்தபோது மெய்மறந்து போய்விட்டேன்.

“வெடிப்பன எரிமலைகள்
அணைக்க நீலிக் கண்ணீர்
வடிப்பன முதலைகள் !”

“பசுங்கொடிகள் படர்கின்றன
தோட்டம் காத்த வேலிக்குப்
பொன்னாடை !”

“பனிச்சறுக்கு விளையாட்டு’ என்றது ஊர்
வழிக்கி விழுந்தவள்
பணக்காரப் பெண் !”

“சுடர்முடி சுமப்பதென்றால் சும்மாவா?
திரிகளே .. .. !
தலை கருகுமே தயாரா ?”

இவையாவுமே கவிஞர் கைவண்ணம். என்னை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியவை.

“வெட்டு வெட்டு வெட்டு, நகத்தை வெட்டு வெட்டு, அழுக்கு சேருகிறது !” என்று எழுதுபவர்களையெல்லாம் ‘கவிஞர்’ என்று ஏற்றுக் கொள்ளும் இவ்வுலகம் இவரைப்போன்ற அறிவாற்றல் மிக்கவரை கண்டு கொள்ளாமல் இருப்பதை நினைத்தபோது கண்கள் கசிந்தது.

‘குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிய கதையாக’ இவரின் கவித்திறமை வெளியுலகத்திற்கு தெரியாமல் போய்விட்டதே என்று மனது காயப்பட்டது.

கவிஞரின் கவித்துவ ஆற்றலை அறிந்துக் கொண்ட கவிஞர் சுரதா ஒருமுறை கஃபூர் தாசனை கவியரசு கண்ணதாசனிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். பெயர் காரணத்தை அறிந்துக் கொண்ட கவியரசர் “அட ! நம்ம அப்துல் கபூருடைய சிஷ்யனா?” என்று உரிமையோடு அரவணைத்து உபசரித்திருக்கிறார்.

பேச்சுப் போக்கில் கவியரசரைப் பற்றி தான் ஒரு கவிதை எழுதி வைத்திருப்பதாக நம் கவிஞர் கூற, கவிதை வரிகளைக் கேட்டு கவியரசர் வியந்துப் போயிருக்கிறார். ஒரு நோட்டு புத்தகத்தில் அவ்வரிகளை அவர்கைப்பட எழுதுமாறு உத்தரவிட்டு, கவிஞரின் கையொப்பத்தையும் வாங்கி வைத்துக் கொண்டிருக்கிறார்.

இதுவரை எத்தனையோ பிரபலமான கவிஞர்கள், எத்தனையோ தருணத்தில், எத்தனையோ மேடைகளில் வானாளவ புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள். அவைகளிள் ஏறாத போதை இவர் வரிகளைக் கேட்டதும் ஏற்பட்டிருக்கிறது.

இந்த பிரபலமாகாத சாதாரணக் (?) கவிஞனிடத்திலிருந்து பிறந்த முத்தான வரிகளை ஏன் கவியரசர் ஏன் விரும்பிக் கேட்டு பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்? இந்த சிலேடை வரிகளை படித்தாலே அந்த காரணம் நமக்கு புரிந்துப் போகும்.

“கண்ணாதாசனுக்கு” என்று தலைப்பிட்டு கஃபூர்தாசன் எழுதி வைத்த வரிகள் இவை :

“தாளில் எழுதுகிறோம்
தங்குவதே இல்லை
தண்ணீரில் எழுதுகிறாய்
நிலைத்து விடுகிறதே !

ஆனால்,
காடியில் கரையும்
முத்தையா நீ !”

ஆகா ! என்ன அற்புதமான காவிய வரிகள்..?

தமிழகமே போற்றிப் புகழும் ஒரு மகாகவிஞனிடம் போய் “நீ தண்ணி அடித்து விட்டு எழுதுகிறாய்” என்று சொல்வதற்கு எவ்வளவு துணிச்சல் வேண்டும்?

தன் குறைபாடுகளை அறிமுகமேயில்லாத ஒருவன் சுட்டிக் காட்ட அதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளும் ஒரு மனப்பக்குவம் கவியரசர் கண்ணதாசன் ஒருவருக்குத்தான் இருக்க முடியும்.

இறுதி வரிகளில் காணப்படும் “காடி” என்ற வார்த்தைக்கு Vinegar என்று பொருள். ‘காடியில் கரையும் முத்து’ என்பது இங்கு ஒரு அருமையான குறியீடு. “முத்தையா !” என்று சிலேடையாக வருணிக்கப்பட்டிருக்கும் இவ்வார்த்தை கவியரசு கண்ணதாசனின் இயற்பெயர் என்பதை இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

“அரிய ஆணிமுத்தாக ஜொலிக்க வேண்டிய நீ வினிகரில் போட்ட போட்ட முத்தாக உன்னை நீயே பாழாக்கிக் கொள்கிறாயே?” என்ற கஃபூர்தாசனின் ஆதங்கம் நம்மையும் ஆட்கொள்கிறது.

“ஓர் கையிலே மதுவும் ஓர் கையிலே மங்கையரும்
சேர்ந்திருக்கும் வேளையிலே சீவன் பிரிந்தால்தான்
நான் வாழ்ந்த வாழ்க்கை நலமாகும்; இல்லையெனில்
ஏன் வாழ்ந்தாய் என்றே இறைவன் எனைக் கேட்பான்”

என்று பாடிய கவியரசனை இந்த காரை தாரகையின் வரிகள் நிச்சயம் சிந்திக்க வைத்திருக்கும் அல்லவா?

தொடர்புடைய சுட்டி :

என் ஆசான்

கடலாய் விழுந்த மழைத்துளி

Read more...

Friday 24 April, 2009

நாகூர் ஹனிபா - அவர் ஒரு சரித்திரம்

நன்றி : திண்ணை
ஏப்ரல் 23, 2009
- அப்துல் கையூம்

சென்ற வாரம் "நாகூர் - ஒரு வேடிக்கை உலகம்" என்ற எனது கட்டுரையை ‘திண்ணை’யில் படித்துவிட்டு நாகூர் ஹனிபாவைப் பற்றி ஒரு வார்த்தையும் எழுதவில்லையே என்று குறைபட்டுக் கொண்டார் நண்பர் வேல். “அவர் எப்போது வேடிக்கை ஆனார்?” என்று கேட்க வேண்டும் போல் தோன்றியது. அவர் - ஒரு சரித்திரம், ஆகையால் 'சரித்திரம்' 'வேடிக்கை'யில் இடம் பெறவில்லை என்று கூறி சமாளிஃபிகேஷன் செய்தேன்.

‘வானளாவிய புகழைக் கொண்ட இந்த வாழும் சரித்திரத்தைக் குறித்து நாம் இதுவரை எதுவும் எழுதாமல் இருக்கிறோமே’ என்று சீத்தலைச் சாத்தனார் பாணியில் பால்பாயிண்ட் பேனாவினால் லேசாக உச்சந்தலையில் குத்திக் கொண்டேன்.

வெள்ளி நரை, வெண்கலக் குரல், வேகமான நடை, விவேகமான பேச்சு, வீறுகொண்ட மிடுக்கு இவற்றின் மொத்த உருவம்தான் இசைமுரசு E.M.ஹனீபா. “கம்பீரத்திற்கு அர்த்தம் யாது?” என யாராவது கேட்டால், பேசாமல் இவரது போட்டோவைக் காட்டி ‘அதுதான் இது’, ‘இதுதான் அது’ என்று கூறி தப்பித்துக் கொள்ளலாம்.

நாகூரில் ஹனீபா என்ற பெயரில் இரண்டு பாடகர்கள் இருந்ததால் மற்றவருக்கு ‘பித்தளை ஹனிபா’வென்று பெயர் வைத்து விட்டார்கள் இந்த வேடிக்கை மனிதர்கள். ஒருத்தர் “ஈயம்” என்றால் மற்றவர் “பித்தளை”தானே?

அத்தாவுக்கும் (அப்படித்தான் அவரை நான் அழைப்பேன்) எனக்கும் உள்ள நெருக்கம் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. அவரும், என் தந்தையும், குடும்ப நண்பர்கள். 1966-ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா அவரது இல்லத் திறப்பு விழாவுக்கு வந்தபோது, ஒன்பது வயது சிறுவனாக இருந்த நான், நாகை அந்திக்கடையில் விற்ற "கருப்பு-சிவப்பு" நிற பெர்லூன் பனியனை அணிந்துக் கொண்டு பந்தாவாக நின்றேன். வீட்டின் மையத்தில் போடப்பட்டிருந்த ஊஞ்சலில் அண்ணாவை உட்கார வைத்து எல்லோரும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். மொட்டை மாடியில் தலைவாழை இலைபோட்டு தடபுடலாக விருந்து ஏற்பாடாகி இருந்தது. கட்சிக்கொடி நிறத்தில் பனியன் அணிந்து அவர் கவனத்தை ஈர்த்த என்னைக் கண்டு "யார் இந்தச் சிறுவன்?" என்று அண்ணா வினவ "இச்சிறுவனின் குடும்பமே காங்கிரஸ் குடும்பம். தன் தந்தையின் பேச்சையும் மீறி உங்களைப் பார்ப்பதற்காக இவன் இந்த பனியனை போட்டுகொண்டு ஓடோடி வந்திருக்கிறான்" என்று அத்தா என்னை அறிமுகம் செய்ய, அண்ணா என்னை அன்புடன் அரவணைத்து தன் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டார்.

ஐந்தாம் வகுப்பிலிருந்தே, அவர் மகன் நவுஷாத் படித்த அதே சென்னை பள்ளியில் என்னையும் சேர்க்கச் சொல்லி, என் தந்தையாரிடம் வற்புறுத்தி, எனது நலனில் அக்கறை செலுத்தியவர். அந்த சரித்திர நாயகனுடன் ஒன்றாகச் சேர்ந்து காரில் சென்னை செல்கையில், சிற்றுண்டி அருந்த உணவகத்துக்குள் அடியெடுத்து வைக்க, அவரை அடையாளம் கண்டுகொண்டு "அதோ பார் நாகூர் ஹனீபா" என்று பொதுமக்கள் அவரை வியப்போடு பார்ப்பார்கள். உடன் செல்லும் எனக்கு பெருமிதம் தாங்காது.

ஊரினால் சிலருக்குப் பெருமை. சிலரால் ஊருக்குப் பெருமை. இதில் இசைமுரசு இரண்டாவது ரகம். ஒருமுறை இந்தியாவிலிருந்து அரசியல் பிரமுகர் ஒருவர் ரஷ்ய பயணம் சென்றபோது, “நீங்கள் ராஜ்கபூர் நாட்டிலிருந்தா வந்திருக்கிறீர்கள்?” என்று அங்குள்ளவர்கள் ஆச்சரியம் மேலிடக் கேட்டார்களாம். தாஜ்மகாலும், ராஜ்கபூரும்தான் அவர்களுக்கு இந்தியாவாகத் தெரிந்தது.

நான் பஹ்ரைன் நாட்டுக்கு வந்த புதிதில் மலபாரி நண்பரொருவர் “சாருக்கு ஊரு எவிடே” என்று சோதித்தார். நான் “நாகூர்” என்றதும், “நாகூர் ஹனீபா அறியாமோ?” “நிங்ஙள் அவரை கண்டுட்டுண்டோ” என்று என்மீது அடுக்கடுக்காய் கேள்விக் கணைகளைத் தொடுத்தார். நாகூர் ஹனிபாவை வைத்துதான் அந்த பிரகஸ்பதி நாகூர்பதியையே அறிந்து வைத்திருந்தார்.

வைகைப்புயல் வடிவேலுவை துபாய் நிகழ்ச்சிக்கு காமெடி பண்ண அழைத்தார்கள். அவரோ “இறைவனிடம் கையேந்துங்கள்” என்ற அனைத்து மதத்தினருக்கும் பொருந்துகின்ற அற்புதமான பாட்டை தன் கட்டைக்குரலில் பாடி, பக்திக்கடலில் அனைவரையும் மூழ்கடித்தார். ஆராய்ந்ததில் அவரும் ஹனிபாவின் ஆத்மார்த்த ரசிகராம்.

‘அல்லாஹ்வின் பேரருளை நம்பி நில்லுங்கள்’ என்று ஒரு வரி அப்பாடலில் வரும். “பிறகு எப்படி அது எல்லா மதத்தினருக்கும் பொருந்துகின்ற பாடல்?” என்ற கேள்வி எழலாம். “அல்லாஹ்” என்பதற்கு முஸ்லீம் கடவுள் என்று பொருள் கொள்ளலாகாது. அது GOD என்பதற்கான அரபுச் சொல். அவ்வளவே.

நாகூர் ஹனிபாவை ‘ஆஹா! ஓஹோ!’வென புகழ்பவர்களைப் போலவே, அவரை நக்கல், நையாண்டி செய்பவர்கள் உள்ளூரிலேயே உண்டு. பழுத்த கனிதானே கல்லடி படும்?

ஹனீபா முறையான சங்கீதம் படிக்காமலேயே நிறைவான புகழை அடைந்தார் என்பது கலப்படமில்லாத உண்மை. வித்வான் எஸ்.எம்.ஏ.காதர், பாகவதர் இசைமணி யூசுப் போன்ற உள்ளுர்க் கலைஞர்களுக்கு இணையாக ஆழமான சங்கீத ஞானம் இவருக்கு இல்லை என்ற விவாதத்தை மறுத்துப் பேச இயலாமல் திணறிப் போயிருக்கிறேன். இசைத்திறன் இவருக்கு இறைவன் கொடுத்த வரம்.

“மணி ஒலித்தால் நாதம் கிளம்பும். ஆனால் முரசு ஒலித்தால் சப்தம்தான் வரும். எனவேதான் ‘இசைமணி’ என்று பெயர் வைக்காமல் ‘இசைமுரசு’ என்று பொருத்தமாக பெயர் வைத்திருக்கிறார்கள்” என்று உள்ளுர்க் கவிஞர் ஒருவர் கிண்டல் செய்வதைக் காதுபட கேட்டிருக்கிறேன்.

அழுத்தம் திருத்தமாக உச்சரித்து ஆணித்தரமாக மனதில் பதிய வைக்க வேண்டும் என்ற ஆர்வ மிகுதியினால் இவர் மெல்லினத்தைக்கூட வல்லினமாக்கி உச்சரிக்கும் கொடுமையை எங்கே போய்ச் சொல்வது என்பார்கள்.

"அருள் வடிவானவர்" "எங்கள் நபிநாதர்" என்று முடியும் வரிகளில் ‘ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்’ என்று இப்படிப் போட்டு வறுத்து எடுக்கிறாரே என்று இவரை குறை சொல்பவர்கள், இப்பாடலை எழுதிய நபரை தேடிப்பிடித்து கலாய்ப்பதுதான் உசிதம்.

இணைத்து பாட வேண்டிய வார்த்தைகளை சிலசமயம் பிரித்துப் பாடி, அர்த்தங்கள் மாறி, விமர்சனங்களுக்கு உள்ளான இவரது பாடல்களும் இருக்கத்தான் செய்கிறது.

ஆனால் ஒன்று மட்டும் மறுக்க முடியாத உண்மை. இவரைப் போன்று “ஹ” “ஷ” போன்ற அட்சரங்களை தெள்ளத் தெளிவாக உச்சரிக்கும் பாடகர்கள் யாருமே கிடையாது. “முஹம்மது” “மஹ்மூது” என்ற பெருமானாரின் திருப்பெயரை இவரைப் போன்று அட்சர சுத்தமாக வேறெந்த பாடகரும் அட்டகாசமாக உச்சரித்ததில்லை.

ஹனிபாவின் சில பழைய பாடல்களை தேடிப் பிடித்து அதிலுள்ள குறைகளை அலசி ஆராய்ந்து அவரை குற்றவாளிக் கூண்டில் ஏற்றுபவர்களும் உண்டு.

“நமனை விரட்ட மருந்தொன்று விற்குது நாகூர் தர்காவிலே” என்று இவர் பாடியதைக் கேட்டு, உயிரை எடுப்பது வானவர் இஸ்ராயீல் என்கிறார்களே, இவரோ எமன் என்கிறாரே என்று மண்டையை போட்டு குழப்பிக் கொள்ளும் முஸ்லீம்கள் உண்டு. நமனை விரட்டுவதற்கு மருந்து இங்கே கிடைக்குதென்றால் ஆஸ்பத்திரிக்கு அலைய வேண்டிய அவசியமென்ன? இங்கேயே வந்து ஒரு கிலோ, இரண்டு கிலோ வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்ளலாமே? – இப்படி விவாதம் செய்வோர் உண்டு.

“நீர் எங்கே எங்கே எங்கே சாஹே மீரானே – உன்
வாசல்தேடி வந்தேன் நாகூர் மீரானே”

என்று இவர் பாடும்போது நமக்குள் பக்தி பரவசம் ஏனோ மிஸ்ஸிங். ஒரு குத்துப்பாட்டு கேட்கின்ற உணர்வு.

“ஹம் தேரே தேரே தேரே சாஹ்னே வாலே ஹேஹம் காலே ஹோதோ க்யா ஹுவா தில் வாலே ஹே”

என்று இந்தி நடிகர் மஹ்மூது ஹிட்லர் மீசை வைத்துக்கொண்டு கோணங்கியாக ஆடிக் கொண்டே பாடும் அந்த ஒரிஜினல் மூலப்பாட்டுதான் மூளையில் உதிக்கும்.

தொடக்க காலத்தில் சர்ச்சைக்குரிய சப்ஜெக்ட்களை தொட்டுக் கொண்டிருந்தவர் நாளடைவில்

“ஒரு கையில் இறைவேதம், மறு கையில் நபிபோதம்
இருக்கையில் நமக்கென்ன தயக்கம்
கண்களில் ஏனிந்த கலக்கம்”

என்பது போன்ற கருப்பொருளை தேர்வுச் செய்து தனது பாதையை சீர்படுத்திக் கொண்டது அவருக்குள்ளேயே ஏற்பட்ட ஒரு இயற்கையான மனமாற்றம் என்றுதான் சொல்ல வேண்டும்.

‘அந்த நாளிலே மக்கா நகரம் இருந்தது’ எப்படியென்றும், ‘ஐயாயிரம் ஆண்டுகள் முன்னே நடந்த அரபு நாட்டு தியாக’த்தையும், ‘பாத்திமா வாழ்ந்த முறை’யையும், ‘பெரியார் பிலாலின் தியாக வாழ்க்கை’யையும், ‘கண்களை குளமாக்கும் கர்பலா’ நிகழ்ச்சியையும் பாமரர்கள் ஏட்டில் படித்து தெரிந்துக் கொண்டதைவிட இவர் வாயிலாக இஸ்லாமிய சரித்திர நிகழ்வுகளை அறிந்து கொண்டவர்கள் ஆயிரமாயிரம்.

“மெளத்தையே நீ மறந்து இங்கு வாழலாகுமா?
மாறிடும் வாழ்வினில் மூழ்குதல் நியாயமா?”

என்று இவரது பாடல், “தழுவாது எனக்கு மரணபயமே” என்று பாடிய ஆசைக்கவிஞன் கண்ணதாசன், “காலா என் கண்முன் வாடா, உன்னைக் காலால் உதைக்கின்றேன்” என்று பாடிய மீசைக் கவிஞன் போன்ற கேரக்டர் மனிதர்களையும், ‘மரணபயம்’ ஆட்கொண்டு தெளிவு பிறக்க வைத்து விடும்.

“கன்னியரே! அன்னையரே! கொஞ்சம் நில்லுங்கள்” என்று அன்புடன் இவர் அழைக்கையில் கடுக்கண்களை காதில் போட்டுக் கொள்ளும் கன்னியர்கள் இந்த கனிவான அறிவுரையை காதில் போட்டுக் கொள்ள ஆயத்தமாகி விடுவார்கள்.

“காணக் கண் கோடி வேண்டும் கஃபாவை
ஹஜ்ஜூ காட்சிக்கிணை யாகஉலகில் எதுவுமே இல்லை”

என்று இவர் இசைக்கையில் மக்கமா நகரத்து இறையில்லக் காட்சிகள் கண்முன் தத்ரூபமாக காட்சிதரும்.

“நீராடும் கண்களோடு நெஞ்சம் நிறை பாசத்தோடு
மாறாத ஈமானோடு யாரசூலுல்லாஹ்”

என்று அவர் உருகும்போது கல்லும் கனியாகும்; உள்ளம் பனியாய் இளகிவிடும்.

“ஞானத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா?
கானத்தினால் அதை இன்னும் கொஞ்சம் சொல்லவா?”
என்று அவர் ஆரம்பம் செய்கையில் “ஓ! தாரளாமாகச் சொல்லுங்கள். நாங்களும் கேட்கிறோம்” என்று நம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வெளிப்படும் குரலை நாமே உணர முடியும்.

தனக்கு பாட்டெழுதி கொடுத்த புலவர்களுக்கு உரிய மரியாதை அவர் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் என்றால் பாடலுக்கு இசையமைத்துத் தந்த இன்பராஜ் போன்ற இசையமைப்பாளர்களை அவர் வெளிச்சத்துக்கு கொண்டுவரவே இல்லை என்ற குற்றச்சாட்டு வேறொரு புறம் நிலவுவதும் உண்மை.

ஆனால் இந்த 'பிஸ்கோத்து' குறைகள் யாவும் இந்த மனிதனுக்குள்ளே பொதிந்திருக்கும் மனிதநேயப் பண்பு, கொள்கைப் பிடிப்பு, அசாத்தியத் துணிச்சல், இவைகளுக்கும் முன்பு பவுடராகி தூள்தூளாகி விடுகிறது.

இசையால் மயங்க வைக்கும் இந்த லாகிரி வஸ்தாது எத்தனையோ இஸ்லாமிய பாடகர்களுக்கு அழகிய-முன்-மாதிரி. கவ்வாலி பாடலில் ஒரே சங்கதியை பல ‘மாடுலேஷனில்’ ஏற்ற இறக்கத்தில் பாடி "ரிபீட்டு" செய்வதைப் போல, இஸ்லாமிய பாடல்கள் என்றாலே எட்டுக் கட்டையில்தான் பாடவேண்டும் என்ற எழுதப்படாத இலக்கணத்தை ஏற்படுத்தி வைத்தவர் இவர். ஊசி உடைகிற உச்சஸ்தாயிலும் பூசிமொழுகுகிற பூத்த குரல்வளம் இவரது.

இவரை விட ஒரு கட்டை கூடுதலாக பாடி சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் "உலக முஸ்லீம்களே நில்லுங்கள்!" என்ற விவகாரமான பாட்டை வேறொருவர் பாட, நின்றுக் கொண்டிருந்த உலக முஸ்லீம்களையும் பயந்து ஓட வைத்தது கைக்கொட்டிச் சிரிக்க வைத்த கதை.

இவரைப்போலவே ஏழுகட்டை, எட்டுக்கட்டை என்று பாடுவதோடு மட்டும் நிறுத்திக்கொண்டால் பரவாயில்லையே. சாய்வாக அணிந்த ‘Fur’ தொப்பி, உள்ளங்கையை இறுக்கிப் பிடித்து மூக்கு நுனிவரை இழுத்துப்பிடித்தவாறு சைகை செய்வது, காதோரத்தில் கையை குவித்து வைத்துக் கொள்வது இது போன்ற மேனரிஸங்களைக்கூட இவரது ‘டூப்ளிகேட்’கள் விட்டு வைக்காததைத்தான் சகித்துக் கொள்ள முடியவில்லை.

எல்விஸ் பிரெஸ்லிக்கு அடுத்தப்படியான ‘Look Alike’ ‘எதிரொலி’ ஆசாமிகள் வாய்க்கப் பெற்றது நாகூர் ஹனீபாவாகத்தான் இருக்க முடியும்.

மேடைக் கச்சேரியின்போது, இசைக்குழு ஆசாமிகளின் காதில் இவர் ஏதோ ‘கிசுகிசு’ப்பதை பலர் கவனித்திருக்கக்கூடும். அடுத்த பாடலுக்கான சுதி எத்தனை கட்டை என்ற விவரத்தை காதில் ஓதுகிறாரோ என்று பார்த்தால், “ஒழுங்கா வாசியேண்டா உதவாக்கரை” என்பதைப்போன்ற அர்ச்சனைகளை அனாயசமாக ஆராதித்துக் கொண்டிருப்பார். (‘டோஸ்’களை மிகவும் நாசுக்காகவே இங்கு உளறியிருக்கிறேன்)

ஒருமுறை உணர்ச்சிவசப்பட்டு மேடையின் விளிம்பில் உட்கார்ந்திருந்த நரிபோன்று பிறாண்டும் ஒரு தபேலாக்காரரை லேசாக தள்ளிவிட அவர் தொபுக்கடீரென்று தலைக்குப்புற விழுந்தது ஊள்ளூர் ஜனங்கள் இரசித்த ‘சிச்சுவேஷன் காமெடி’.

“இவரின் இசைக் கச்சேரி
ஒரு யாகம் .. .. ..
மூன்று மணி நேரம் –
மேடையில் சுற்றியுள்ள
வாத்யக் காரர்கள் மட்டுமல்ல .. ..
இவர் சுருதியும்
கீழே இறங்காது”

என்று இவருக்கு புகழாரம் சூட்டுவார் கவிஞர் இசட் ஜபருல்லாஹ்.

"நாகூர் ஹனீபாவைப் போன்ற ஒரு பாடகர் ஐரோப்பாவிலோ , மொராக்கோ போன்ற தேசத்திலோ இருந்திருந்தால் உலகப் புகழ் அடைந்திருப்பார். அப்பேர்ப்பட்ட குரல் வளம் அவருடையது” என்று பாரட்டுப் பத்திரம் வழங்குகிறார் எழுத்தாளர் சாரு நிவேதிதா.

நாகூர் முஸ்லிம் சங்கத்தின் சார்பாக இந்த மாமனிதனுக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்குவதற்காக ஏற்பாடு செய்திருந்தனர். போஸ்டர் ஒட்டி, ஒலி பெருக்கியில் அறிவிப்புச் செய்து கூட்டியிருந்த கூட்டத்தை கண்டபோது என் கண்கள் ரத்தக்கண்ணீரை வடித்தது, சிறப்பு பேச்சாளராக மேடை ஏறிய கம்பம் பீர் முகம்மது "இதே விழாவை எனதூரில் கூட்டியிருந்தால் அலைமோதும் கூட்டத்தை திரட்டியிருப்பேன்" என்று தன் கோபத்தை வெளிப்படுத்தினார்.

நாகூர் அல்வா பிரசித்திப் பெற்றது. ஆனால் அரசியல் நாகூர் ஹனிபாவுக்கு அக்காலத்திலிருந்தே 'அல்வா' கொடுத்து வந்தது.

1957- ஆம் ஆண்டு தி.மு.க. முதன்முறையாக சட்டசபை தேர்தலில் களமிறங்கியபோது, நாகை தொகுதியில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.

மீண்டும் 2001- ஆம் ஆண்டில் வாணியம்பாடியில் தி.மு.க. வேட்பாளராக களம் இறங்கியபோதும் அந்த ஊர்க்காரர்கள் அவருக்கு அல்வா கொடுத்தார்கள்.

பாட்டு பாடியே ஓட்டுக்களைச் சேகரித்தார் இந்த பைந்தமிழ்ப் பாடகர். பாவம் A right person in a wrong place. கவ்வாலி பாடகர் அதா அலி ஆஜாத் நின்றிருந்தாலாவது ஜெயித்திருப்பாரோ என்னவோ.

“ஹனீஃபா சாஹேப் பத்தி நம்பள்கி ஜனங்களுக்கு அவ்ளோ தூரம் மாலுமாத் இல்லீங்கோ” என்று சொன்னார் அந்த ஊரைச் சேர்ந்த தோல் வியாபாரி என் இனிய நண்பர் அன்வாருல்லா.

கழக இயக்கத்திற்கும் இந்த கருப்புக் குயிலுக்கும் உள்ள தொடர்பு இன்று நேற்று எற்பட்ட ஒன்றா?

“வாடா கருப்பா” என்று இவரை வாஞ்சையுடன் அழைப்பார் திராவிட இயக்கத்து முன்னோடிகளில் ஒருவரான ‘அஞ்சா நெஞ்சன்’ அழகிரி.

“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு”

என்ற பாவேந்தர் பாரதிதாசனின் பாடலை, இந்த பாசறை மறவனைக் கொண்டு பாடவைத்து இயக்கத்தை வளர்த்தார் அந்த பட்டுக்கோட்டையார்.

தந்தை பெரியார் தான் செல்லுமிடம் யாவும் தமிழுணர்ச்சி பொங்கும் பாடல்களைப் பாட இந்த தன்னிகரில்லா பாடகனைத்தான் தன்னோடு அழைத்துச் செல்வார். “அனிபா அய்யாவுக்கு ஒலிபெருக்கி தேவையில்லை” என்பார். இவரது குரல் பெருமைக்குரிய குரல் மட்டுமல்ல. “பெரு-மைக்”குரிய குரலும் கூட என்பது அ.மா.சாமியின் கூற்று.

“தூங்கிக் கிடந்த உனைத் தூக்கி துடைத்தணைத்து
தாங்கித் தரைமேல் இட்டார் – தமிழா
தாத்தாவாம் ஈ.வே.ரா”
என்று ஹனீபா தொண்டைக் கிழிய பாட, தந்தை பெரியாரின் சிந்தைக்கினிய பேச்சுக்கு முந்திக்கொண்டு வருவார்கள் செந்தமிழ்ச் சீலர்கள்.

“ஓடி வந்த இந்திப்பெண்ணே கேள் – நீ
தேடி வந்த கோழையுள்ள நாடு இது அல்லவே!” என்று உரமேற்றி

“ஆறிலும் சாவு நூறிலும் சாவு அஞ்சாமல் ஓடிவா” என்று இவரது உணர்ச்சி பொங்கும் பாடலைக் கேட்டுவிட்டு இந்தி எழுத்துக்களை தாரு பூசி அழிக்க வீறு கொண்டு எழுவார்கள் வீர மறவர்கள்.

“பாடல்களில் சுருதி, லயம், ராகம்தான் இருக்கும் என்பார்கள். இவர் பாடல்களில் இவைகளை மீறி உணர்ச்சி இருக்கிறது. அது இப்போது தமிழர்களுக்கு தேவையாக இருக்கிறது” என்று அறிஞர் அண்ணா புகழ்ந்தார்.

1954- ஆம் ஆண்டு கைத்தறி நெசவாளர் துயர் துடைக்க அறிஞர் அண்ணாவுடன் சேர்ந்து ஊர் ஊராக துணிமூட்டைகளைச் சுமந்துச் சென்று உடுமலை நாராயணகவி எழுதிய

“செந்தமிழ் நாட்டுக் கைத்தறி நெசவு
சேலைகள் வேட்டிகள் வாங்குவீர்
திராவிட நாட்டின் சேமம் வேண்டி
சிங்கார ஆடைகள் வாங்குவீர்”

என்று பாடி தெருத் தெருவாக கூவி விற்றார் இவர்.

கலைஞர் அரைக்கால் சட்டையணிந்து கழகச் சேவை புரிந்த காலம் முதற்கொண்டு ஹனிபா மேடை ஏறி பாடி வருகிறார். நீதிக்கட்சியின் தலைவரான பன்னீர் செல்வம் லண்டனுக்கு பயணிக்கையில் ஓமான் அருகே விமான விபத்துக்குள்ளாகி உயிர் துறந்தார். 1940-ஆம் ஆண்டு நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் “பறந்தாயோ எங்கள் பன்னீர் செல்வமே!” என்று இவர் நெஞ்சுருக பாடியபோது, மாநாட்டு பந்தலில் அமர்ந்திருந்த அத்தனை பேரும் விம்மி விம்மி அழுதக் காட்சி ஒரு சரித்திர நிகழ்வு.

“அனிபாவின் கம்பீரத் தொண்டையைப் போலவே அவரது கழகத் தொண்டும் சற்றும் மாறவில்லை” என்று கலைஞர் இவருக்கு ‘அக்மார்க்’ முத்திரை வழங்கினார்.

இப்போதுகூட, டாக்டர் கலைஞர் தோளில் ஒரு கையையும், பேராசிரியர் அன்பழகன் தோளில் மற்றொரு கையையும், ஜாலியாக போட்டுக் கொண்டு பேசக்கூடிய லைசன்சு ஹனீபாவுக்கு மட்டுமே உண்டு.

அரசியல் துறையில் ‘அட்ஜஸ்ட்’ பண்ணத் தெரிந்து ‘ஆமாம் சாமி’ போட கற்று வைத்திருந்தால் எப்போதோ இவர் அமைச்சர் ஆகியிருப்பார். ‘தூக்குத்தூக்கி’ கலை அறியாது ‘வணங்காமுடி’யாக இருந்தமையால் ‘சக்கரவர்த்தி திருமகனாக’ இருக்க வேண்டிய இந்த ‘உத்தம புத்திரன்’ ஊர் ஊராக பாட்டுப் பாடிக்கொண்டு ‘நாடோடி மன்னனாகவே’ காலத்தைத் தள்ளிவிட்டார்.

தன் மேன்மையான எழுத்துக்களால் தமிழ்மொழிக்கு மீசை வரைத்த பாரதியைப் போல, கம்பீரமான தன் குரல்வளத்தால் தமிழுக்கு தலைப்பாகை கட்டி அழகு பார்த்தவர் இந்த வெள்ளிநரை வேந்தன்.

ஒருமுறை விழுப்புரத்தில், கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்கள் கலந்துக் கொண்ட முஸ்லீம்லீக் மாநாட்டில், நாகூர் ஹனிபா பாடினார். கூட்டம் முடிந்து ‘கெஸ்ட் ஹவுஸில்’ ஹனிபா அசந்து தூங்கிக் கொண்டிருக்கையில் நள்ளிரவில் யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்டது. கதவைத் திறந்தபோது காயிதேமில்லத் நின்றுக் கொண்டிருந்தார். “ஹனிபா சாஹேப் எனக்குத் தூக்கமே வரவில்லை. எனக்காக அந்த பாட்டை பாடுவீங்களா?” என்று நடுநிசியில் சின்னக்குழந்தைபோல் அடம் பிடித்தபோது ஹனிபாவுக்கு உள்ளூர ஒரே ஆனந்தம்.

“மண்ணிலே பிறந்ததேனோ எங்கள் பெருமானே!
மாநிலத்தைத் தாங்கிடவோ எங்கள் பெருமானே
!”


என்று உள்ளமுருக பாடினார். “இன்னும் ஒருமுறை பாடுங்களேன் ஹனீபா சாஹேப்” என்று காயிதேமில்லத் மறுபடியும் வேண்டுகோள் விடுக்கிறார்.

“பல்லுடைந்த நேரத்திலும் எங்கள் பெருமானே
பின்வாங்கி ஓடவில்லை எங்கள் பெருமானே
கல்லடிகள் பட்டபோதும் எங்கள் பெருமானே
கயவர்களைச் சபிக்கவில்லை எங்கள் பெருமானே”


என்ற வரிகளை ஹனிபா பாடியபோது காயிதேமில்லத் அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து தாரை தாரையாக வழிந்தோடுகிறது. தேம்பித் தேம்பி அழுகிறார். தாயிப் நகரத்து பாதகர்கள் சாந்தநபி மீது புரிந்த கொடுஞ்செயல் காயிதேமில்லத்தின் கண்முன் நிழலாடி அவரை கலங்கடித்திருக்க வேண்டும்.

நபிகள் நாயகத்தின் சகிப்புத்தன்மைக்கும், கருணையுள்ளத்திற்கும் எடுத்துக் காட்டாய்த் திகழ்கிறது தாயிப் நகரத்தில் நடந்த இந்நிகழ்ச்சி !

நாயகத் திருமேனியின் ஏகத்துவ போதனைகளை ஏற்க மறுத்த தாயிப் நகர மக்கள் அவர்கள் மீது கல்மாரி பொழிந்தார்கள். அண்ணலாரின் புண்பட்ட மேனியிலிருந்து செந்நீர் குருதி மண்மீது வழிந்தோடுகிறது.

"தாயிப் நகரத்தின் வீதிகளில் - ஒரு
தங்க நிலவைத் துரத்துகிறார்
அருமை நபியை ஆருயிரை
அணையா விளக்கை வருத்துகிறார்"

என்று இந்தக் காட்சியை மு.மேத்தா கவிநயத்தோடு வருணிப்பார்.

'கவிக்கோ' அப்துர் ரகுமானின் உவமைப் படிமம் வித்தியாசமாக இருக்கும்

"கல்லின் மீது
பூவை எறிபவர்கள்
இப்போது
பூவின் மீது
கல்லை எறிகிறார்கள்"
என்பார்

இதே காட்சியினை தனக்கே உரிய பாணியில் வடிப்பார் இறையருட் கவிமணி கா. அப்துல் கபூர்.

"சொன்மாரி பொழிந்ததற்காய்க்
கன்மாரி பெய்துவிட்ட
வன்மனத்தார் திருந்துதற்கு
வழிவகுத்த நாயகமே"
என்று.

அருமை நபிகளுக்கு நேர்ந்த இந்தக் கொடுமை ஹனிபாவுக்கு ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தியதாலோ என்னவோ “எத்தனை தொல்லைகள், என்னென்ன துன்பங்கள்” என்று தொடங்கும் இன்னொரு பாடலிலும்

“கல்லடி ஏற்று
கடுமொழி கேட்டு
உள்ளம் துடித்து
உதிரத்தை வடித்து”


என்ற வார்த்தைகள் வலம் வரும். “அண்ணல் நபி பொன்முகத்தை கண்கள் தேடுதே!” என்ற பாட்டிலும்

“தாயிப் நகரில் கல்லடிகள்
தந்த தழும்பிலே – இமைகள்
தழுவதற்கும் அழுவதற்கும்
கண்ணீர் பொங்குதே..”


என அந்த சோகத்தை நினைவூட்டுவார். எல்லாவற்றிற்கும் மேலாக

“தாயிப் நகரத்து வீதியிலே - எங்கள்
தாஹா இரசூல் நபி நடக்கையிலே
பாவிகள் செய்த கொடுமையினை - எண்ணிப்
பார்த்தால் நெஞ்சம் பதைக்குதம்மா!”

என்ற பாடலில் அந்த வேதனையான நிகழ்ச்சியை முழுவதுமாகவே படம்பிடித்துக் காட்டியிருப்பார்.

இவரைப்போன்று ஒரு தான்ஸன் தமிழ்நாட்டில் இதுவரை பிறந்ததுமில்லை; இனி பிறக்கப் போவதுமில்லை. ஒவ்வொரு முறை இவர் சுகவீனம் அடையும் போதெல்லாம் “நாகூர் ஹனீபா இறந்து விட்டார்” என்ற புரளியை கிளப்பி நம்மை கலங்கடிக்க வைக்கும் அந்த சோதனையைத்தான் நம்மால் தாங்க முடிவதில்லை.

84 வயதை எட்டியிருக்கும் இந்த மார்க்கண்டேய குரலுக்குச் சொந்தமான இந்த மாமனிதன் இன்னும் பல ஆண்டுகள் நீடுழி வாழ வேண்டும் என்பதுதான் அனைவரும் செய்யும் பிரார்த்தனை.

அருஞ்சொற்பொருள்:

மெளத்து : மரணம்
யா ரசூலுல்லாஹ்! : ஓ இறைவனின் தூதரே!
தாயிப் : சவுதி அரேபியாவிலிருக்கும் ஒரு நகரம்
ஈமான் : இறையச்சம்
திண்ணையில் அப்துல் கையூம்

Read more...

Tuesday 21 April, 2009

மறைமலை அடிகளாரின் இரங்கற்பா




நாகூர் குலாம் காதிர் நாவலர் தன் 74- வது வயதில் 28-01-1908 அன்ற் உயிர் நீத்தபோது அவரது மாணவராக விளங்கிய மறைமலை அடிகள் கையறு நிலையில் கவிதை பாடினார்.

வாடுகின்ற வையத்தின் வகைவிளங்க வசைபடுத்து
பீடுகெழு தமிழ்த் தெய்வ குலாம்காதிர் பெரும்புலவோய்
நீடுவளப் புத்தேளிர் நினைவின் மாசகற்றிவிட
ஓடிமறைந் துற்றாயோ இனியெங்குற் றுணர்வேனோ

Maraimalai Adikal was born on 15 July 1876 at Nagapattinam in Tamil Nadu. He studied Tamil under Ve. Narayanasamy Pillai. He had his schooling in the Wesleyan Christian High School. He enjoyed the friendship of Sundaram Pillai, author of Manonmaniyam. He settled in Madras thanks to the efforts of Sandamarutam Somasundara Nayakar. He joined the Madras Christian College as a Tamil teacher. He founded the Saiva Siddhanta Maha Samajam.

He edited 'Gnanasagaram' in which appeared Kokilambal's letters, and Kumudavalli. He edited the English journal, 'Oriental Mystic Myna.' He was a research scholar proficient in Tamil, Sanskrit and English. He translated Kalidasa's Sakuntalai into Tamil. He advocated purism in Tamil and changed his very name 'Vedachalam' into 'Maraimalai Adikal'. He later renounced family life. Contrary to practice, he began writing a commentary on the Thiruvasagam. His famous research work is Manikkavacakarin varalarum kalamum. He passed away on 15 September 1950.

Read more...

நாகூர் - ஒரு வேடிக்கை உலகம்

நன்றி : திண்ணை
April 16 2009

“வேடிக்கை” என்ற வார்த்தைக்கு நாகூர் அகராதியில் விதவிதமான அர்த்தங்கள் உண்டு. ஒரே வார்த்தையை ஓராயிரம் அர்த்தத்தில் உபயோகிப்பதே ஒரு வேடிக்கைதானே? ஓராயிரம் என்றால் துல்லியமாக ஓராயிரம் என்று கணக்கில் கொள்ளலாகாது. ஓராயிரம் மைனஸ் ஒன்றிரண்டாகவும் இருக்கக்கூடும்.

வீதியிலே கூட்டத்தைக் கூட்டி, மகுடி ஊதி, “பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடுகிறேன் பார்” என்று வித்தை காட்டும் காட்சி மட்டுமே வேடிக்கை என்று நாம் நினைத்தால் அது தப்புக் கணக்கு.

‘வேடிக்கை’ என்றால் வினோதம், விசித்திரம், ஆச்சரியம் என்ற அர்த்தமும் உண்டே என்று நீங்கள் வினவலாம். அதையும் தாண்டி எத்தனையோ அர்த்தங்களை எங்களூர் இயல்பாய் கற்பித்திருக்கிறது.

வேடிக்கைச் செய்திகள், வேடிக்கை நிகழ்வுகள், வேடிக்கைப் பழக்கங்கள், வேடிக்கை மனிதர்கள் நிறைந்த வேடிக்கை உலகம் அது. நகைச்சுவை உணர்வு நாகூர் மக்களின் நரம்பினில் ஓடுவது. புன்முறுவலை உதடுகளில் அழியாத லிப்ஸ்டிக்காய் பூசிக் கொண்டவர்கள் இவர்கள். புன்னகையை பொன்நகையாய் கவசகுண்டலமாக்கிக் கொண்டவர்கள்.

வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?

என்று மகாகவி சொல்லும் வேடிக்கை மனிதர்கள் வேறு, இந்த வேடிக்கை மனிதர்கள் வேறு. பாரதி சாடிய வேடிக்கை மனிதர்கள் வீணர்கள். இவர்களோ கவிவாணர்கள், இசைவாணர்கள்.

நாகூரில் தடுக்கி விழுந்தால் பாடகன் அல்லது கவிஞன் காலில்தான் விழவேண்டும் என்று சமுதாயக் கவிஞர் தா.காசீம் கூறுவார். “புலவர்கோட்டை” என்ற பழம் பெயர் பொருத்தமே என்பார்.

வடமொழி "தேவபாஷை" தமிழ் மொழி "நீசபாஷை" என்று கருத்து பரவி மணிபிரளாத்தமிழ் ஓங்கியிருந்த காலத்திலும் தன்னிலை இழக்காது சோறு/ ஆணம்/ தேத்தண்ணி (தேயிலைத்தண்ணீர்)/ மிளகுத்தண்ணி/ திறப்பு/ சூலி/ விளக்குமாறு/ சோத்துக்களறி/ உண்ணுங்க/ பசியாறுங்க என்று தூயதமிழ் பேசிய இவர்களை ‘வேடிக்கை மனிதர்கள்’ என்றுதானே உலகம் அன்று விமர்சித்திருக்கும்?

‘ஏற்பது இகழ்ச்சி’ என்ற உண்மை அறிந்திருந்தும் “ஈவது விலக்கேல்” என்ற சொல்லை மறவாது கையேந்தி நிற்கும் யாசகனிடத்தில், ஈவதற்கு ஏதும் இல்லாத சூழ்நிலையில்; “மாப்பு செய்யுங்க பாவா” என்று பிச்சைக்காரர்களிடத்திலேயே மன்னிப்புக் கேட்கும் பண்பு வேடிக்கையான ஒன்றுதானே?

மண்பாண்டம் மணம் வீசும் சுவைமிகுந்த ‘குண்டாச்சோறினை’ மிஸ்கீனிடத்திலேயே காசு கொடுத்து வாங்கும் கனவான்களின் வாடிக்கையை ‘வேடிக்கை’ என்றுதானே வர்ணிக்க வேண்டும்?

ஒருவேளைச் சோற்றுக்கு கையேந்தப்போய் இரண்டு. மூன்று சோத்துச்சீட்டை கைவசம் வைத்துக்கொண்டு எதைக் கொடுத்து சாப்பிடுவது? எதை விடுவது? என்று திணறும் வேடிக்கை மனிதர்களை இந்த ஊரில் காணலாம்.

“எனக்குப் பெரிதாக ஊர்ப்பாசம் கீர்ப்பாசமெல்லாம் கிடையாது. இருந்தாலும் நாம் பிறந்து வளர்ந்து பொறுக்கிய இடங்களைப் பற்றிப் படிக்கும் போது தவிர்க்க முடியாமல் ஒரு ‘நாஸ்டால்ஜிக்‘ உணர்வு வந்து குந்திக் கொள்கிறது” என்று ஏனோ தானோவென்று வேண்டா வெறுப்பாக தன் ஊர்ப்பாசத்தை உலகறிய பிரகடனப்படுத்தும் என் சகஊர்த்தோழர் சாரு நிவேதிதாவை என்னவென்று விமர்சிப்பது? எதிர்மறையாக பேசிப்பேசியே விளம்பரம் தேடிக்கொள்வது அவர் பாணி என்று விட்டுத்தள்ள வேண்டியதுதான்.

ஊர்ப்பாசம் மிகுதியால் தங்கள் சொந்தப் பெயரே மறைந்து குன்னக்குடி, வளையப்பட்டி, மகாராஜபுரம், பட்டுக்கோட்டை, சீர்காழி என்று அறியப்படும் கலைஞர்களை இவருடன் ஒப்பிட்டுப் பார்க்கிறேன்.

ஆனைக்கு தும்பிக்கை எப்படி முக்கியமோ, மனிதனுக்கு நம்பிக்கை எப்படி முக்கியமோ, அதுபோன்று ‘வேடிக்கை’ இந்த ஊருக்கு முக்கியம்.

“நல்ல வேடிக்கை போங்க” என்று மூக்கின் மேல் விரலை வைத்து கொள்வார்கள் எங்களூர் தாய்க்குலங்கள். அந்த ‘வேடிக்கை’யில் எதிர்பார்ப்பு, பெருவியப்பு பொதிந்துள்ளது என்று பொருள் கொள்ள வேண்டும்.

“இந்த வேடிக்கையெல்லாம் என்கிட்ட வச்சுக்காதீங்க” என்று நண்பர் கோபப்பட்டால் ‘பூச்சாண்டி காட்டுற வேலையெல்லாம் நம்ம கிட்ட வேண்டாம்’ என்று அர்த்தம்.

“மச்சான், இன்னிக்கு கடைதெருவிலே செம வேடிக்கை” என்று நண்பன் தகவலோடு வந்தால் அதில் கேலி, கிண்டல், கூத்து, கும்மாளம், கேளிக்கை, பொழுதுபோக்கு அடங்கியுள்ளது என்று அர்த்தம்.

செட்டியார் பள்ளியில் படிக்கையில் “அங்கே என்ன வேடிக்கை?” என்று ஒரு அதட்டலை உதிர்ப்பார் சரவணா சார். சொம்பும் கையுமாய் ஒதுக்குப்புறத்துக்கு யாராவது போய்க் கொண்டிருப்பார். அதில் என்ன வேடிக்கை வேண்டிக் கிடக்கு? அப்படியென்றால் வெளியில் நடக்கும் யாவும் வேடிக்கை என்றுதானே அர்த்தம்?

நகர்புறத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் வேடிக்கை பார்க்க வேண்டுமெனில் ஜன்னல், பால்கனி அல்லது வாயிற்படியில் வந்து எட்டிப்பார்க்க வேண்டும். நாகூர்வாழ் மக்களுக்கு அதற்கு அவசியமே இல்லை. முற்றத்தில் படுத்துக் கொண்டே காற்றுப்பந்தல் வழியே அண்ணாந்து வெளியுலகை ஆசைதீர கண்டு இரசிக்கலாம். இந்த “Wind Tower Technology” விலாசத்தினால் இவர்களின் சுவாசப்பை போலவே இதயமும் விசாலமாகி விடுகிறது.

பக்கத்து வீட்டு முத்தாச்சி மாமி “இந்த வேடிக்கையை கேட்டிஹலா புள்ளே” என்று ஆரம்பித்தால் அதில் வில்லங்கம் இருக்கிறது என்று நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். “கலியாணம் ஆயி இன்னும் ஒரு மாசம் கூட ஆவலே அதுக்குள்ளே புது மாப்பிள்ளைக்கி அஹ வூட்லே கடை சமுசா வாங்கி வச்சிருக்காஹா” என்று நாட்டு நடப்பை போட்டு உடைப்பார். இதில் என்ன வேடிக்கை? என வினவலாம். இந்த ஊரை பொறுத்தவரை இது ஒரு வேடிக்கையான கெளரவப் பிரச்சினை.

வியாழக்கிழமை வந்தாலே வேடிக்கைமயம்தான். சுற்றுப்புற ஊர்களிலிருந்து கூட்டம் வரத் தொடங்கிவிடும். பக்தி முற்றி பரவசம் பொங்க வரும் பக்தகோடிகளை விட வேடிக்கை நாடி ஓடி வரும் ஆடியன்ஸ்தான் அதிகம்.

கடைத்தெருவில் கமகமக்கும் கடலை வறுக்கும் வாசம் முதற்கொண்டு, அனாடமி படிக்கும் மாணவர்களுக்கு உபயோகப்படும் கை, கால், கண், காது, மூக்கு, தொடை என்று விற்கும் வெள்ளித்(?) தகடுகள் உட்பட எல்லாமே வேடிக்கைமயம்தான்.

அலங்கார வாசலில் தர்கா யானையை சீவி சிங்காரித்து ஆடை அணிகலன்கள் அணிவித்து பரிவட்டம் கட்டி நிற்க வைப்பார்கள். எதற்கு? தர்காவிற்கு செக்யூரிட்டி அதிகரிக்கவா? எல்லாம் ஒரு வேடிக்கைக்காகத்தானே?

வெளியூரிலிருந்து உள்ளூருக்கு வேடிக்கை பார்க்க வருகின்ற கூட்டம் ஒருபுறம் என்றால் வெளியூர்க்காரர்களை வேடிக்கை பார்க்கின்ற உள்ளூர்க்காரர்கள் மற்றொருபுறம். இவர்களுக்கு அவர்கள் வேடிக்கை. அவர்களுக்கு இவர்கள் வேடிக்கை. என்ன ஒரு வேடிக்கை பார்த்தீர்களா?

நேர்த்திகடனுக்காகாக மொட்டை போட்டு தலைமுழுக்க சந்தனம் பூசி பளபளவென்று பவனிவரும் ஆந்திரா ஆசாமியைக் கண்டால் இவர்களுக்கு வேடிக்கை. கொஞ்சம் ‘தபுரூக்’ எடுத்துக் கொள்ளலாமா என்று அந்த ஆசாமியின் தலையில் ஒட்டியிருக்கும் சந்தனத்தை பிய்த்து அவர் ‘ஆ’வென்று கத்துவதை வேடிக்கையாகக் கருதும் விஷமத்தனமான இளவட்ட பசங்களின் குறும்பினை என்னவென்று சொல்வது?

பொழுது சாயும் வேளையில் “குண்டு போட்டாச்சா?” என்று ஒருவர் வினவ “இல்லை இன்னும் போடலே” என்று மற்றவர் பதிலுரைக்க இந்த உரையாடலைக் கேட்கும் வெளியூர்க்காரர் “நாம் ஏதோ ஈராக் போன்ற ஒரு War Zone-க்குள் வந்துவிட்டோமோ என்று துண்டைக்காணோம் துணியைக்காணோம் என்ற ரேஞ்சுக்கு ஓடக்கூடும்.

அந்த பொன்மாலைப் பொழுதில் தர்காவிலிருந்து குண்டுச் சத்தம் (வெடிச்சத்தம்) கேட்க, சிறகடித்து வானுயர்ந்த கோபுரங்களை வட்டமிடும் புறாக்களின் கூட்டம் கண்கொள்ளாத வேடிக்கையாக இருக்கும்.

காற்று வாங்க கடற்கரைக்கு காலாரச் செல்லும் வெளியூர்க்காரரின் காதில் விழுமாறு குறும்புக்கார என் நண்பன் “அதோ சிங்கம் வருது பாரு” என்று கமெண்ட் அடிக்க அசந்துப் போய் நடந்து வந்த அவரோ கம்பீரமாக ராஜநடை நடக்க, “என் நண்பன் சொன்ன சிங்கத்திற்கு அர்த்தம் வேறு சார்” என்று அவரிடத்தில் நான் சென்று போட்டுக் கொடுக்கவா முடியும்?

வேடிக்கை காட்டுவதில் நாங்கள் எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் அல்ல. சின்ன ஹந்திரி, பெரிய ஹந்திரி, வாஞ்சூர் ஹந்திரி, சில்லடி ஹந்திரி, மவுலூது, ஆஸுரா, ஒடுக்கத்து புதன், மீலாது நபி, என்று வேடிக்கையே வாடிக்கையாகி விட்ட ஊர் எங்களூர். மினாராவுக்கு சாந்து (சாயம்) பூசுவதும், பாம்பரம் ஏற்றுவதும் கூட எங்களுக்கு வேடிக்கைதான்.

இன்னபிற ஊர்களில் தேரோட்டம் வேடிக்கையெனில் எங்களூரில் பீரோட்டம் வேடிக்கை. சமுத்திரத்தில் செல்லுகின்ற கப்பல்கள் சாலையில் சென்றால் அது வேடிக்கை அல்லவா? தண்டவாளத்தில் செல்லும் புகைவண்டி தார்ரோட்டில் சென்றால் அது வேடிக்கைதானே?

“குவா குவா மொம்மது காக்கா கொத்துப் பரட்டா” என்று துருக்கி உடை அணிந்த கோரஸ் குழு, அவர்களுக்கு மட்டுமே புரிந்த பாஷையில் ரைம்ஸ் பாடுவது என்னவொரு வேடிக்கை தெரியுமா?

ஊரு உலகத்தில் உள்ளங்கை சைஸில் விற்கும் ஜிலேபி இங்கே ஓரடி விட்டத்தில் தயாராவது வேடிக்கைதானே?

புரோட்டாவின் சைசுக்கு ஏற்றார்போல் Single, Double, Triple என்று கூட்டிக் கொண்டுபோகும் நாகூர் மக்கள், விலைவாசி ஏற ஏற, Tetra, Penta, இன்று நாளடைவில் புதுப்பெயர் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

வாணவேடிக்கை என்று ஒரு நாளையும் வைத்து அக்கம் பக்கத்தாரை திரட்டுவதும் இந்த வேடிக்கை மனிதர்களின் சிறப்பு.

“The Great Show man” என்று இந்தி தயாரிப்பாளர் ராஜ்கபூருக்கு பட்டத்தை அளித்ததைப்போன்று நாகூரார்களுக்கும் யாராவது பட்டம் கொடுத்திருக்கலாம்.

பாரதி இருந்திருந்தால்

வேடிக்கை மனிதரைப்போல் – நான்
வாழ்வேனோ சர்வேசா”

என்று பாடி மகிழ்ந்திருப்பான்.

அருஞ்சொற்பொருள் :

தபுரூக் = பிரசாதம்
மிஸ்கீன் = வறியோர்
ஹந்திரி = கந்தூரி உற்சவம்

Read more...

கவிஞர் ஜபருல்லாஹ்வின் தூது




கவிஞர் இஸட் ஜபருல்லாஹ் எழுதிய "நிலவு சொன்னது!" என்ற வித்தியாசமான கவிதையை நான் அண்மையில் படித்து இரசித்தேன். "தூது விடு படலம்" என்பது ஒரு தனி 'ட்ராக்' இலக்கியம். பக்தியை ஊட்டும் நூலாகப் பிறந்த இது, நாளடைவில் சிற்றின்ப இலக்கியமாக மாறியது தனிக்கதை. 'அஃறிணை' பொருட்களை; அவை பேசாது என்று நன்கு தெரிந்திருந்தும் அவைகளோடு உரையாடுவது கவிஞர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள 'ஸ்பெஷல் லைசன்சு'.

அன்னம் விடுதூது, புறா விடு தூது, நாரை விடு தூது, கார் விடுதூது, வண்டு விடு தூது என்று நிற்பன, நடப்பன, பறப்பன என்று அனைத்தையும் (போஸ்ட்மேனைத் தவிர) தூது அனுப்புவார்கள் இந்த 'லைசன்சு ஹோல்டர்கள்'. "நாராய் நாராய்! செங்கால் நாராய்!" என்ற செய்யுளை பள்ளிப்பாடத்தில் படித்தது நினைவிருக்கலாம்.

(நாகூர்ப்புலவர்களாக இருந்திருந்தால் காடை, கவுதாரி, கொசு உல்லான், கோட்டுல்லான், குயில், பொன்னாந்தட்டான் என்று உண்ணும் பறவைகளாகப் பார்த்து தூது அனுப்பியிருப்பார்கள்)

காளிதாசன் 'மேக சந்தேசம்' என்ற காவியம் படைத்தான். "ஓடும் மேகங்களே! ஒரு சொல் கேளீரோ" என்று கண்ணதாசன் டி.எம்.எஸ். வாயிலாக மேகத்தை தூது விட்டான். "தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு; எங்கள் திருநபியிடம் போய்ச் சொல்லு" என்று கவிஞர் தா.காசிம் இசைமுரசு நாகூர் ஹனீபா வாயிலாக தூதுவிட்டார். "போகும் மேகங்களே! பூமான் நபிக்கு ஸலாத்தைச் சொல்லுங்களேன்! மதினாவில் வாழும் மஹ்மூது நபிக்கு மனத்தூதைக் கூறுங்களேன்" என்று அடியேனும் பாடகர் ஜெய்னுல் ஆபிதீன் மூலமாக தூதுவிட்டேன்.

இவையாவும் 'ஒன் வே டிராபிக்' தூது. இதோ கவிஞர் இஸட் ஜபருல்லா விடுத்திருக்கும் தூதை கவனியுங்கள். இது "டூ வே டிராபிக்". இங்கிருந்து நிலவை அனுப்புகிறார் தூது. அது போகிறது. போய் பதில் செய்தியையும் கொண்டு வருகிறது

"அண்ணல் நபி பொன்முகத்தை கண்கள் தேடுதே" என்ற இசைமுரசின் இனிமையான பாடலில் ஒரு அற்புதமான வரி வரும். "தென்றல் அதை தூது விட்டேன் திரும்பவில்லையே..!" என்று. அது எப்படி திரும்பி வரும்? காரணம் அது போன இடம் அப்படிப்பட்ட இடம். திரும்பி வர மனம் இசையாது. புஷ்பங்களின் மகரந்தாமாம் மதினப் பூமியில் அதற்கு புரள வேண்டும்; உருள வேண்டும்; போலிருந்திருக்க வேண்டும். இல்லாமல் போனால் அந்த கஸ்தூரி மணத்தில் லயித்துப் போய் அங்கேயே சங்கமித்திருக்க வேண்டும். அதனால்தான் தூத் போன தென்றல் திரும்பவில்லை.

கவிஞர் இஸட் ஜபருல்லாஹ் தூதுவிட்டது நிலவை அல்லவா? தென்றல் திரும்பாமல் போனால் என்ன? இருக்கவே இருக்கிறது வாடைக் காற்று. அதை வைத்து நாம் 'அட்ஜ்ஸ்ட்' செய்துக் கொண்டு போய் விடலாமே?

ஆனால் நிலவு அப்படியா? இருப்பது ஒன்றே ஒன்று அல்லவா? அது இல்லாமல் போனால் இரவு வெளிச்சத்திற்கு என்னச் செய்வது? எப்படி பிறை பார்ப்பது? எங்ஙனம் பெருநாள் கொண்டாடுவது? மாதத்தை எப்படி கணக்கெடுப்பது? இடுப்பில் இருக்கும் குழந்தைகளுக்கு தாய்மார்கள் எப்படி நிலாச்சோறு ஊட்டுவது? கவிஞர்கள் கவிதை எழுதுவதற்கு ஒரு முக்கியமான 'கரு' மிஸ்ஸிங் ஆகி விடுமே? இவ்வளவு பிரச்சினை இருக்கிறதே?

எனவேதான் எங்கள் பூமான் நபியைக் கண்டபின்பும் அதை திரும்ப வரச் செய்கிறார் நம் கவிஞர். விவரமான மனிதரிவர். அத்தனை ஒரு மகத்துவம் நிறைந்த இடத்திற்குச் சென்ற நிலவானது வெறுமனே எப்படி வரும்?

சில நல்ல செய்திகளைத் தாங்கி வருகிறது. அறிவுரைகளைச் சுமந்து வருகிறது. புத்திமதிகளை ஏந்தி வருகிறது. போதனைகளோடு புறப்பட்டு வருகிறது. இனி கவிஞர் இஸட் ஜபருல்லாஹ் அவர்களின் கவிதை வரிகளில் மூழ்குவோம் :


நிலவு சொன்னது---------------

விண்ணகத்தில் சதிராடும்
வெண்ணிலவை நான் கேட்டேன்
அண்ணல்நபி பூமுகத்தைக் கண்டாயா....? அவர்
சொன்னமொழி எனக்கெடுத்துச் சொல்வாயா?

கன்னல்நபி நாயகத்தை
கண்டுவந்த உணர்வதனை
விண்டுரைக்க வார்த்தையில்லை என்றது..! அதை
விடவில்லைநான் அதனால் சொன்னது...!

அண்ணலாரின் ஒளிமுகத்தை
என்முகத்துக் கீடாக்கி
பாட்டெழுதும் அறியாமை சொல்லிவந்தேன்..! - நெஞ்சைப்
பண்படுத்தும் போதனைகள் அள்ளி வந்தேன்..!

ஏழைகளுக் கிரங்கச் சொல்லி
என்னிடத்தில் சொல்லச் சொன்னார்...!
ஏற்றுவந்து கூறிவிட்டேன் செல்வர்களே..! பணம்
எத்தனை நாள் நிலைத்திருக்கும் சொல்லுங்களேன்...?

இம்மைதரும் சுகங்களிலே
மறுமையினை மறந்திடாதீர்..!
என்றுஎன்னை நினைவூட்டச் சொன்னார்கள்..! நபிகள்
என்றும் உலகம் சதமில்லை என்றார்கள்..!

ஆளுகின்ற பதவியெல்லாம்
'அல்லாவின் அடிமை' யென்ற
பதவிக்குமுன் ஈடாகாது என்றார்கள்..! நபிகள்
பக்குவமாய் எடுத்துரைக்கச் சொன்னார்கள்..!

மூமீன்கள் பிளவுபட்டால்
ஏமாளி ஆனார்கள்...!
ஏனிந்த வேற்றுமைகள்..? என்றார்கள் - நபிகள்
என்னைத்தான் கேட்டுவரச் சொன்னார்கள்..!

சுவனசுகம் துறந்தவராய்
நரகநெருப்பை நாடுகின்றார்..!
சொல்லிவிடு வெண்ணிலவே என்றார்கள்...! இதை
சொல்லும்போது முகத்தில்வாட்டம் கொண்டார்கள்...!

எம்பெருமான் சொன்னவைகள்
எல்லாமும் சொல்வதென்றால்
எந்தன்மனம் தாங்காது என்றது..! நிலவு
என்னை விட்டு வானில்விரைந்து சென்றது...!

(இந்த தேர்தல் களத்தில் ஒற்றுமை காட்ட வேண்டிய மூமீன்களாகிய நாம் பிளவுபட்டு ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளும் இத்தருணத்தில் இக்கவிதை மிகவும் பொருத்தமாக உள்ளது)

- அப்துல் கையூம்

Read more...

Thursday 16 April, 2009

நீதிபதி மு.மு.இஸ்மாயீல்




(நீதியரசர் மு.மு.இஸ்மாயீல் அவருடனிருந்து பழகிய வழக்கறிஞர் த. இராமலிங்கம், தம் நினைவுகளை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்)

நாகூரில் ஒர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர், நீதிபதி இஸ்மாயீல் அவர்கள். வறுமை சூழ்ந்த இளமை என்றாலும் படிப்பிலும் இலக்கியத்திலும் இளமை யிலேயே சிறந்து விளங்கியவர். பள்ளிப் பருவத்திலும் கல்லூரிப் பருவத்திலும் பேச்சுப் போட்டிகளில் பரிசுகள் பெற்ற கதையை, ஓய்வாகப் பேசும் நேரங்களில் சொல்லிக் கொண்டே இருப்பார்.

முயற்சியினால் முன்னுக்கு வந்தவர், அவர். டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதி பதியாகப் பதவியேற்று அதன் பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வந்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகவும் தலைமை நீதிபதியாகவும், நீதித் துறைக்கு அவர் ஆற்றிய சேவை மகத்தானது.

பண்பட்ட இலக்கியவாதியாக அவர் திகழ்ந்தார். இலக்கியத்தில் நயம் பாராட்டிப் பேசிக்கொண்டிருப்பது அவருக்குப் பிடிக்காது. நகைச்சுவை சொன்னால் கோபமே வந்துவிடும். மேடையில் பேசப்படும் ஒவ்வொரு சொல்லும் இலக்கியத்துக்கோ, சமுதாயத்துக்கோ நேரிடையாகப் பயன்படவேண்டும் என்பார்.

சென்னை கம்பன் விழாவில் ஒருமுறை மாலை நிகழ்ச்சிக்கு அவர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பேசிய பேச்சாளர் ஒருவர், ஒரு நகைச்சுவை சொன்னார். துரதிருஷ்டவசமாக அதே நகைச் சுவையைக் காலை நிகழ்ச்சியிலும் வேறு பேச்சாளர் ஒருவர் சொல்லியிருந்தார். இவரும் அதையே சொல்ல, தலைமைப் பொறுப்பிலிருந்த நீதிபதி இஸ்மாயீல் அவர்களுக்குச் சட்டென்று கோபம் வந்துவிட்டது. “இந்த கத்திரிக்கா ஜோக்கெல்லாம் காலையிலேயே சொல்லிவிட்டாங்க, நீங்க உங்க கருத்தைப் பேசுங்க’ என்று ஒலிபெருக்கியிலேயே சொன்னார்.

நீதித் துறையில் மட்டுமல்ல. இலக்கிய உலகிலும் அவர் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். அவர் மேடையில் இருக்க வேண்டும் என்பதில்லை. பார்வையாளர்கள் வரிசையில் இருந்தால் கூட பேச்சாளர்கள் தயங்கித் தயங்கிப் பேசுவார்கள்.

இலக்கிய உலகில் அடுத்த தலைமுறை வளர வேண்டும் என்பதில் உறுதியான எண்ணம் கொண்டிருந்தார். அவருடைய எண்ணத்தைச் செயலாக்கத் துணை நின்ற பெருமை, செயலாளராக இருந்த பழ.பழநியப்பன் அவர்களையே சாரும். நீதிபதி இஸ்மாயீல் அவர்களும் பழ.பழநியப்பன் அவர்களும் வழி காட்டாமல் இருந்திருந்தால் நாங்கள் எல்லாம் இலக்கிய உலகத்திற்குள் காலடி வைத்து இருக்கமுடியாது.

மாநில அளவில் மாணவ-மாணவியர்க்குப் பேச்சு, கட்டுரை மற்றும் கவிதைப் போட்டிகளை அவருடைய வழியில் கம்பன் கழகம் இன்றும் நடத்தி வருகிறது. பேச்சுப் போட்டியில் வெற்றிபெறும் மாணவ-மாணவியரைக் கம்பன் விழா மேடையில் ஏற்றிப் பேச வைக்கும் வழக்கத்தை நீதிபதி இஸ்மாயீல் அவர்களும் பழ.பழநியப்பன் அவர்களும்தான் உருவாக்கினார்கள். இன்று பல கழகங்கள் அதைப் பின்பற்றி வருகின்றன.

மதுரை கம்பன் கழகம், அவருடைய தமிழ்த் தொண்டைப் பாராட்டி பெரும் தொகை ஒன்றை விருதாகக் கொடுத்தது. அவர் வீட்டுக்கே சென்று நாங்கள் அனை வரும் வழங்கினோம். அப்போது பெற்றார். ஆனால் மறுநாள் ஒரு கடிதம் எழுதி, அந்தப் பணத்தையும் வைத்து, கம்பன் கழகத்தின் துணைத் தலைவர் ஏ.வி.எம்.சரவணன் அவர்களுக்கு அனுப்பிவிட்டார். “இந்தப் பணத்தை நான் வைத்துக்கொள்வது முறையாக இருக்காது’ என்று கடிதத்தில் எழுதியிருந்தார். பின் அவருடைய அனுமதியின் பேரில், கம்பன் கழகத்தின் அறக்கட்டளையில் அப்பணம் சேர்க்கப்பட்டது.

எவருக்கும் எக்காலத்திலும் தலை வணங்காத தகைமையாளராக வாழ்ந்து, தன் வாழ்வை நிறைவு செய்து கொண்டிருக்கிறார், நீதிபதி இஸ்மாயீல் அவர்கள். வளர்ந்து வரும் தலை முறைக்கு அவரது நேர்மையும் மன உறுதியும் தலைவணங்காத் தன்மையும் என்றும் வழிகாட்டி நிற்கும்.

- நன்றி (SIFY - TAMIL)

மறைவுச் செய்தி (The Hindu)

Read more...

இறைவனும் இருட்டும்




இறைவனும் இருட்டும்
- அப்துல் கையூம்

கலைமாமணி கவிஞர் நாகூர் சலீம் அவர்களின் எழுத்துக்களை மிகவும் நேசிப்பவன் நான். அவரது பாடல்களில் சிந்தனையைத் தூண்டும் சீரிய கருத்துக்களை காண முடியும். நாகூர் ஈன்றெடுத்த நற்றமிழ்க் கவிஞர்களில் அவரும் ஒருவர்.

நாலுகால் கட்டிலிலே நித்தம் நித்தம் தூக்கம்
நாலுபேர் தூக்கையிலே நிரந்தர தூக்கம்

என்ற உணர்ச்சி பூர்வமான வரிகளை கேட்கையில் மரண பயம் நம்மைக் கவ்விக் கொள்ளும்.

பூவிருக்கும் மேனி
புழுக்களின் தீனி
புரிந்தவன் ஞானி
புத்தி பெறுவாய் நீ
என்ற இரண்டிரண்டு வார்த்தை வரிகளில் "வீதி வரை உறவு" என்ற கவியரசு கண்ணதாசன் பாடலில் காணப்படும் அதே தத்துவார்த்த கருத்துக்களை நாம் உளமார உணர முடியும். (பாடல் வரிகளை நினைவில் இருந்ததை வைத்து இதை எழுதுகிறேன்)

அந்த ஒரு தூக்கத்துக்கு
ஆளாகும் முன்னே
இந்த ஒரு தூக்கத்திலும்
என்ன சுகம் கண்ணே?

என்ற வரிகள் பக்குவமடைந்த ஒரு தத்துவவாதியின் பண்பட்ட சிந்தனைகள்.

"But I have Promises to keep
Miles to go before I sleep
Miles to go before I sleep"

என்ற ஆங்கிலக் கவிஞன் ராபர்ட் ஃப்ராஸ்ட்டின் வரிகளை எனக்கு அது நினைவுறுத்தும். அந்த ஒரு "தூக்கம்" நம்மைத் தழுவுவதற்கு முன்பு நமக்கு விதிக்கப்பட்ட கடமைகளை நாம் சரிவரச் செய்ய வேண்டுமே என்ற உணர்வு நம்மை ஆட்கொள்ளும். ஆழ்ந்த சிந்தனை மிகுந்த அற்புதமான பாடல் அது.

கலைமாமணி கவிஞர் நாகூர் சலீம் அவர்களின் மற்றொரு பாடலில் ஏனோ எனக்கு சற்றும் உடன்பாடில்லை.

உலக முஸ்லீம்களே நில்லுங்கள்!
உண்மைதானே சொல்லுங்கள்?

என்று அவர் எழுதி, காயல் ஷேக் முகம்மது அவர்கள் பாடிய உச்ச ஸ்தாயி பாடலின் இனிமை நம் காதுகளில் தேனாகப் பாயும். அந்த பாடல் வெளிவந்த காலத்தில் இதன் உள்ளர்த்தத்தை முழுமையாக புரிந்துக் கொள்ளக்கூடிய பக்குவம் எனக்கில்லை. பாடலின் இசையில் லயித்ததோடு சரி. இப்பொழுது சிந்தித்துப் பார்க்கையில் இந்த பாடலில் உள்ள கருத்துக்களோடு என்னால் அறவே ஒத்துப் போக முடியவில்லை. "உலக முஸ்லீம்களே!" என்று தொடங்குவதால் உலக முஸ்லீம்களில் ஒருவனாக நான் இருக்கும் பட்சத்தில் என்னையும் விளிப்பதாக இருப்பதால் நான் இப்பாடலை காது கொடுத்து கேட்க வேண்டியுள்ளது. "உண்மைதானே சொல்லுங்கள்?" என்று நம்மையும் இழுத்துப் பிடித்து கேள்வி கேட்பதால் இதற்கு பதில் சொல்ல வேண்டிய கடமையும் நமக்கு ஏற்படுகிறது.

பாடலின் அடித்த அடி :

இறைவனை யாருக்குத் தெரியும் - நபி
இரசூல் இல்லை யென்றால்
நபியை யாருக்குப் புரியும் - வல்ல
நாயன் இல்லையென்றால்!
இஸ்லாத்தின் நிறுவனர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்தான் என்னும் தவறான கருத்து மேலை நாட்டவரிடம் குடி கொண்டுள்ளது. எனவேதான் நம்மை "Mohammadans" என்று கூறும் அவர்களிடம் நாங்கள் "முஸ்லீம்கள்" என்று அவர்களுக்கு புரிய வைக்கிறோம். ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட நபிமார்களை இறைவன் இந்த அவனிக்கு அனுப்பி வைத்ததை நாம் அறிகிறோம். இறைவனின் தூதர்கள் அனைவருக்கும் இஸ்லாம்தான் மார்க்கமாக இருந்திருக்கிறது. அத்தனை தூதர்களும் ஓரிறைக் கொள்கையைத்தான் போதித்து வந்திருக்கின்றனர்.
ஆகையால் மேற்கூறிய நாலு வரிகளில் முதல் இரண்டு வரிகள் சற்றும் பொருந்தவில்லை. அடுத்த வரிகள் இப்படியாகத் தொடர்கிறது :

ஆயிரமாயிரம் தூதர்கள் வந்தார்
ஆண்டவனை யார் காட்டிவைத்தார்?
ஓயாதுழைத்த உயர்நபி யன்றோ
ஓரிறைக் கொள்கையை நாட்டிவைத்தார்!
வேதம் கொடுத்தான் இறைவன்! - செயல்
விளக்கம் கொடுத்தார் நபிகள்!

நபி ஆதம் (அலை) அவர்கள் முதற்கொண்டு இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வரை எல்லா நபிமார்களும் ஓரிறைக் கொள்கையைத்தான் வலியுறுத்தினார்கள். அடிப்படைக் கொள்கைகள் எவ்வித மாற்றமும் இல்லாமல், எல்லா நபிமார்களுக்கும் ஒரே மார்க்கமே அருளப்பட்டது. பெருமானார் (ஸல்) அவர்கள் மட்டுமே ஆண்டவனை அடையாளம் காட்டினார்கள் என்பது முற்றிலும் முரண்பாடாக இருக்கிறது.

(முஹம்மதே) ”உமக்கு முன் தூதர்களுக்கு கூறப்பட்டதுவே உமக்கும் கூறப்பட்டுள்ளது.” (திருக்குர்ஆன், 041:043)

அனைத்து இறைத்தூதர்களுக்கும் ஒரே மாதிரியான உபதேசங்களே அருளப்பெற்றது என்று திருக்குர்ஆன் 041:043வது வசனம் கூறுகிறது.

எல்லா இறைத்தூதர்களும் சேர்ந்து இஸ்லாம் என்ற ஒரு வீட்டைக் கட்டி முடித்திருக்கிறார்கள் என்ற அழகிய உதாணத்தை நபிமொழி கூறுகிறது.

இதற்கு விளக்கமாக திருக்குர்ஆனில் பல வசனங்களைப் பார்க்கலாம். குறிப்பாக திருக்குர்ஆன், 022:078வது வசனத்தில் ”உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கமான இம்மார்க்கத்தில்…” என நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கமும் இஸ்லாம் என்றே இறை வசனங்கள் கூறுகிறது.

கவிஞரின் முடிவுரை மீண்டும் முரண்பட்ட கருத்தை முன்வைக்கிறது.

இருட்டில் இருந்தான் இறைவன் - நபி
இங்கே பிறந்திடும் முன்பு!
அறிந்திட வைத்தார் அண்ணல் - அவன்
அற்புதம் தெரிந்தது பின்பு!
காவியம் வடித்தான் இறைவன் - அதன்
கருவாய் அமைந்தார் நபிகள்!

நபிகள் நாயகத்தை உயர்த்திப் பாடவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் கலைமாமணி அவர்கள் ஒளிபொருந்திய அந்த மூலவனை இருட்டில் அடைத்து விட்டாரோ?

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP